ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா பேரையூர் அருகே கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் -வசந்தி தம்பதியினர். தர்மராஜ் திருப்பூரில் வெல்டிங் பட்டறை ஒன்றில் வெல்டராக பணியாற்றி வருகிறார். வசந்தி பேரையூரில் கடை ஒன்றில் வியாபாரியாக கூலி வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் காவிய ஜனனி கமுதி உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .இவர் மொழி பாட மான தமிழில் 99 ம், மற்ற பாடங்களில் தலா 100மதிப்பெண்கள் பெற்று, 500-க்கு 499 எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
இம்மாவட்டத்தை சேர்ந்த பலரும் பல்வேறு மாவட்டங்களில் படித்து வரும் சூழ்நிலையில் மிகவும் பின் தங்கிய மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக மிகவும் பின் தங்கிய பகுதியான கமுதி பகுதியில் படித்து 499 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் . இது குறித்து மாணவியின் தாய் வசந்தி கூறும்போது . நானும் என் கணவரும் கூலி தொழில் செய்து வருகிறோம் . இந்த நிலையில் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து வருகிறோம். காவியா ஜனனிக்க கலெக்டர் ஆவது லட்சியம் என் பார், அதன் படி 499 மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி, பிளஸ் டூவிலும் அதிக மதிப்பெண் எடுத்து மாவட்டத்திற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்ப்பார் என நம்புவதாக, தெரிவித்தார் .
மாணவி காவியா ஜனனி கூறும்போது. எனக்கு சிறு வயது முதல் பெற்றோர் மிகவும் ஊக்கத்துடன் படிக்க வைத்தனர். குடும்பத்தின் சூழ்நிலை கருதி கடுமையாக படித்து வந்தேன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி , அதிக மதிப்பெண் எடுப்பதற்கு பயிற்சி அளித்தனர். இந்த நிலையில் மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு கலெக்டர் ஆவது லட்சியமாகும். அதற்கு ஏற்ற பாடப்பிரிவு 11 ஆம் 12ம் வகுப்பில் மற்றும் கல்லூரி படிப்பில் தேர்ந்தெடுத்து படித்து நிச்சயம் கலெக்டர் ஆவேன் என்றார்.