இராமநாதபுரம், செப்.14 – இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் கருப்பு நிற பாலித்தின் பையால் நன்கு பேக்கிங் செய்த பண்டல்கள் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை பரவிக் கிடந்தன. கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய அப்பண்டல்கள் பீடி இலைகள் என தெரிய வந்தது. இது அப்பகுதி மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு நள்ளிரவில் கடத்திச் சென்றபோது மர்மப்படகில் இருந்து கடல் கொந்தளிப்பால் நழுவி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Category:
தேசிய செய்திகள்
மாஸ்பவர் நிறமாலை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ரூடால்ஃப் மாஸ்பவர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 14, 2011).
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ரூடால்ஃப் லுட்விக் மாஸ்பவர் (Rudolf Ludwig Mössbauer) ஜனவரி 31, 1929ல் முனிச்சில் பிறந்தார். மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் பயின்றார். அவர் ஹெய்ன்ஸ் மேயர்-லீப்னிட்ஸின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் தனது டிப்ளோம் ஆய்வறிக்கையைத் தயாரித்து 1955ல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஹைடெல்பெர்க்கில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்திற்குச் சென்றார். இந்த நிறுவனம், ஒரு பல்கலைக்கழகத்தின் பகுதியாக இல்லாததால், முனைவர் பட்டம் வழங்க உரிமை இல்லை என்பதால், 1958ல் முனிச்சில் பிஎச்டி தேர்வில் தேர்ச்சி பெற்றபோது அவரது அதிகாரப்பூர்வ ஆய்வுக் ஆலோசகராக இருந்த மேயர்-லீப்னிட்ஸின் அனுசரணையில் மாஸ்பாவர் இருந்தார். தனது பிஎச்டி வேலையில், காமா கதிர்களின் மீளமுடியாத அணுசக்தி ஒளிரும் தன்மையை 191 இரிடியத்தில் கண்டுபிடித்தார்.
1960 ஆம் ஆண்டில் ராபர்ட் பவுண்ட் மற்றும் க்ளென் ரெப்கா ஆகியோர் பூமியின் ஈர்ப்பு விசையில் காமா கதிர்வீச்சின் சிவப்பு மாற்றத்தை நிரூபிக்க இந்த விளைவைப் பயன்படுத்தியபோது அவரது புகழ் பெருமளவில் வளர்ந்தது. இந்த பவுண்ட்-ரெப்கா சோதனை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுவான சார்பியல் கோட்பாட்டின் முதல் சோதனை துல்லிய சோதனைகளில் ஒன்றாகும். இருப்பினும், மாஸ்பாவர் விளைவின் நீண்டகால முக்கியத்துவம், மாஸ்பவர் நிறமாலையில் அதன் பயன்பாடு ஆகும். ராபர்ட் ஹோஃப்ஸ்டாடருடன் சேர்ந்து, மாஸ்பவுருக்கு 1961 இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரிச்சர்ட் ஃபெய்ன்மனின் ஆலோசனையின் பேரில், 1960 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கால்டெக்கிற்கு மாஸ்பாவர் அழைக்கப்பட்டார். அங்கு அவர் ரிசர்ச் ஃபெலோவிலிருந்து சீனியர் ரிசர்ச் ஃபெலோவாக வேகமாக முன்னேறினார். அவர் 1962ன் ஆரம்பத்தில் இயற்பியலின் முழு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டில், அவரது அல்மா மேட்டர், மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (TUM), ஒரு முழு பேராசிரியராக திரும்பிச் செல்ல அவரை சமாதானப்படுத்தியது.
மாஸ்பவர் 1997ல் பேராசிரியர் எமரிட்டஸாக மாறும் வரை இந்த பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். அவர் திரும்புவதற்கான ஒரு நிபந்தனையாக, இயற்பியல் பீடம் ஒரு “துறை” முறையை அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பு, மாஸ்பவுரின் அமெரிக்க அனுபவத்தால் வலுவாக பாதிக்கப்பட்டது. இது ஜெர்மன் பல்கலைக்கழகங்களின் பாரம்பரிய, படிநிலை “ஆசிரிய” முறைக்கு முற்றிலும் மாறுபட்டது. மேலும் இது TUM க்கு ஜெர்மன் இயற்பியலில் ஒரு சிறந்த இடத்தைக் கொடுத்தது. 1972 ஆம் ஆண்டில், புதிதாக கட்டப்பட்ட உயர்-ஃப்ளக்ஸ் ஆராய்ச்சி உலை செயல்பாட்டுக்கு வந்தபோது, இன்ஸ்டிட்யூட் லாவ்-லாங்கேவின் இயக்குநராக ஹெய்ன்ஸ் மேயர்-லீப்னிட்ஸ் வெற்றிபெற ருடால்ப் மாஸ்பாவர் கிரெனோபலுக்குச் சென்றார். 5 வருட கால அவகாசத்திற்குப் பிறகு, மஸ்ஸ்பவர் மியூனிக் திரும்பினார். அங்கு தனது நிறுவன சீர்திருத்தங்களை மிக அதிகமான சட்டத்தால் மாற்றியமைத்தார். தனது தொழில் வாழ்க்கையின் இறுதி வரை, இந்த “திணைக்களத்தின் அழிவு” குறித்து அவர் அடிக்கடி கசப்பை வெளிப்படுத்தினார். இதற்கிடையில், அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் நியூட்ரினோ இயற்பியலுக்கு மாற்றப்பட்டன.
மாஸ்பவர் ஒரு சிறந்த ஆசிரியராக கருதப்பட்டார். நியூட்ரினோ இயற்பியல், நியூட்ரினோ அலைவு, மின்காந்த மற்றும் பலவீனமான தொடர்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஃபோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் வினைத்திறன் உள்ளிட்ட பல படிப்புகளில் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1984 ஆம் ஆண்டில், இயற்பியல் பாடத்தை எடுக்கும் 350 பேருக்கு இளங்கலை விரிவுரைகளை வழங்கினார். அவர் தனது மாணவர்களிடம் கூறினார்: “அதை விளக்குங்கள்! மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை விளக்க முடிகிறது! உங்களுக்கு தேர்வுகள் இருக்கும், அங்கே நீங்கள் அதை விளக்க வேண்டும். இறுதியில், நீங்கள் அவற்றைக் கடந்து செல்கிறீர்கள், உங்கள் டிப்ளோமாவைப் பெறுவீர்கள். நீங்கள் நினைக்கிறீர்கள், அவ்வளவுதான்! – இல்லை, முழு வாழ்க்கையும் ஒரு பரீட்சை, நீங்கள் விண்ணப்பங்களை எழுத வேண்டும். நீங்கள் சகாக்களுடன் விவாதிக்க வேண்டும். எனவே அதை விளக்க கற்றுக்கொள்ளுங்கள்! சக மாணவர் என்ற மற்றொரு மாணவருக்கு விளக்கி இதை நீங்கள் பயிற்றுவிக்கலாம். அவை கிடைக்கவில்லை என்றால், அதை உங்கள் தாய்க்கு – அல்லது உங்கள் பூனைக்கு விளக்குங்கள்!.”
1957 ஆம் ஆண்டில் மீளமுடியாத அணு அதிர்வு ஃப்ளோரசன்ஸைக் கண்டுபிடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். இதற்காக அவருக்கு 1961 இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விளைவு, மாஸ்பவர் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இது மாஸ்பாவர் நிறமாலைக்கு அடிப்படையாகும். மாஸ்பவர் நிறமாலை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ரூடால்ஃப் மாஸ்பவர் செப்டம்பர் 14, 2011ல் தனது 82வது வயதில் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டி காத்து, வளர்த்து வந்த திமுக மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தவர் வல்லம் காமு.கதிரவன். இவர் முன்னாள் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர், முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர், திமுக தலைமை தணிக்கை குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். மேலும் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுகவின் அன்றைய பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் புதிய பூமி என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். அந்தப் படத்தில் கதாநாயகன் எம்ஜிஆரின் பெயர் கதிரவன். அந்த தேர்தலில் கா. மு. கதிரவன் அமோக வெற்றி பெற்றார்.
அதன் பின் 1971 மற்றும் 1976 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அதன் பின் 1989 சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதோடு அன்றைய முதலமைச்சர் கலைஞரால் தமிழக அரசு சட்டப்பேரவை அரசுத் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த வல்லம் கா.மு.கதிரவன் 1995 ல் உடல்நலக் குறைவினால் காலமானார். அதன் பிறகு அவரது துணைவியார் மலிகா கதிரவன் தொடர்ந்து திமுக வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வந்தார். மேலும் அதன்பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தீவிர களப்பணி ஆற்றினார். மேலும் தென்காசி செங்கோட்டை பகுதியில் கலைஞர் தமிழ் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல், கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 17 அன்று வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அரசு தலைமை கொறடா வல்லம் கா.மு கதிரவன் அவர்களின் துணைவியார் மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்னாள் தமிழக அரசு சட்டப் பேரவை தலைமை கொறடா கா.மு கதிரவன் அவர்களின் துணைவியார் மலிகா கதிரவன் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது மலிகா கதிரவன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தோடு 28 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கள் குடும்பத்தை நினைவில் நிறுத்தி எனக்கு பாவேந்தர் விருது வழங்க உத்தரவிட்ட தங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நகர் புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் எம் திவான் ஒலி, தென்காசி சமீர், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு பணி செய்ய போதுமான உபகரணங்கள், கொரோனா ஊக்கத் தொகை, இலவச வீட்டு மனையுடன் தொகுப்பு வீடு, போனஸ், உணவு, இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம், செய்து முறையாக கட்டுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் முறையிடும் போராட்டம் நடத்தினர். தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த முறையிடும் போராட்டம் தென்காசி மாவட்ட ஏஐசிசிடியு தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சங்கர பாண்டியன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிபிஐஎம்எல் தாலுகா செயலாளர் புதியவன் என்ற சுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினார்.
முறையிடும் போராட்டத்தில் கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் செ. மாதவன், மாவட்ட கெளரவத் தலைவர் பி. பேச்சிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் ஜே. சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் வி.கே. பரமேஸ்வரி, விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர்கள் தம்பிதுரை, முத்துசாமி, ராமர் பாண்டியன், விவசாய சங்க தலைவர்கள், சேக்மைதின், சின்ன பாண்டியன், பீடி சங்கத் தலைவர்கள் அய்யம் பெருமாள், முத்துலட்சுமி, கட்டுமான சங்கத் தலைவர்கள் மாரியப்பன், குமார், பலவேசம், தூய்மை பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், செல்வம், துர்காதேவி, தமிழரசி, குட்டி, குத்தாலிங்கம், முருகேஸ்வரி, மாரியம்மாள், சின்னத்தம்பி, வெள்ளத்தாய், பேச்சிமுத்து, சேகர், சின்னசக்கி, பிரியா, காளி, சின்னத்தாய், ஹரிஹரன், ஆறுமுகம், ஆண்டாள், வள்ளி, கலாராணி, சேர்மகனி, மாரிச்செல்வம் உட்பட தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் இருந்து ஆண்கள் மற்றும் சுமார் 400க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி தொழிலாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசி அருகே விபரீதம்… மனைவி கண்டித்ததால், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கணவர்…..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சிவகாசி :விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (26). இவரது மனைவி விஜி (23). இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பேச்சியப்பன் வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தார். கணவர் வேலைக்குச் சென்று சம்பாதிக்காததால், குடும்பத்தை நடத்துவதற்கு விஜி மிகுந்த கஷ்டப்பட்டுள்ளார். இதனால் அவர் பேச்சியப்பனை மது குடிக்கக் கூடாது, ஒழுங்காக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கண்டித்துள்ளார். இதனையடுத்து கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த பேச்சியப்பன் நேற்றிரவு, தனது வீட்டின் அருகேயுள்ள ரேசன் கடை முன்பு, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி மத்திய அமைச்சரிடம் மீனவர் நலக்குழு கோரிக்கை மனு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.13- கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கடல் அட்டை மீதான தடை நீக்கம், இலங்கை கடற்படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா விடம் ஏஐடியுசி மீனவர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் நிர்வாகிகள் குழு டெல்லியில் சந்தித்து முறையிட்டனர்.
அமைச்சரிடம் அளித்த மனு: மன்னார் வளைகுடா பகுதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது. இது 10,500 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. இதில் பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை 560 சதுர கி.மீ. பரப்பை கொண்ட 21 தீவுகள் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக மத்திய அரசு அறிவித்து 1986 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் ஏராளம் காணப்படுகின்றன. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இக்கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் அமைந்தால் மீன் வளம், கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். மீனவர் வாழ்வாதாரம் பேரழிவை சந்திக்கும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்தது நிறுத்தவேண்டும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 100% மானியத்துடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடல் அட்டைகளை பிடிக்க சிறப்பு வலை இல்லாததால், மீன்பிடி வலையில் இயல்பாக சிக்குகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 லட்சம் குஞ்சுகளை பொரிக்கும் தன்மை உடைய கடல் அட்டை அழிந்து வரும் இனமல்ல. கடந்த 22 ஆண்டுகளாக கடல் அட்டை மீதான தடையால் அதனை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. வெளிநாடுகளில் கடல் அட்டைகளை பிடித்தல் முறைப்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனை அடிப்படையாக கொண்டு இந்தியாலும் அனுமதி வழங்க வேண்டும். கடல் அட்டைகளை கடந்த 2001ம் ஆண்டு முதல் பிடிக்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கி, மீனவர் நலன் கருதி கடல் அட்டைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகிகள் செந்தில், அழகுபாண்டி, முகேஷ், மீனவ மகளீர் சங்க நிர்வாகிகள் வடகொரியா, சண்முக கனி, காளியம்மாள், அனிதா சீலி, லட்சுமி நம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திறந்த வெளியில் மனித கழிவுகளை வெளியேற்றினால் ரூ.1 லட்சம் அபராதம்: கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.13- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21 வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக பகுதிகளில் தினமும் சேகரமாகும் மலக்கழிவுகளை சுகாதார முறைப்படி அதற்கென உள்ள பிரத்யேக வாகனங்கள் மூலம் அகற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது. சுகாதார முறையில் நச்சுத்தொட்டி கட்டாமல் திறந்த வெளிகளிலோ நகராட்சிக்கு சொந்தமான கால்வாய்களிலோ மனித கழிவுகளை விடுவது மனித கழிவுகளை மனிதனே அகற்றுலை தடை செய்தல் மற்றும் புனர்வாழ்வு வழங்குதல் சட்டம் 2013 பிரிவு (5)-ன் படி குற்றமாகும். இத்தவறு கண்டறியப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதே நிகழ்வு தொடர்ந்தால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என கீழக்கரை நிர்வாகம் அறிவித்ததுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.13- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரியில் பயிற்சி நடந்தது. அறிவியல் இயக்க மாவட்ட துணை தலைவர் டி.நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம்.தியாகராஜன் துவக்கி வைத்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைப்பாளர் உ.சதக் அப்துல்லா வரவேற்றார். கல்லூரி தாளாளர் தேவ மனோகர மார்ட்டின், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் கு.காந்தி, அழகப்பா அரசு கலை கல்லூரி இயற்பியல் துறை இணை பேராசிரியர் எம் கருணாகரன், சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏ.ஆனந்த், தமிழ்நாடு அறிவியல் இயக்க ராமநாதபுரம் வட்டார தலைவர் சி.குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கட்டுரை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் எம்.சசிகுமார, ராமநாதபுரம் அரசு கலை கல்லூரி கௌரவ விரிவுரையாளர் எஸ்.பாலமுருகன், பட்டதாரி ஆசிரியர் எஸ்.கணேசன், பட்டதாரி ஆசிரியர் சி .ஜெரோம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் வெ. விஜயராம், ஹை. சாகுல் மீரா, இல்லம் தேடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜெ.லியோன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை விழிப்புணர்வு முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.13-
இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் ராமநாதபுரம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. நஜியா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆர்.ராதா வரவேற்றார். சிறுதானியங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் எஸ்.ஆர். சந்திரசேகரன் நோக்கவுரை ஆற்றினார். சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்து
மண்டபம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பி.சாந்தி பேசினார்.
சிறுதானியங்களின் வகைகள், அதன் நன்மைகள், சிறுதானியம் உண்பதால் ஏற்படும் நோய் கட்டுப்பாடு குறித்து முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் எம்.மீரா பேசினார். சிறுதானியங்கள், சுற்றுச் சூழல் தொடர்பான போட்டிகளில் வென்ற மாணாக்கருக்கு பரிசு வழங்கப்பட்டது. இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் டி.ஜெயராஜூ நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமீபத்தில் மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் காலி ரயில் தடம்புரண்டது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை – கோயம்புத்தூர் பயணிகள் ரயில் இன்று இரவு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர் பயணிகளை முழுவதுமாக இறக்கிவிட்டு ரயில் பெட்டிகளுடன் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க சென்றபோது கடைசி பெட்டி திடீரென தடம் புரண்டது. இதனையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டியை கழற்றி விட்டு மற்ற காலி பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி பின்னர் ரயில்வே துறையினர் பெட்டியை யார்ட் பகுதியிலிருந்து ரயில் பெட்டி பராமரிப்பு பகுதிக்கு எடுத்துசென்றனர்.
தொடர்ந்து இந்த ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மதுரையில் சில தினங்களுக்கு முன்பு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது ரயில் பெட்டி திடீரென தடம் புரண்டுள்ளது மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
தற்போது ரயில் பெட்டி தடம் புரண்ட பகுதி என்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியதில் பெண் பலி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துராணி(42).இவர் தன்னுடைய உறவினர்களுடன் உசிலம்பட்டி மண்டபத்தில் நடைபெறும் உறவினர் இல்ல விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார்.கார் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி அருகில் வரும் போது டிரைவர் முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக கார் லாரி மீது மோதியது.இதில் காரில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர்.உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஷேர் ஆட்டோவில்; சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப் பட்டனார்.இதில் தங்கத்தாய்(80) சிகிச்சை பலனின்றி மருத்துவமணையில் உயிரிழந்தார்.இந்துராணி(42) ஒச்சம்மாள்(80) அரவிந்த்(26) பிரகாஷ்(25) ஆகிய 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இது குறித்து உசிலம்பட்டி நகர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து நடைபெற்றது உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசை அய்யனார் கோயில் 263 ஆம் ஆண்டு எருதுகட்டு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், செப்.13- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி மேலவலசை பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோயில் 263 ஆம் ஆண்டு எருது கட்டு விழா இன்று மதியம் தொடங்கி மாலை வரை நடந்தது.
இதில் சேது கால், வெட்டுகுளம், மேலவலசை, ஆர்.எஸ்.மங்கலம், பால்கரை, பொட்டகவயல், சோழனூர், கலையனூர், காஞ்சிரங்குடி, பால்கரை, கொடி குளம், ஆலங்குளம், வாகை வயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 55 காளைகள் கலந்து கொண்டன.
கவுரவத் தலைவர் அமீர், கோயில் டிரஸ்டி கிழவன், கிராம தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் இதய ரஞ்சித், பொருளாளர் மங்கள சாமி, எழுத்தர், சதீஷ் குமார், தண்டல் பால்சாமி, திருச்செல்வம் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். களத்தில் சீறிப்பாய்ந்து போக்கு காட்டிய காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் 12.09.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி நகராட்சியில் நடைபெற்று வரும் தேசிய நகர்ப்புற நல குழுமம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் மலையான் தெருவில் நலமையம் கட்டும் பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.32 இலட்சம் மதிப்பில் நகராட்சி எல்லைக்குட்பட்ட வண்ணான்குளம் மேம்பாட்டு பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.38 இலட்சம் மதிப்பில் TNHB காலனி (L பிளாக்) வார்டு எண் பி. பிளாக் 4, நகரளைவை எண் 37,39,40,41,42ல் பூங்கா அமைத்தல் பணிகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் (நகர்புறம் 2.0) கீழ் ரூ.42.50 இலட்சம் மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா நகரில் உள்ள MCC மையத்தில் பொருள் மீட்பு வசதிகள் (Material Recovery Facilities) மையம் அமைக்கும் பணிகளையும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.21.80 மதிப்பில் நகராட்சி எல்லைக்குட்பட்ட சக்தி நகரில் பூங்கா அமைக்கும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், நகராட்சி ஆணையாளர் S.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் K.S.ஹசீனா, உதவி பொறியாளர் S.ஜெயப்ரியா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி மற்றும் துணைத்தலைவரின் அதிகாரம் பறிப்பு; தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம் சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி மற்றும் துணைத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி முத்து மாரி, துணைத் தலைவர் பட்டுராஜ் ஆகியோரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செங்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.13 – இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ராமநாதபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் (செப்.16) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டை யொட்டி, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம், ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தனியாா் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் செப்.16 ல் நடைபெற உள்ளது.
இம்முகாமில், 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளா்களை தோவு செய்ய உள்ளனா். 8 ஆம் வகுப்பு தேறியோர் முதல் முதுகலை, பொறியியல் பட்டதாரிகள் வரை அனைத்து நிலை கல்வித் தகுதி உடையோர் இம் முகாமில் பங்கேற்று, தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோா் இணைய தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் அல்லது 04567-230 160 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடா்பு கொள்ளலாம். முகாமில் பங்கேற்கும் பணி நாடுநா், தங்களின் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் 3 இடங்களில் அதிநவீன வசதியுடன் தொடங்கப்பட்ட சோதனைசாவடி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
மதுரையில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையிலும்., பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தமிழக காவல்துறை அறிவுறுத்தலின்படி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை புறநகர் பகுதிகளில் அதிக அளவு நடைபெறும் வழிப்பறி., கொலை., கொள்ளை., கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இன்று மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை., விரகனூர் மற்றும் கூத்தியார் குண்டு ஆகிய 3 முக்கிய இடங்களில் அதிக அளவு நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு புதிதாக அமைக்கப்பட்ட இன்று இரவு திறந்து வைத்தார். இந்த மூன்று இடங்களில் 24 மணி நேரம் சோலார் மின் வசதியுடன் 360 டிகிரி சுழலும் அதிநவீன கேமராக்களுடன் மொத்தம் 21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று முதல் கனிகாணிக்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசுகையில்.,_l
முன்பகை காரணமாக பழிக்கு பலியாக நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் அவர்களுடைய நடவடிக்கை குறித்தும் கண்காணித்து அவர்களிடம் ஏற்கனவே வாங்கிய (110-வழக்கு) ஒப்புதல் மூலம் மீண்டும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டால் அவர்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் ஆஜர் படுத்தி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறோம்.
குற்றவாளிகள் உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ இருந்தால் அவளுடன் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உசிலம்பட்டி., நாகமலை புதுக்கோட்டை., ஆஸ்டின் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளின் குறித்து வழக்கு போடாதது ஏன் தொடர்பாக ஆர்டிஓ மற்றும் ஏ டி எஸ் பி குழு நியமித்து எத்தனை வழக்குகள் போட்டு உள்ளார்கள் வழக்கு போடாதது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு போடாத நபர்கள் மீது வழக்கு கண்டிப்பாக பதியப்படும்.
நேரடியாகவே செல்போன் மூலம் கண்காணிப்பு கேமராக்களை பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு எங்கெங்கு கேமராக்கள் பயனில்லாமல் உள்ளதோ அதை உடனடியாக சரி செய்வதற்கான ஏற்பாடுகளும் செல்போன் செயலி மூலம் கண்டறிந்து அவற்றை சரி செய்யப்படும் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமுமுக-மமகவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகமது பஸ்ஸில் தலைமை வகித்தார். தமுமுக நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், நகர பொருளாளர் முகம்மது அலி முன்னிலை வகித்தார். இதில் தமுமுக மாவட்ட பொருளாளர் முகம்மது பாசித் மற்றும் ரியாத் மண்டல செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், விழி அணி மாநில துணை செயலாளர் முகம்மது ரபீக், மமக மாவட்ட துணை செயலாளர் செய்யது மசூது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, சுற்றுச்சூழல் அணி மாவட்ட பொருளாளர் சேகனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முக்கிய ஆலோசனை வழங்கினர். நகர துணை செயலாளர் சம்சுதீன், லத்தீப், ராஜப்பா, நகர மருத்துவ சேவை அணி பாதுஷா மற்றும் வார்டு நிர்வாகி முஜீப், முன்னாள் தமுமுக நகர செயலாளர் அப்துல் ரஹீம், முன்னாள் தமுமுக துணை செயலாளர் சித்திக் மற்றும் நயினா முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடையநல்லூரில் தமுமுக மமக வின் மக்கள் நலபணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான முகாம் வரும் 19ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை சகாய மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், பேரணி நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியர் கோபி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். முகாமில் வட்டார கல்வி அலுவலர் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். புதுப்பித்துத் தரப்படும். தேவைப்படுவோருக்கு உபகரணங்கள் வழங்கப்படும். உதவித் தொகை பெற்று தரப்படும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறலாம்,” என்றார். பேரணி,அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பெருமாள் கோயில் தெரு, ராஜவீதி, சிவன் கோயில் தெரு வழியாக சென்று பள்ளியை அடைந்தது முடிந்தது.பொதுமக்களுக்கு முகாம் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மாணவ, மாணவியர், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்; திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாவட்டத் துணைச் செயலாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேக் தாவுது, ஜேசுராஜன், ஒன்றிய செயலர்கள் ரவிசங்கர், அழகு சுந்தரம், சீனித்துரை, நகர செயலாளர் சாதீர், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரன், சாமிதுரை, அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ் டாக்டர் அன்பரசன் இசக்கி பாண்டியன் பரமசிவன் தங்கராஜ் பாண்டியன், ஜே.கே. ரமேஷ் முத்துராமலிங்கம், சங்கரநாராயணன், நசீம், ஆயிரபதி முத்துவேல், பொன் செல்வன், கோ.மாறன், சரவணன், பரமசிவன், கருப்பண்ணன், சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா, ஷேக் பரித், ராமராஜ், மாரிமுத்து, ஜபருல்லாகான், பாப்பா, கலாநிதி, காசி கிருஷ்ணன், கொடி கோபாலகிருஷ்ணன், கணேசன், இஞ்சி இஸ்மாயில் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் செல்லத்துரை தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஆனைகுளம் அப்துல்காதர், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஒன்றிய துணைச் சேர்மன் ஐவேந்திரன், திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான் மைதீன், ஒன்றிய கவுன்சிலர் பகவதி அப்பன், எஸ் பி கே.டி. குமார், நெடுவயல் கணேசன், முருகானந்தம், நல்லையா பீர் முகமது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீரான் முதலியான் கான், நகரத் துணைச் செயலாளர் காசி உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர் சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மறைந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 102 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவர் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவருடைய சிலைக்கு தனது மகள் மருமகன் மற்றும் தாயாருடன் இணைந்து மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
மதுரை பாரதி யுகேந்திரா நிறுவன தலைவர் நெல்லை பாலு அவர்கள் ஒருங்கிணைப்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.