இராமநாதபுரம், அக்.4- இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு சிறப்பு முகாம் மணியக்காரன்வலசை கிராமத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூய்மை பணி, சாலை ஓரங்கள் சீரமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், மரங்கள் வளர்ப்பதன் அவசியம், துணிப்பை பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுதானிய உணவு பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி, ஊட்டச்சத்து கருத்தரங்கு நடந்தது. ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட நாட்டுநலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் துவங்கி வைத்து பேசினார். கண்காட்சியை பார்வையிட்ட பொது மக்களுக்கு சிறுதானியங்களால் தயாரான உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் ஆரோக்கியம் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் விளக்கம் அளித்தனர். பள்ளி நாட்டுநலப் பணி திட்ட அலுவலர் ரஹ்மத்துல்லா, ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் சுமதி, ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.