கடையம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை..
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி பிரதான சாலையில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அதே சாலையில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார். இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த பணம், செல்போன் மற்றும் பொருட்கள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் கடையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் மனு அளித்தார். கடையம் காவல் நிலைய பயிற்சி துணை ஆய்வாளர் பிரசாத், காவலர் ரமேஷ், தடயவியல் துணை ஆய்வாளர் ராஜேஷ், ஆகியோர் விசாரணை செய்து, கைரேகைகளை ஆய்வு செய்தனர். பூட்டுகள் கடைக்கு பின்பகுதியில் தூக்கி வீசப்பட்டதை கண்டுபிடித்தனர். கைரேகைகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வியாபாரிகளுக்கு மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ள இது போன்ற குற்றச்சம்பவங்களை தடுத்திடவும், குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கத்தலைவர் கட்டி அப்துல் காதர் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவத்தால் முதலியார்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்