தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். கடையநல்லூர் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வைத்து பேசினார். அப்போது மறைந்த முதல்வர் டாக்டர் கலைஞரை போலவே தமிழ்நாடு முதலமைச்சரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என குறிப்பிட்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சமத்துவபுரம் பகுதியில் திமுக மாவட்ட விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மா. செல்லத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயபாலன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆனைகுளம் அப்துல்காதர், யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ், கடையநல்லூர் சேர்மன் மூப்பன் ஹபீப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும் நகர்மன்ற உறுப்பினருமான முருகன் அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும், மாநில விவசாய அணி அமைப்பாளருமான விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திமுக சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சமத்துவபுரத்தில் திமுகவின் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ பொங்கல் கொண்டாடினார். அதன் பின்னர் அங்கே கூடி இருந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றும், மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/01/20240118_181400.jpg?resize=1024%2C458&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/01/20240118_181736.jpg?resize=716%2C508&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/01/20240118_181144.jpg?resize=1024%2C458&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/01/20240118_181713.jpg?resize=720%2C459&ssl=1)
அப்போது மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் பேசியதாவது, சமத்துவபுரம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. சமூக நீதிக்காக அவர் தொடர்ந்து பாடுபட்டு வந்தார். அதுபோல் தமிழக முதலமைச்சரும் அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நிதி நெருக்கடியிலும் கூட தமிழக அரசு வெள்ள நிவாரண உதவியும், மகளிர் உரிமைத் தொகையையும், பொங்கல் பரிசுத்தொகையும் வழங்கி உள்ளது என்றார். அப்போது கூடியிருந்த ஒரு பெண் கை குழந்தையுடன் எழுந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் எனக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றார். அதற்கு உடனடியாக கட்சி நிர்வாகிகள் உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெற்று தருவார்கள் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரிப், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், கடையநல்லூர் நகரச் செயலாளர் அப்பாஸ், யூனியன் சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய செயலாளர் சுரேஷ் உட்பட ஏராளமான மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.