இந்துக்களின் முக்கிய விரத நாட்களான தை, ஆடி, மஹாளய (புரட்டாசி) அமாவாசை நாட்களில் தெற்கு காசி என அழைக்கப்படும் உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் ஏராளமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. இன்று (பிப்.11) தை அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு முதல் ஏராளமானோர் ராமேஸ்வரம் குவிந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் தர்ப்பணம் செய்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி
மறைந்த முன்னோரை நினைத்து வழிபட்டனர். இதன்பிறகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்ததால் ராமேஸ்வரம் சுற்று வட்டாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கேமராக்கள் பொருத்தி கூட்ட நெரிசலில் அசம்பாவிதம் நடைபெறாவண்ணம் போலீசார் கண்காணித்தனர். 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சேதுக்கரை, தேவிபட்டினம் ஆகிய கடற்கரைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோரை வழிபட்டனர்.கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் குவிந்ததால் வாகன நெரிசலில் உள்ளூர் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதித்தது.
You must be logged in to post a comment.