தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 22-01-2024 திங்கள் கிழமையன்று மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தவின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மாறுதல் தொடர்பாக சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 நடைபெற்றதைத் தொடர்ந்து 17-10-2023 முதல் 09-12-2023 வரை தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதி வாரியாக படிவங்கள் பெறப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில், உள்ள (219) சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1,19,691 ஆண் வாக்காளர்களும், 1,26,445, பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 246,145 வாக்காளர்களும், (220) வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1,19,177 ஆண் வாக்காளர்களும், 1,24,826 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,44,009 வாக்காளர்களும் உள்ளனர்.
(221) கடையநல்லூர் தொகுதியில் 1,38,512 ஆண் வாக்காளர்களும், 1,40,914 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 279,438 வாக்காளர்களும், (222) தென்காசி தொகுதியில் 1,43.045 ஆண் வாக்காளர்களும், 149,446 பெண் வாக்காளர்களும், 109 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,92,600 வாக்காளர்களும் உள்ளனர்.
(223) ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 1,26,482 ஆண் வாக்காளர்களும், 1,32,985 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,59,487 வாக்காளர்களும் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 6,46,907 ஆண் வாக்காளர்களும், 6,74,616 வாக்காளர்களும், 156 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 13,21,679 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல்காதர், துணை ஆட்சியர் (பயிற்சி) கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் அணிதா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, வட்டாட்சியர் (தேர்தல்) ஹென்றி பீட்டர், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி ஆகியோருடன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.