இராமநாதபுரம், ஆக.26 – ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது காதாரத்துறை சார்பில் 500 படுக்கை வசதி மருத்துவ சேவை கட்டடங்கள் திறப்பு விழா இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மருத்துவ சேவையை
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவங்கி வைத்தனர். அமைச்சர் சுப்ரமணியன் பேசுகையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.154.84 கோடி மதிப்பில் 500 படுக்கை வசதி மருத்துவ சேவை திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் 10 அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், உயிர் நீத்தார் கூடம், பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி, விபத்து, அவசர சிகிச்சை பிரிவு, ஆர்த்தோ பிரிவு, பொது மருத்துவ பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி எப்கேன், ரத்த வங்கி, முட நீக்கியல் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை கடந்த 2 ஆண்டுகளில் திறம்பட மேம்படுத்தியதற்காக 239 மருத்துவமனைகளுக்கு தேசிய தரச்சான்று விருது மத்திய அரசு வழங்கியுள்ளது. மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு லட்சயா விருது வழங்கியுள்ளது. தமிழகம் 43 விருது பெற்று முதல் இடத்தில் உள்ளது. தரமான சிகிச்சை மூலம் தமிழகத்தில் கர்ப்பிணிகள், சிசு இறப்பு குறைக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் மேகாலயா சுகாதார துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையிலும் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
மொரீஷியஸ் நாடு மருத்துவ சேவையை மேம்படுத்த உலக வங்கியை நாடிய போது மருத்துவ சேவையின் உட்கட்டமைப்புகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது தமிழ்நாடு தான் அங்கு கேட்டு பயன்பெறுங்கள் என அடையாளம் காட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் பொது சுகாதாரம் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு பேசினார். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன். கருமாணிக்கம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத துணை இயக்குநர் செந்தில்குமார் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், மருத்துவ கண்காணிப்பாளர் மலர்வண்ணன், ராமநாதபுரம் நகராட்சி துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகர் மன்ற உறுப்பினர் காயத்ரி முதீஷ்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.