நகர்ப்புறத்தில் இருக்கின்ற முடிதிருத்தும் நிலையங்களுக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும்:-ஈ ஆர் ஈஸ்வரன் கோரிக்கை!
இது சம்பந்தமாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மது பிரியர்களுக்காக டாஸ்மாக் திறந்ததை போல கோடை வெப்பத்தால் சிரமப்படுகின்ற மக்களுக்காக முடிதிருத்தும் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்.
சுயதொழில் செய்து வருகின்ற முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது. அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் மது பிரியர்கள் சிரமப்படுவார்கள் என்ற காரணத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல தான் முடிதிருத்தும் நிலையங்கள் இயங்காததால் கடும் வெப்பம் நிலவும் இந்த கோடை காலத்தில் மக்கள் முடிதிருத்த வழி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். கிராமப்புறத்தில் இருக்கின்ற முடிதிருத்தும் கடைகளை திறக்கலாம் என்ற தளர்வை அரசு அறிவித்திருக்கிறது. கிராமப்புற முடிதிருத்தும் நிலையங்களுக்கும் நகர்ப்புற முடிதிருத்தும் நிலையங்களுக்கும் வேறுபாடு கிடையாது. கிராமப்புறத்திலும் ஒரு சமயத்தில் ஒருவருக்கு தான் முடிதிருத்தும் தொழிலாளி முடி திருத்துகிறார். அதையே தான் நகர்ப்புறத்திலும் செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது நகர்ப்புற நிலையங்களை வித்தியாசமாக பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. கிராமப்புறத்தில் கடைப்பிடிக்கின்ற கட்டுப்பாடுகளை எந்த குறையுமின்றி நகர்ப்புறத்திலும் கடைப்பிடிக்க முடியும். நகர்ப்புற முடிதிருத்தும் தொழிலாளர்களுடைய நலன் கருதியும், நகர்ப்புறத்தில் வாழ்கின்ற மக்களின் நலன் கருதியும் நகர்ப்புற முடிதிருத்தும் நிலையங்களை கட்டுப்பாடுகளோடு திறப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.
You must be logged in to post a comment.