இராமநாதபுரம், செப்.13- கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கடல் அட்டை மீதான தடை நீக்கம், இலங்கை கடற்படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா விடம் ஏஐடியுசி மீனவர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் நிர்வாகிகள் குழு டெல்லியில் சந்தித்து முறையிட்டனர்.
அமைச்சரிடம் அளித்த மனு: மன்னார் வளைகுடா பகுதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது. இது 10,500 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. இதில் பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை 560 சதுர கி.மீ. பரப்பை கொண்ட 21 தீவுகள் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக மத்திய அரசு அறிவித்து 1986 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் ஏராளம் காணப்படுகின்றன. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இக்கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் அமைந்தால் மீன் வளம், கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். மீனவர் வாழ்வாதாரம் பேரழிவை சந்திக்கும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்தது நிறுத்தவேண்டும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 100% மானியத்துடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கடல் அட்டைகளை பிடிக்க சிறப்பு வலை இல்லாததால், மீன்பிடி வலையில் இயல்பாக சிக்குகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 லட்சம் குஞ்சுகளை பொரிக்கும் தன்மை உடைய கடல் அட்டை அழிந்து வரும் இனமல்ல. கடந்த 22 ஆண்டுகளாக கடல் அட்டை மீதான தடையால் அதனை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. வெளிநாடுகளில் கடல் அட்டைகளை பிடித்தல் முறைப்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனை அடிப்படையாக கொண்டு இந்தியாலும் அனுமதி வழங்க வேண்டும். கடல் அட்டைகளை கடந்த 2001ம் ஆண்டு முதல் பிடிக்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கி, மீனவர் நலன் கருதி கடல் அட்டைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகிகள் செந்தில், அழகுபாண்டி, முகேஷ், மீனவ மகளீர் சங்க நிர்வாகிகள் வடகொரியா, சண்முக கனி, காளியம்மாள், அனிதா சீலி, லட்சுமி நம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.