கடந்த 25.01.2019 அன்று சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் சார்பில் தம்மாமில் மாபெரும் மக்கள் சங்கமம் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 8 மணி வரை பல்வேறு நிகழ்வுகளை கொண்டதாகவும் மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் இருந்ததாக கலந்து கொண்ட மக்கள் பாராட்டினர்.
தீரர் திப்பு சுல்தான் வளாகத்தில் காலையில் ஆரம்பித்த துவக்க நிகழ்ச்சியை அதிரை சலீம் இறைமறை வாசித்து ஆரம்பித்து வைத்தார்,சகோதரர் அப்சர் ஹுசைன் வரவேற்று பேசினார், இந்தியன் சோஷியல் ஃபோரம் மத்திய கமிட்டி தலைவர் கர்நாடகாவை சேர்ந்த வஸீம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி குழந்தைகளுக்கான குர்ஆன் கிராஅத் போட்டியை துவக்கி வைத்தார்.
இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் சகோதரர் முகம்மது பைசல் அவர்கள் ஷஹீது ஆஷிஃபா அரங்கில் நடைபெற்ற குழந்தைகளுக்கான தகுதி சுற்றில் தேர்வு பெற்ற 10 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கான கிராஅத் போட்டியின் விதிமுறைகளை எடுத்துக்கூறி போட்டியின் இறுதி சுற்றினை துவக்கி வைத்தார்.போட்டிக்கான நடுவர்களாக மௌலவி ஷரீப் பாக்கவி அவர்களும், மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸியும் கலந்து கொண்டனர்.
ஷஹீது கூரியூர் ஜின்னா வளாகத்தில் நடைபெற்ற பகல் ஜும்ஆ பேருரை மற்றும் குத்பாவை ஜுபைல் பகுதியை சேர்ந்த மௌலவி ஷரீப் பாக்கவி நடத்தி வைத்தார்,அதனையடுத்து அறிவு சிந்தனைக்கான சிறப்பு கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.
ஷஹீது உபைதுர் ரஹ்மான் வளாகத்தில் உள்ள கண்காட்சி அரங்கத்தை இந்தியன் சோஷியல் ஃபோரம் மூத்த உறுப்பினர் ஹாஜா முகைதீன் திறந்து வைத்தார். அதையடுத்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்னும் அரசியல் அரங்கினை கிழக்கு மாகாண மத்திய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி துவக்கி வைத்தார்.
அரங்கினுள் மாணவர்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு அறிவியல் மற்றும் சமூக விழிப்புணர்வு கூடிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
சமீபத்தில் தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலின் கோரக்காட்சியையும் அதில் இருந்து எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மக்களை மீட்டெடுத்த காட்சியையும் தத்ரூபமாக வடிவமைத்து இருந்தார் நரிப்பையூரைச் சேர்ந்த அண்ணல் முகம்மது அவர்கள்.இவருக்கு சிறந்த ஓவியருக்கான பரிசும் வழங்கப்பட்டது.
பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு பெண்களுக்கான மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு சகோதரி ஆமீனா விளக்கமளித்தார்.
ஷஹீது ஆஷிஃபா அரங்கத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள் தனித் தனியே நடைபெற்றன. ஆண்கள்,பெண்கள் அனைவருக்குமான குழந்தைகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது, ஜித்தாவில் இருந்து வருகை தந்த சகோதரர் பொறியாளர் அல்-அமான் அவர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் விளக்கமளித்தார்.
திருச்சியை சேர்ந்த ஷேக் என்பவரின் குழுவினர் நீதியைத் தேடி….என்னும் விழிப்புணர்வு நாடகத்தினை அரங்கேற்றினர்,தற்போதைய மத்திய பாஜக ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டியது போல் இருந்தன அந்த நாடகம். மாலை 6 மணிக்கு மேல் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள்,பெரியவர்கள் அனைவருக்குமான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தம்மாம் தமிழ் சங்கத்தின் நிர்வாகி அப்துல் சத்தார்,காயல் சமூக நல ஆர்வலர் முகம்மது ரபீக், ஷரீப் மௌலவி,குழந்தை நல சமூக ஆர்வலர் பொறியாளர் அல்-அமான், சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளான இக்பால் மௌலவி,கீழை ஜஹாங்கீர் அரூஸி,முகைதீன், ஃபிரட்டர்னிடி ஃபோரம் நிர்வாகிகளான முகம்மது பைசல்,அப்சர் ஹுசைன்,காயல் அபுபக்கர்,அன்வர் சலீம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
வருடா வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு வருகை தரும் ஹாஜிகளுக்காக சேவையாற்றிடும் இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் சார்பில் கடந்தாண்டு கலந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்த செயற்பாட்டாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தியன் சோஷியல் ஃபோரம் சேவை குறித்தும் தற்போதைய சமூக செயல்பாட்டினை குறித்தும் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் இக்பால் மௌலவி சிறப்புரையாற்றினார்.
இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் பொதுசெயலாளர் அப்சர் ஹுசைன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்திலும் நிறைவிலும் மாணவர் ஃபிரட்டர்னிடி ஃபோரம் சார்பில் சிறார்கள் பாடிய வாழ்த்துப்பா நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது.
அல்ஹஸ்ஸா,ஜுபைல்,சிஹாத்,அல்கோபார், தம்மாம் பகுதிகளில் இருந்து 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மக்கள் சங்கமம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும், அறிவுக்கு விருந்தாகவும், குழந்தைகளுக்கு சிறந்ததொரு விளையாட்டு பொழுது போக்காகவும் இருந்ததாக அனைவருமே பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி தொகுப்பு: கீழை ஜஹாங்கீர் அரூஸி.
You must be logged in to post a comment.