நெல்லையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் வசூலிக்கும் உத்தரவை ஊரடங்கு முடியும் வரை நீட்டிக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சேரை மற்றும் அம்பை தாலுகா பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நுண் நிதி நிறுவனங்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழுக்களில் ஆகஸ்ட் 31 வரை கடன் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவை ஊரடங்கு முடியும் காலம் (2021) வரை நீட்டிக்க வேண்டும், 2020 மார்ச் முதல் ஊரடங்கு முடியும் வரை உள்ள வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கற்பகம் தலைமையில் சேரை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
சார் ஆட்சியர் இல்லாத காரணத்தால் வட்டாட்சியர் வெற்றி செல்வி நேரடியாக வந்து தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினார். நுண்நிதி பொறுப்பாளர்களை மீண்டும் வரவழைத்து உங்களது கோரிக்கைகள் சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அப்போது அங்கு வந்திருந்த பெண்கள் இந்த போராட்டம் எங்களது வாழ்வா? சாவா? என்பதற்கான போராட்டம். எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால் மாதர் சங்கம் சார்பில் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறினர். இதையடுத்து வட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியதால் போராட்டம் நிறைவுக்கு வந்தது. இதில் ராமர்கனி,ஜாக்குலின், கனகா,மேரி உள்பட 100 பெண்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.