Home செய்திகள் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த மலிகா கதிரவன்..

தமிழ்நாடு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த மலிகா கதிரவன்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டி காத்து, வளர்த்து வந்த திமுக மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தவர் வல்லம் கா‌மு.கதிரவன். இவர் முன்னாள் ஒருங்கிணைந்த  திருநெல்வேலி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர், முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர், திமுக தலைமை தணிக்கை குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். மேலும் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக  திமுகவின் அன்றைய  பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் புதிய பூமி என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். அந்தப் படத்தில் கதாநாயகன் எம்ஜிஆரின் பெயர் கதிரவன். அந்த தேர்தலில் கா. மு. கதிரவன் அமோக வெற்றி பெற்றார்.

அதன் பின் 1971 மற்றும் 1976 ல் நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அதன் பின் 1989 சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதோடு அன்றைய முதலமைச்சர் கலைஞரால் தமிழக அரசு சட்டப்பேரவை அரசுத் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த  வல்லம் கா‌.மு.கதிரவன் 1995 ல் உடல்நலக் குறைவினால் காலமானார். அதன் பிறகு அவரது துணைவியார் மலிகா கதிரவன் தொடர்ந்து திமுக வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வந்தார். மேலும் அதன்பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தீவிர களப்பணி ஆற்றினார். மேலும் தென்காசி செங்கோட்டை  பகுதியில் கலைஞர் தமிழ் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல், கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 17 அன்று வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அரசு தலைமை கொறடா வல்லம் கா.மு கதிரவன் அவர்களின் துணைவியார் மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்னாள் தமிழக அரசு சட்டப் பேரவை தலைமை கொறடா கா.மு கதிரவன் அவர்களின் துணைவியார் மலிகா கதிரவன் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது மலிகா கதிரவன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தோடு 28 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கள் குடும்பத்தை நினைவில் நிறுத்தி எனக்கு பாவேந்தர் விருது வழங்க உத்தரவிட்ட தங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நகர் புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் எம் திவான் ஒலி, தென்காசி சமீர், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!