கட்டுரைகள்
உலக அளவில் சிறுவர்களை தற்கொலை செய்ய தூண்டிய புளூ வேல் என்ற ஆன் லைன் விளையாட்டு இந்தியாவிலும் விபரீதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் புளூ கேம் விளையாட்டு பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை 29 அன்று மும்பை அந்தேரி பகுதியை சார்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். அதே போன்று மேற்கு வங்க மாநிலம் மெக்னாபூரில் 10 ஆம் படிக்கும் மாணவன் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டான். இதே போன்று கேரளாவை சார்ந்த மனோஜ் என்ற 17 வயது மாணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது போன்ற பல அடுகடுக்கான இது போன்ற தற்கொலை சம்பவங்கள் அனைவரிடமும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களுக்கு புளூ வேல் ஆன்லைன் விளையாட்டு தான் காரணம் என்ற செய்தி பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள இந்த ஆன்லைன் விளையாட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவை சார்ந்த பிலிப் புடாகின் என்ற 22 வயது உளவியல் மாணவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பேஸ்புக்,வாட்ஸாப் போன்ற சமூக வலைதளங்களில் மூலம் சிறுவர்களுக்கு அறிமுகமாகும் இந்த விளையாட்டு அவர்களை அடிமையாக்கி வருகிறது. நள்ளிரவில் பேய் படம் பார்க்க சொல்லுவது, கையை பிளேடால் கிழித்துக் கொள்ள சொல்வது, மொட்டை சுவற்றில் மீது ஏறி நின்று பாடல் கேட்க சொல்வது உள்ளிட்ட விபரீத கட்டளைகளை சிறுவர்களுக்கு புளூ வேல் பிறப்பிக்கின்றது. இதனை செய்து முடிக்கும் போட்டியாளர்கள் அவற்றை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இனையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதும் புளூ வேலின் விதியாக உள்ளது. மேலும் கண்ணை மூடிக் கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் படிப்படியாக நிலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் போது இறுதியான சவால் என்ன என எதிர்பார்த்து கொண்டிக்கும் போது அது தற்கொலையை சந்திக்கும் சவாலாக இருக்கும். தற்கொலை செய்ய மறுத்தால் ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்ற பேராபத்தே உண்டாகும். மிக ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பது அப்போது தான் சிறுவர்களுக்கு புரியும். ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் போக்குவரத்தில் அவர்களுக்கு தெரியாமல் கணினி அல்லது மொபைலில் “ட்ரோஜன் வைரஸ் ” அனுப்பிவிட்டு சவாலை சந்திக்க மறுத்தால் அந்தரங்க தகவல்களை கசியவிடுவோம் என மிரட்டுவார்கள். இதற்கு பயந்தே அநேக வாலிப சிறுவர்கள் தற்கொலை க்கு ஆளாகிறார்கள்.
இந்த போட்டியில் விளையாடி இது வரை 200 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.புளூ வேலை உருவாக்கிய பிலிப் புடாகினை கடந்த வருடம் ரஸ்ய போலிசார் கைது செய்த பிறகும் தானாகவே இயங்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் தொழில் நுட்ப நிறுவனங்கள் திணரும் நிலையில் நாள்தோறும் சிறுவர்கள் பலியாகி வருவது பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மனிதர்களின் உதவிக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம் மனிதர்களை அழிக்க துவங்கியிருப்பதன் முதல் கட்டமே இந்த புளூ வேன என தொழில் நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இணைய தள விளையாட்டுகள் பிள்ளைகளை சிந்திக்க விடாதபடி அடிமையாக்கவும்,அநேக கேடான நிலைக்கு கொண்டு போகின்றது என அநேக கட்டுரைகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் மூலமாக நாம் அறிந்ததே!!!
பெறரோர்கள் தங்கள் பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டை கண்காணிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வயதுக்கு மீறிய செல்போன்களை வழங்காமல் இருப்பதன் மூலம் இது போன்ற இணையதள ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வியாபாரமாகி வரும் சிசேரியன் முறை குழந்தை பிரசவம்…விழித்துக் கொள்ளுமா சமுதாயம்..
முன்னோர்கள் காலத்தில் 10க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றெடுத்தவர்கள் கூட மருத்துவமனை பக்கம் செல்லாமல் வீட்டிலேயே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்கள். ஆனால் இன்று அதுவெல்லாம் சரித்திரமாகவும், கதையாகவும் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பிரசவம் என்று எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் 10ல் 8 குழந்தைகள் சிசேரியன் முறையில்தான் பிரசவம் ஆகிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துப் பணி வியாபார மயம் ஆனதும், மக்களிடையே வழிப்புணர்வு குறைந்ததும்தான்.
கடந்த 2014-2015 ஆண்டில் இந்த சிசேரியன் முறையில் பிசவமானவர்களைப் பற்றி நடத்திய ஆய்வு நமக்க பல அதிர்ச்சி தரும் விடைகளைத் தருகிறது. இந்தியாவில் 1993ம் ஆண்டு 2.5 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவம் 2015ம் ஆண்டு 15.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்சமயம் ஆய்வு செய்தால் 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுனர்கள். அதே போல் 2014-2015 ஆய்வுப்படி அரசாங்க மருத்துவமனைகளில் 10 சதவீதம் சிசேரியன் முறையில் பிரசவம் நடக்கிறது என்றும் தனியார் மருத்துவமனைகளில் 31.1 சதவீதம் சிசேரியன் முறையிலேயே பிரசவம் ஆகிறது என்ற அதிர்ச்சி தகவலை இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல் சமீபத்தில் இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 135 பேரில் 107 பேர்களுக்கு சிசேரியன் முறையிலேயே குழந்தை பிரசவிக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.
இன்றைய நவீன காலத்தில் எதையும் சுலபமாக வேகமாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் சிசேரியன் முறைக்கு பல படித்த மக்கள் ஆளாகிறார்கள். அதற்கு ஒரு படி மேலாக இன்னும் சிலரோ மூட பழக்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களை வலியுறுத்தும் சம்பவங்களும் பல இடங்களில் நடக்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனையில் வியாபார பசிக்கு அதிகமாக பலி ஆகுபவர்கள் ஏழை மக்களும் நடுத்தர வாசிகளுமே. பிரசவத்திற்காக செல்பவர்களிடம் குறிப்பிட்ட நேரம் தவறிவிட்டால் மருத்துவமனை பொறுபேற்காது என்று பயத்தை உருவாக்கி சிசேரியன் முறை பிரசவ முறைக்கு சம்மதிக்க வைத்து தனியார் மருத்துவமனைகள் பணம் சம்பாதித்து விடுகிறார்கள்.
ஆனால் 100ல் 95 சதவீத பெண்கள் சுகமாக பிரசவிக்கலாம் என்பதே யதார்த்த உண்மை ஆனால் சரியான விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் இல்லாத காரணத்தினாலேயே அதிகமான மக்கள் சிசேரியன் முறை பிரசவத்துக்கு பலியாகிறார்கள். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் தன்னார்வ அமைப்புகளால் ஆர்கானிக் பேபி (ORGANIC BABY) என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கீழக்கரை போன்ற ஊர்களில் இந்த நவீன காலத்தில் இயற்கை முறையை பின்பற்றி மருத்துமனையை அணுகாமலே சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே கணவனும் மனைவியும் சேர்ந்து சுகப்பிரசவம் பார்த்துள்ளார்கள் என்பதை நாம் கேள்விப்படும் பொழுது நம் கண்கள் ஆச்சரியத்தில் விரிகிறது. அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அனைத்தும் சிசேரியன் முறையில்தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்ற மாயையை நம் ஊரில் உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆனால் அந்த மாயையை உடைக்கம் விதமாக கடந்த ஆண்டு சென்னையில் முதல் குழந்தையை சிசேரியன் மூலம் பிரசவித்த பெண்மணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவமாக பிரசவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. அதை விட இந்த இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை பிறந்து 3வது மாதத்திலேயே கருத்தரித்து 14வது மாதத்தில் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதே போல் கீழக்கரையை சார்ந்த பெண்மணி ஒருவருக்கு சௌதி அரேபியாவில் 4 வது குழந்தையை பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு 16 மணி நேரம் கழித்து சுகப்பிரசவமாக பிரசவிக்க வைத்துள்ளார்கள். ஆனால் நம் ஊரிலோ அனுமதிக்ப்பட்டு சில மணி நேரங்களிலேயே மருத்துவர்கள் ஒரு வகையான பயத்தை உருவாக்கி சிசேரியன் பிரசவம் ஆக்கி விடுவதை நாம் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். அதே போல் 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிசேரியன் மூலம் பிரசவித்தால் உயிருக்கே ஆபத்து என்பதை இன்றளவு பல பேர் அறியாமல் இருப்பது இன்னும் வேதனையான விசயம். ஆனால் இதற்கெல்லாம் விதி விலக்காக இன்றும் சில மனிதநேயமுள்ள மருத்துவமனைகளில் இயன்ற அளவு சுகப்பிரசவத்தில் பிரவிக்க வைக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
விரைவில் “வியாபார மயமாகும் சிசேரியன் பிரசவ முறை” – ஒரு அலசல், கீழை நியூஸ் டி.வி யில்…
இந்த சிசேரிய்ன மூலம் பிறக்கும் குழந்தைகள் அதிக அளவில் சத்து குறைபாடாக உள்ள குழந்தைகளாகவே பிறக்கின்றன. அதே போல் பிரசவிக்கும் பெண்களுக்கும் கர்ப்ப பை நோய்கள், முதுகு வலி, கர்ப்ப பை கேன்சர் போன்ற பல வகையான நோய்களுக்கு ஆளாகி குறைந்த வயதிலேயே வயோதிக நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது மிகவும் வேதனையான விசயம்.
பொதுமக்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டிய தருணம் அனைத்து பெண்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது நம் அனைவருடைய கடமை. இதைக் கருத்தில் கொண்டு கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி ( வெள்ளிக்கிழமை) முகைதீனியா பள்ளி வளாகத்தில் ஆர்கானிக் பேபி எனும் நிகழ்ச்சியை இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண்மணி மூலம் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அசந்து போன அப்பாவி மக்கள், அசராத அரசாங்கம் – மக்களை வதைக்கும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வரமா? சாபமா? கட்டுரையாளர். கீழை இளையவன்
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளுக்கு பல்லாண்டு காலமாக உள் தாள் ஒட்டி ஒட்டியே ஆட்சியை ஓட்டி வந்த அரசாங்கம் கடைசியாக ஸ்மார்ட் கார்டு திட்டம் என்கிற பெயரில் சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் 2009 ஆம் ஆண்டோடு முடிவடைந்து விட்டது. அதில் இருந்து இரண்டு, இரண்டு ஆண்டுகள் வீதம் உள்தாள் ஒட்டப்பட்டுக் கொண்டே வந்தது. ஏறத்தாழ 13 ஆண்டு காலம் மைதாவிலும், சர்க்கரையிலும், மண்ணெண்ணெய்யிலும், பாமாயிலிலும் நனைந்து துவண்டு போன குடும்ப அட்டைகளின் ஆயுள் ஒரு வழியாக முடிக்கப்பட்டு அதன் ஆத்மா சாந்தி அடையாமல் ஸ்மார்ட் கார்டு ரூபத்தில் நம்மை மிரட்டி வருகிறது. முன்னர் ரேஷன் கார்டுகளில் இருந்த குளறுபடிகளை விட தற்போது ஸ்மார்ட் கார்டுகளில் தான் உச்ச கட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உணவு பஞ்சத்தை போக்க வெள்ளையனால் 1939 ஆம் ஆண்டு மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரேஷன் திட்டம், சுதந்திரத்திற்கு பிறகு படிப்படியாக மாநில அரசுகளால் ஏழை மக்களின் பசி தீர்க்க துவங்கப்பட்டு பல மாநிலங்களில் தற்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று சொன்னவுடன், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை கள்ளச்சந்தையில் விற்று கோடி கணக்கில் காசு பார்த்த சில அதிகாரிகளுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ஊழல் பேர்வழிகளுக்கும் பேரிடியாக இருந்தது. திடீரென ஸ்மார்ட் கார்டு திட்டம் வந்தால் எங்கே நம்மால் கள்ளத்தனமாக பணம் சம்பாதிக்க முடியாமல் போய் விடுமோ.? என பயம் அவர்களை தொற்றியது.
இதுவரை லஞ்ச பணத்தில் மிதந்து விட்டு, திடீரென பணம் வராமல் இருந்தால் தங்களால் சமாளிக்க முடியாது என்பதற்காக ஸ்மார்ட் திட்டத்தை வரவிடாமல் முட்டுக்கட்டையாக நின்றனர். அதையெல்லாம் சமாளித்த அசராத அரசாங்கம், கடைசியாக.. உள்தாள் ஒட்டப்பட்ட போது இது 6 மாதம் வரையே இருக்கும். அதன் பிறகு மின்னணு ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று சம்பந்தப்பட்ட துறை வாயிலாக வாக்குறுதி அளித்து அதன் பிரகாரம் நியாயவிலைக் கடைகளில் ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஸ்மார்ட் கார்டுகள் வர ஆரம்பித்து விட்டன. ஆனால் இதுவரை 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.02 கோடி பேருக்கே ஸ்மார்ட் கார்டுகள் கிடைத்துள்ளன.
சென்னையில் மட்டும் சுமார் 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 7 லட்சம் பேருக்கே ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பணி மந்தமாக நடைபெறுவதற்கு காரணம் பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை வெளியிட தயங்கியதே என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதே வேளையில் நியாயவிலைக் கடைகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்பத் தலைவர்களின் புகைப்படங்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் பதிவோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுதாகவும் அவை பொருந்தவில்லை என்றால் நிராகரிக்கப்படுதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு 10 சதவீத புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டு அவற்றை மறு பதிவேற்றம் செய்யுமாறு நியாய விலைக் கடைகள் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஏழை எளிய அப்பாவி மக்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த பதிவேற்றத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விவரம் ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக பொதுமக்கள் கணினி மையங்களை நாடிச் செல்கிறார்கள். ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் டிஜிட்டல் திட்டங்களால் கல்லா கட்டி வரும் நெட் செண்டர்கள் பாமரனின் சுருக்குப் பையையும் பதம் பார்க்க தவறுவதில்லை. ஸ்மார்ட் கார்டில் ஒரு புதிய பெயர் பதிவேற்றம் செய்ய ரூ. 40, தவறாக இருக்கும் பெயர் ஒன்றினை திருத்தம் செய்ய ரூ. 25 என்று பணம் பிடுங்குகின்றனர். பல நேரங்களில் டிஎன்இபிடிஎஸ் வலை தளத்தில் நீண்ட தடங்கல் ஏற்படுகிறது. இதனால் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க நேரிடுகிறது. கைப்பேசி வாயிலாகவே பதிவேற்றம் செய்யலாம் என்றால் அதுவும் முடிவதில்லை. இதன் காரணமாக அரசு அறிவித்தப்படி 2017 ஜூன் மாதத்திற்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு திட்டம் நிறைவேறாமல் மீண்டும் காலவரையின்றி நீள்கிறது. ஆகவே இந்த கெடுவை இன்னும் நீட்டிக்க வேண்டிய அவசியம் தற்போது எற்பட்டு இருக்கிறது.
ஒரே நேரத்தில் இந்த வலைதளம் ஏராளமானோரால் பயன்படுத்தப்படுவதால் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிகிறது. ஏற்கனவே சமாதி நிலையில் இருக்கும் அரசின் இ சேவை மையங்களுக்குச் சென்றாலும் இதே நிலைமை தான். பிரிண்டர் வேலை செய்யவில்லை, இன்டர்நெட் சரியாக கிடைக்கவில்லை, கம்பியூட்டர் பழுதாகியுள்ளது என்று அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே ஸ்மார்ட் கார்டு வழங்குவதை துரிதப்படுத்துவதற்கான பணியை அரசாங்கம் உடனே மேற்கொள்ள வேண்டும் என்பதும் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் இதற்கென சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விரைவில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கிட வேண்டுமென்பதும் அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
இதற்கென கூடுதல் பணியாளர்களை நியமித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க வேண்டும். ஆதார் எண்களை இணைத்த அனைருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டியது அரசின் தலையாய பொறுப்பு. இதை நிறைவேற்றும் வரை எவ்வித தடையுமின்றி அத்தியாவசிய பொருள்களை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். அப்போது தான் பல்லாண்டு காலம் உள் தாள் ஒட்டி ஒட்டியே நம்மோடு வாழ்ந்து மறைந்த ரேஷன் கார்டுகளின் ஆத்மா சாந்தி அடையும். கள்ள சந்தையில் ரேஷன் பொருள்களை விற்று காசு பார்த்த ஊழல் பெருச்சாளிகளின் ஆட்டம் அடங்கும். எதுவுமே துவக்கத்தில் குழப்பமாக தான் இருக்கும். போக போகத் தான் தெளிவு பிறக்கும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சொன்னதை உண்மை என்று நம்பித் தான் ஆக வேண்டியிருக்கிறது இந்த ஜனநாயக நாட்டில்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று நவீன உலகில் உணவுக் கட்டுபாடு என்ற பெயரில் பழங்கள், காய்கறிகள், கோதுமை உணவு என்று சைவம் சார்ந்த உணவுகளே உடல் எடையை குறைக்க உதவும் என்று எண்ணும் வேலையில் “பேலியோ” என்ற வார்த்தை பலருக்கு குழப்பத்தையும், பலருக்கு ஆச்சர்யத்தையும் தந்துள்ளது. அதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல ஆதாரபூர்வமான தளங்களில் இருந்து எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு…
Paleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் நெருப்பு என்றால் என்னவென்று அறியாத, தானியங்கள் மற்றும் இன்றைய முக்கிய உணவாக நாம் உண்ணும் எதையும் உணவென்று கண்டுபிடிக்காத, மனிதன் குகைகளில் வசித்த காலத்தில் மனிதன் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்ந்தானோ அந்த உணவைச் சாப்பிடுவது. உண்மைதான், நமது இன்றைய உணவுகள் எல்லாமே மிக சமீபத்தில் அதாவது சுமார் 10000 ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவை. நெருப்பில் சமைத்து உண்பதிலிருந்து, அரிசி, பருப்பு, பிஸ்ஸா, கோலா, ப்ரோட்டீன் பானம் வரைக்கும் பசியை மூலதனமாக வைத்து ருசியை விற்க ஆரம்பித்து இன்றைக்கு அசால்ட்டாக இன்சுலினை வயிற்றில் குத்திக்கொண்டு டிவியில் கிரிக்கெட் பார்க்கும் அளவிற்கு முன்னேறி (?) இருக்கிறோம்.
மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் இன்றைய உணவுகளில் 99% இல்லை. எனில் அவர்கள் என்ன உண்டு உயிர்வாழ்ந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஏன் அந்தக் கேள்வி எழவேண்டும்? அதனால் நமக்கு என்ன லாபம்?
ஏனென்றால், அவர்கள்தான் நாம் இன்றைக்கு உயிரோடு இருக்கக் காரணமான நமது முன்னோர்கள். அவர்கள் அன்றைக்கு எதையோ சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர்வாழ்ந்திருக்காவிட்டால், மனித இனமே பூண்டோடு அழிந்திருக்கும். இன்றைக்கு இதைப் படிக்க நீங்களோ, எழுத நானோ இருந்திருக்க வாய்ப்பில்லை. காடும், பனியும் நிறைந்த உலகத்தில், நெருப்பு என்றால் கூட என்னவென்று அறியாத மனித சமூகத்திற்கு, ரிலையன்ஸோ, ஸ்பென்ஸர்ஸ் கடைகளோ இல்லை, அவர்களுக்கான உணவை அவர்கள்தான் வேட்டையாடி பச்சையாக உண்டு உயிர்வாழ்ந்தார்கள். சிகப்பு மாமிசம் தவிர்த்து மிஞ்சிப்போனால் சில கிழங்குகளோ, பழங்களோ அவர்களுக்கு உணவாக சீசனில் கிடைத்திருக்கலாம், எவை உண்ணத் தகுந்தவை என்று அவர்கள் குரங்குகளின் மூலம் அறிந்திருக்கலாம், அவ்வளவே. ஆக, அந்தக் காலகட்டத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டு உயிர்வாழ்ந்து மனித இனத்தை அணு ஆயுதம் தயாரிக்கும் வரை வாழவைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், முக்கிய உயிர் வாழும் உணவாக அன்றைக்கு அவர்களுக்குக் கிடைத்தது நல்ல ஆரோக்கியமான சுத்தமான உயர் மாமிசக் கொழுப்பு.
ஆமாம், எதைச் சாப்பிட்டால் மாரடைப்பு வந்து இறந்துவிடுவீர்கள் என்று உங்களுக்கு முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவைக் கூட தூக்கிப் போடச் சொல்கிறார்களோ அதே கொழுப்புதான். ஆச்சரியமாக இருந்தாலும் நமது ஜீன்கள் இப்படித்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. பிற்காலத்திய தானியங்கள் கொழுப்புடன் சேர்ந்து செய்த கொடுமைகளுக்கெல்லாம், கொழுப்பு பழிச்சொல்லை வாங்கிக்கொண்டு படாத பாடு படுகின்றது.
உடல் இயக்கத்திற்கான சக்தி:
உடல் இரண்டு வகையான எனர்ஜி சோர்ஸ்களில் இயங்குகிறது. ஒன்று க்ளுக்கோஸ் மற்றது கொழுப்பு. இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவுவகைகளைப் பட்டியலிட்டால் நாளொன்றுக்கு எவ்வளவு க்ளுக்கோஸ் சார்ந்த உணவுகளை சகட்டுமேனிக்குச் சாப்பிட்டு சைலன்ட்டாக கையைக் காலைக்கூட ஆட்டாமல் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்வு வாழ்கிறோம் என்பது தெரியும். கார்போஹைட்ரேட், பழச்சர்க்கரைகள், வெள்ளைச் சர்க்கரைகள், கோலாக்கள், இனிப்புகள், பேக்கரி ஐட்டங்கள், ஜன்க்புட் எனப்படும் குப்பை உணவுகள் என்று இது பெரிய பட்டியல். மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு. ஆமாம், உடலுக்கு க்ளுக்கோஸ் மூலம் சக்தி கிடைக்கவில்லை என்றால் அது உயிர்வாழ தேர்ந்தெடுக்கும் மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு. இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவில் க்ளுக்கோஸ் அதிகமானால் உடலானது கொழுப்பை பத்திரமான வயிற்றைச் சுற்றி டயராக சேமித்துவிட்டு க்ளுக்கோஸை மட்டும் உடல் இயக்கத்திற்கான சக்தியாக எடுத்துக்கொள்கிறது.
உதாரணம் பார்ப்போம்:
உங்கள் ஒரு நாள் உணவில் 40 கிராம் அல்லது குறைவாக கார்போஹைட்ரேட் உணவுகளும், மற்றவை முழுவதும் கொழுப்பு சார்ந்த உணவுகளுமாக இருப்பின் உடலானது, க்ளுக்கோஸை கைவிட்டு கொழுப்பை தனது முக்கிய எனர்ஜிக்கான சோர்ஸாக எடுத்துக்கொள்ளும். அதே சமயம் 200 கிராம் கார்போஹைட்ரேட்டும் 300 கிராம் கொழுப்பும் இருந்தால், உடலானது க்ளுக்கோஸை மட்டும் எனர்ஜிக்கான சோர்சாக எடுத்துக்கொள்ளும், எனில் அந்த 300 கிராம் கொழுப்பு என்னாகும்?. அழகாக அதை நமது வயிற்றைச் சுற்றி சேமித்து வைக்கும், நாமும் அதற்கு தொப்பை என்று பெயரிட்டு அழைப்போம். உணவு சார்ந்த உடல் பருமனின் முக்கிய காரணி இதுதான். உடல் பருமன் மட்டுமல்ல, அதிகமாக ஆண்டுக்கணக்கில் சாப்பிடும் க்ளுக்கோஸ் மிகை உணவுகளால், இன்சுலின் பிரச்சனைகள் ஏற்பட்டு அதிகப்படியான மக்கள் டயபடிக் என்றழைக்கப்படும் சர்க்கரை நோயாளிகளாகவும் ஆவதற்கான காரணமும் இதுதான்.
எனில் உடல் பருமன் வராமல் தடுக்க, சர்க்கரை நோயாளியாகாமல் இருக்க என்ன ஆரோக்கியமான சாப்பிடுவது?
அதற்கு ஒரே வழி நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உண்டு உயிர் வாழ்ந்து நமது இனத்தையே காப்பாற்றிய உயர் கொழுப்பு உணவுகள்தான். அதைத்தான் பேலியோ டயட் அல்லது கேவ்மென் டயட் என்று அழைக்கிறோம். நெருப்பு கூட கண்டுபிடிக்கமுடியாத, காட்டுமிராண்டி காலத்து உணவை இன்றைக்கு எப்படி உண்பது? ஆமாம், அது உண்மைதான், நாம் வேட்டையாடி, பச்சை மாமிசம் உண்ணமுடியாது. ஆனால் அந்த உணவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு அதன்படி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உண்ணலாம்.
அதாவது உண்மையான உணவுகள்.
அதென்ன உண்மையான உணவுகள்? ருசிக்காக சேர்க்கப்படும் ரசாயணங்கள் கலப்பில்லாத, ஆரோக்கியமான தானியங்கள், கார்ப்போஹைட்ரேட் தவிர்த்த, கொழுப்பு சார்ந்த உணவுகளே உண்மையான உணவுகள்.
இந்த பேலியோ உணவுமுறையின் அதிர்ச்சிகள்:
இங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை.
- அரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி, ஆர்கானிக் அரிசி)
- கோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி, ப்ரெட்)
- மைதா. (கேக்குகள், பரோட்டாக்கள்)
- பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
- பழங்கள் / ஜூஸ்.
- அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)
- தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள், ஹீலர் ஜாங்கிரிகள், கேக், அல்வா, இறைவனே கொண்டு வந்து கொடுக்கும் அமிர்தம்.
- ஓட்ஸ், மேகி, ஹெர்பாலைப், லேகியங்கள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள், மருந்துகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இன்னபிற)
- பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.
- ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்காய், நல்ல, கடலை , கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.
- ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.
- அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
- அனைத்து வகை பருப்புகள், புளி.
- அனைத்துவகை சோயா பொருட்கள்.
- காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ், சிட்டுக்குருவி லேகியங்கள்.
ரைட், இனி இந்த உணவுமுறை பற்றி சில அதிர்ச்சிகரமான உண்மைகள்:
இங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை இல்லை
- கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.
- பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.
- மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
- கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
- அனைத்துவகை கடல் உணவுகள்.
- நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.
- செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
- அனைத்துவகை கீரைகள்.
யெஸ், கொழுப்பு, கொழுப்பு, மேலும் கொழுப்பு:
Paleo Vegetables
தவிர்க்கவேண்டிய மற்றும் உண்ணக்கூடிய பேலியோ காய்கறிகள் எவை எனப்பார்ப்போம்.
உண்ணகூடிய காய்கறிகள்
- காளிபிளவர்
- பிராக்களி
- முட்டைகோஸ் முள்ளங்கி
- பாகற்காய்
- காரட்
- பீட்ரூட்
- தக்காளி
- வெங்காயம்
- வெண்டைக்காய்
- கத்திரிக்காய்
- சுண்டைக்காய்
- வாழைத்தண்டு
- அனைத்துவகைகீரைகள்
- முருங்கை
- ஆஸ்பாரகஸ்
- ஆலிவ்
- செலரி
- வெள்ளரி
- ஸுக்கனி
- காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய்
- பச்சை, சிகப்பு மிளகாய்
- பூசணி
- காளான்
- தேங்காய்
- எலுமிச்சை
- பூண்டு
- இஞ்சி
- பெரிய நெல்லிக்காய்
- அவகோடா எனும் பட்டர் ப்ரூட்
- கொத்தமல்லி
- மஞ்சள்கிழங்கு
- பீர்க்கங்காய் புடலங்காய் சுரைக்காய்
தவிர்க்கவேண்டிய காய்கறிகள்
- மரவள்ளி
- சர்க்கரைவள்ளி
- உருளைகிழங்கு
- பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
- சென்னா
- சுண்டல்
- பருப்புவகைகள் அனைத்தும்
- பயறுவகைகள் அனைத்தும்
- நிலக்கடலை
- சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர் *சோயா எந்தவடிவிலும் ஆகாது*
- அவரைக்காய் பனங்கிழங்கு
- பலாக்காய்
- வாழைக்காய்
- பழங்கள் அனைத்தும்.
பேலியோ டயட்டின் பின்விளைவுகள் என்ன?
முதல் சில நாட்கள் தலைவலி, களைப்பு போன்றவை இருக்கும். நீர் அதிகமாக பருகி வரவும். முதல் சிலநாட்கள் உடல்பயிற்சி வேண்டாம். அதன்பின் மறைந்துவிடும்
பேலியோவில் துவக்கநிலை தவறுகள் எவை?
பட்டினி கிடத்தல்…இது வேண்டாம். வயிறு நிரம்ப சாப்பிடவும் குறைந்த காலரி உண்ணுதல்…இதுவும் வேண்டாம். கொழுப்பை சாப்பிட பயப்டுதல்…..இதுவும் தவறு, முட்டையின் மஞ்சள் கரு, சிகப்பிறைச்சி ஆகியவையே உங்கள் எரிபொருள். இதை பயமின்றி உண்ணவும்
எத்தனை நாளுக்கு ஒருமுறை பிரேக் எடுக்கலாம்?
துவக்கத்தில் மாதம் ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுக்கலாம். அன்றும் குப்பை உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஐஸ்க்ரீம் எலலம் சாப்பிடவேண்டாம். பேலியோவில் 1 மாதம் இருந்து குப்பை உணவை ஒரே ஒரு நாள் உண்டாலும் வயிறு கடுமையான ரியாக்சன் காட்டும். விரும்பினால் அன்று அரிசி, இட்டிலி, பழங்கள் முதலையவற்றை உண்டு சீட் செய்யவும். இனிப்பு, துரித உணவகம், நூடில்ஸ் குப்பைகள் பக்கமே போகவேண்டாம்.
Source: tamilpaleo.wordpress.com & paleogod.BlogSpot.in
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பேணப்பட வேண்டிய மனுக்கள்..
இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்…
சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்…
துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்…
இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய முறையில் பேணுகிறான் என்று சொல்லலாம்…
அவ்வாறு ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்ற திருமண வாழ்வு என்பது சிலருக்கு இன்பம் தரும் தேனிலவு வாழ்க்கை, சிலருக்கு எண்ணாத அளவிற்கு இன்பமாகவும் அமைந்து விடுகின்றது…
இவ்வாறு இன்பங்களை காண்போர் தன் வாழ்க்கையை இனிமையாக கொண்டு சென்று விடுகின்றனர்…
ஆனால் இன்னும் சிலருக்கு திருமணத்தின் ஆரம்பம் இனிமைய, பின்னர் அந்த இனிமையே கசப்பையும், ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையில் சலிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது…
இன்னும் சில தம்பதிகளுக்கு ஆரம்ப கால கட்டமே கூட சந்தோசத்தை கொடுப்பதில்லை…
இவர்களில் சிலர் தங்களுக்குள்ளேயே பேசி நல்ல ஒரு முடிவெடுத்து சமாதானத்தை மேற்கொண்டு தன் வாழ்க்கையை தொடர்ந்து விடுகின்றனர்…
ஆனால் வேறு சிலரோ ஒருவரையொருவர் பிரிந்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விடுகின்றனர்…
அவ்வாறு முடிவெடுத்த பிறகு அவர்கள் விவாகரத்து பெறுவதற்காக மார்க்க அடிப்படையில் ஜமாத்தார்களை அடைகிறார்கள்…
இவ்வாறு விவாகரத்திற்கான கடிதங்களை ஜமாத்திற்கு கொடுத்தனுப்பிய பின் முடிவுக்காக கால எல்லையின்றி தம்பதிகள் காத்திருக்கின்றனர்…
இந்த காத்திருப்பு காலவரையில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது….
வருடங்கள் பல கடந்தாலும் பிரச்சினைகள் மட்டும் கடப்பதில்லை, முடிவுகளும் எட்டுவதில்லை….
இத்தகைய தாமதிப்புகள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறியாதவர்களில்லை…
அவர்கள் சட்டென்று விவாகரத்து கடிதங்களை ஜமாத்திற்கு கொண்டு வந்திடுவதில்லை…
பல மனக்கசப்புகளிடையே எப்படியும் சேர்ந்து வாழ்ந்து விடலாம் என்று தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவருமோ சில காலம் கண்டிப்பாக போராடி இருப்பார்கள்…
அதற்கான தீர்வு கிடைத்து விடவில்லை எனும் போது தங்கள் குடும்பத்தார்களிடம் தெரிவித்திருப்பார்கள்…
அவர்கள் பல முறை பேசி பேசி, தம்பதியர்களுக்கு பிடிக்கவில்லை எனும் போதும் கூட, குடும்பத்தின் மானம் போய்விடுமே என்று சேர்த்து சேர்த்து விட்டிருப்பார்கள்…
ஆக பல முயற்சிகளின் தோல்வியின் முடிவே, ஜமாத்தை நாடி வருவது…
பல மாத அவஸ்தைகளையோ, அல்லது பல வருட அவஸ்தைகளையோ கடந்து ஜமாத்தை நாடுவது தீர்வுக்காக, ஆனால் முடிவெடுப்பதின் தாமதம், விவாகரத்தை நாடி வந்தவர்கள் மென் மேலும் மேலும் நொந்து போகிறார்கள்…
தாமத்தினால் ஏற்படும் மனப் புலம்பல்கள், கேட்பவர்களின் எண்ணத்தையும் உருக்கி அவர்கள் மீது இரக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது…
தீர்ப்பு கிடைப்பதில் உண்டாகும் தாமதம், அவர்களின் வாழ்க்கை துணையை ஏற்படுத்திய பெற்றோர்கள் மீது கோபக் கணையாக மாறிவிடுகிறது…
தீர்ப்பின் தாமதம், மனம் புரளவும் காரணமாகிவிடுகிறது….அதை எங்கள் மனம் படபடக்கிறது…
தீர்ப்முன் தாமதம் இளமையையும் சேர்த்து புசித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது …
இது போன்ற நிகழ்வுகளெல்லாம் நிகழ்ந்து விடாமல் நிச்சயம் உங்களால் தடுத்திட இயலும்…
இறைத்தூதரின் வாழ்க்கை நம் வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களுக்கும் முன்மாதிரி என்று பிரசங்கம் செய்யும் உங்களுக்கு நபியவர்களிடம் இதிலிருக்கும் முன்மாதிரி மறந்துவிட்டதா…
இது போன்ற பிரச்சினைகள் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொழுதெல்லாம் இவ்வாறு தான் கால தாமதப்படுத்தினார்களா…
நபியவர்களிடம் இது போன்ற விவாகரத்து பிரச்சினைகள் கொண்டு வரப்படும் பொழுது சமாதானம் செய்து வைக்க முற்பட்டு, தம்பதிகள் சமாதானத்திற்கு ஒத்துவரவில்லையானால், கையோடு தலாக் செய்து அனுப்பி வைத்து விடுவார்களே…
இதிலெல்லாம் உங்களுக்கு முன்மாதிரி தெரியவில்லையா…
நீங்கள் தலாக் செய்து கொடுத்த பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கோ அல்லது மறுமணம் செய்வதற்கோ காத்திருப்பு காலம் வேறு இதற்கு பிறகு இருக்கிறதே…
தலாக் செய்து வைப்பதையே இவ்வளவு தாமதப்படுத்தினால் அவர்கள் நிலை என்னவாகும்…
அவர்களை பரிதவிப்புக்கு ஆளாக்காதீர்கள்…
அவர்களின் தீரா மனக்கசப்புக்கு ஒரு காலமும் நீங்கள் காரணமாகி விடாதீர்கள்…
தாமத்தினால் ஏற்படும் விபரீதங்களை புரிந்து கொண்டு செயல்படுங்கள்…
கால தாமதமின்றி நீங்கள் செயல்பட வேண்டுமென்பதை புரிய வைப்பதற்கான நோக்கமே இப்பதிவுக்கான காரணம்…
நிச்சயம் இப்பதிவு உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்….
–அபூபக்கர் சித்திக்.…
————————————————————–
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறப்புக் கவிதை-கட்டுரை..
சிந்திக்க சில நிமிடம்…
அதை செயல்படுத்த சில நொடி…
இணைய தளங்களில் ராட்சஷிகளாகவும் அடங்கா பிடாரிகளாகவும் கற்பனை செய்யப்பட்ட ஒரு உறவு தான் மனைவி எனும் உன்னதமான ஒரு உறவு…
இந்த உறவை இந்த இரண்டு குணங்களை கொண்டு மட்டுமே பார்வையிடும் நீங்கள் அவளது மற்ற குணங்களை குறித்து சிந்தித்ததுண்டா….
இவ்வாறு நீங்கள் சிந்திக்காமலும் அவளை அடங்காப்பிடாரி என்று அடிக்கடி சுட்டி காட்டியுமே அவளை உண்மையில் பிடாரிகளாக்கி விட்டீர்கள்..
ஆம்..
உண்மை இது தான்…
கொஞ்சம் யோசித்து பாருங்களேன்..
திருமணமான நாள் முதல் உங்களுக்காக வாழ ஆரம்பித்தவள் அல்லவா அவள்…
உங்களுக்கு, தான் எவ்வாறு இருந்தால் பிடிக்குமென்று கண்டறிந்து தன்னை அணு அணுவாய் மாற்றி கொண்டாளே…
தனக்கென வாழ்வதை மறந்து உங்களுக்கென தன் வாழ்க்கையை மாற்றி அதை ரசித்து மகிழ்வடைந்தாள் அவள்…
சேர்ந்து அமர்ந்து உணவுண்ண வேண்டுமென்று தன் பசி பாராமல் தங்களுக்கென்று காத்து காத்து கிடந்தவள் உங்கள் அன்பு மனைவி…
சபையில் உங்கள் பெயர் தாழ்த்தி பேசப்படும் போது என் கணவன் கண்ணியவான் என்று உங்கள் பெயரை ஓங்க செய்தவள் அவள்…
இரவெல்லாம் தன் தூக்கம் தொலைத்து நள்ளிரவு ஒரு மணியானாலும் உங்கள் வருகைக்காக அன்போடு காத்திருந்தவள் அல்லவா அவள்..
தன் கணவனே தன் எஜமான் என்றெண்ணி அந்நிய உறவுகளின் உரையாடலை நெருங்க கூட அஞ்சினாளே…
தன் நண்பர் கூட்டத்தோடு அவள் இருந்தாலும் தன் கணவன் வீடு வரும் நேரமென்று தோழிகளின் உரையாடலை முறித்து கொண்டு ஓடி வருபவள் அவள்…
ஆனால் நீங்கள் திருமணமான நாள் முதல் அவளுக்காகவே உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தீர்களா…
அல்லது உங்கள் மனைவிகளுக்காக உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு விஷயத்தையாவது மாற்றியது தான் உண்டா…
அவளுக்கு பிடித்தவாறு உங்கள் வாழ்வில் நீங்கள் அமைத்த விஷயங்களை விரல் விட்டாவது உங்களால் எண்ணிட முடியுமா…
தனக்காக காத்திருக்கும் மனைவியின் பசி எண்ணி என்றாவது விரைந்து நீங்கள் வீட்டிற்கு வந்ததுண்டா…
தனது நண்பர்களுடன் இருக்கும் போது உங்களுக்கென காத்திருக்கும் உங்கள் மனைவியின் நினைவு ஒரு நாளும் உங்களுக்கு வந்துவிடுவதில்லையே..
உங்களின் கண்ணியத்தை சபையில் பேணுகின்ற உங்கள் மனைவியை அவள் செய்த சிறிய தவறுக்காகவும் அல்லது அவள் செய்யாத தவறுக்காகவும் சபையில் கண்டித்து அவளை இழிவுக்கு உள்ளாக்குகிறீர்கள்…
உங்கள் குடும்பத்தாருடன் இணைந்து அவளை கேலிப் பொருளாக்குகிறீர்கள்…
இவற்றோடு பல விஷயங்களை எண்ணி பார்க்கும் போது உண்மையில் நீங்கள் அவர்களுக்காக செய்திருக்கும் தியாகங்களை விட அவர்கள் உங்களுக்காக செய்திருக்கும் தியாகங்களே நிச்சயம் அதிகம்…
உண்மையில் அவள் உங்களை நம்பி தன் வாழ்வயே உங்களிடம் ஒப்படைத்த ஒரு உயிர்…
அந்த உயிரை எப்படியெல்லாம் நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும்…
அவள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் சிறிய சிறிய மாற்றங்கள் தான்…
அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் நீங்கள் ஏமாற்றங்களாக அவளுக்கு கொடுக்கின்ற அந்த மோசமான நாட்கள் தான் நாட்கள் செல்ல செல்ல அவளை அடங்கா பிடாரிகளாக மாற்றி விடுகின்றது…
இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் மனைவிகளை ராட்சஷி என்று சித்தரிக்கும் நீங்கள் அதற்கு காரணம் நீங்களே என்று புரிந்து கொண்டீர்களா…
உங்கள் மனைவிகளிடம் அன்பை மட்டும் விதைத்து அவளிடமிருந்து அன்பை எதிர்பாருங்கள்..
ஆனால் அதுவல்லாமல் உங்கள் மனைவிகளை உணவு சமைத்து கொடுக்கின்ற இயந்திரங்களாக ஒரு காலமும் நினைத்து விடாதீர்கள்…
சில நிமிடங்கள் ஆழமாக சிந்தியுங்கள்…
சில நொடிகளில் உங்கள் வாழ்க்கையை அன்பானதாக மாற்றி அமைதிடுங்கள்…
உங்கள் மனைவியரிடத்தில் நீங்கள் சிறந்த பெயர் பெற்றாலே மனிதர்களிலேயே நீங்கள் தான் சிறந்தவர் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவீர்கள்…
இறைவன் நாடினால்…
✍ – உம்மு அஃப்ஸான்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆடி மாதம் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முக்கியமாக ஜவுளி வியாபார நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் ஆடி மாத விளம்பரங்களைத் தொடங்கி விட்டன. 5 சதவீதம் தொடங்கி 50 சதவீதம் வரை தள்ளுபடி விளம்பரங்களை நாம் பல விதமாக ரேடியோ, தொலைக்காட்சி, சமூக வலைதளம், சுவரொட்டி, பிரசுரங்கள் என்று பல முனைகளில் இருந்து பொதுமக்களை திண்டாட வைக்கின்றனர்.
ஒரு காலத்தில் ஆடி மாதம் என்றாலே ராசி இல்லாத மாதம், வியாபாரமே இருக்காது என்ற நிலையை மாற்றி இன்று அதிகமாக வியாபாரம் நடக்கும் மாதமாக மாற்றியுள்ளது இன்றைய நவீன விளம்பர உத்திகள். உதாரணமாகும் இராமநாதபுரத்திலேயே பிரமாண்டமான மஹாராஜா, ஆனந்தம் தொடங்கி சாதாரண கடைகள் வரை ஆடி விளம்பரத்தை தொடங்கி விட்டன.
ஆனால் பல பேர் மனதில் எழும் எண்ணம் வியாபாரிகள் நஷ்டத்திலா வியாபாரம் செய்வார்கள்?? என்பதுதான், நிச்சயமாக இல்லை, ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் சில சதவீதத்தை குறைத்து, வியாபாரம் இல்லாத மாதத்தை லாபகரமாக மாற்றி விடுகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பல மாதங்களில் நடக்க வேண்டிய வியாபாரத்தை ஓரே மாதத்தில் நடத்தி லாபம் சம்பாதித்து விடுகிறார்கள் என்பதுதான் மறைமுகமான உண்மையும் கூட.
ஆனால் இந்த தள்ளுபடியை நாம் எப்படி ஆனந்தமாக்கி கொள்வது??. வியாபாரிகள் எவ்வாறு புத்திசாலித்தனமாக நாளைக்கான வியாபார உத்தியை இன்றே திட்டமிடுகிறார்களோ, அதேபோல் நாமும் நமக்கு சமீபத்திய மாதத்தில் வரக்கூடிய தேவைகளை நாம் இன்றே திட்டமிட்டால் நாமும் லாபம் அடையலாம். உதாரணமாக இஸ்லாமிய சமுதாயத்தினருக்கான ஹஜ் பெருநாளைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் நாம் இந்த ஆடி மாதத்திலேயே திட்டமிட்டால் நிச்சயமாக கணிசமான தொகையை சேமிக்க முடியும், அதுபோல் மற்ற சகோதர்கள் வைபவ காரியங்களுக்கு சாதகமாக கருதும் ஆவணி மாதமும் வர இருக்கிறது, ஆகையினால் நாமும் வியாபாரிகள் போன்று திட்டமிட்டு சிந்திப்போம், ஆடி மாதத்தை நாமும் ஆனந்தமாக்கி கொள்வோம்.
ஆனால் ஜவுளி வியாபரத்தில் மட்டுமே ஆடி தள்ளுபடி வியாபாரம் இருந்த நிலையில் இன்று குடிகாரர்களுக்கும் ஆடி தள்ளுபடி விலையில் போதை தரும் பொருட்களை விற்பது மிகவும் வேதனையான விசயம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் இரவு நேரத்தில் களை கட்டும் கணவாய் மற்றும் இரால் வியாபாரம்.
மீன் பிடி தடை காலம் நிறைவடைந்ததால் கணவாய் மற்றும் இரால் சீசன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் முஸ்லிம் பஜார் பகுதியில் கணவாய் மற்றும் பூச்சி வகையை சார்ந்த இரால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
ஒரு கிலோ கணவாய் மற்றும் இரால் 350 இருந்து 400 வரை விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் இரால் மற்றும் கணவாய் வகைகள் கீழக்கரை பாரதி நகர் கடல் பகுதியில் பிடிக்கப்படுகிறது என்பது குறிப்படத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறப்பக் கட்டுரை
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…..
அந்தோ பரிதாபம்…
சுப்ஹானல்லாஹ்…
எத்தனை எத்தனை உபதேசங்கள்….
எத்தனை எத்தனை எச்சரிக்கைகள்…..
ஆனாலும் மீண்டுமொரு “ரமலான்” விபத்து எனும் போது மனது பதை பதைத்து போகிறது….
வயது 17 தான்….
இது போன்ற பிள்ளைகளை பற்றி சொல்லவேண்டுமானால் இரு விதமாக சொல்லலாம்..
ஒன்று பெற்றோர்கள் பிள்ளைகளை எச்சரிக்காதது..
இரண்டாவது பெற்றோர்கள் எச்சரிக்கின்ற போதும் பிள்ளைகள் உதாசீனப்படுத்துவது…
இரண்டில் ஏதுவாக இருந்தாலும் இரண்டுமே கையிலெடுக்க கூடாத முறைகளல்லவா….
சென்ற வருட விபத்தே இன்னும் நம் மனதை விட்டு நீங்கவில்லை….
ஆனால் அந்த விபத்தை நினைத்து ஏங்கி தவித்த அவர்களின் நண்பர் கூட்டத்திற்கு இவ்வளவு சீக்கிரத்தில் அவர்களின் மனதை விட்டு இந்த விபத்து நீங்கி விட்டதோ….
ஏனென்றால் இன்னும் கூட ராமலானின் நாள்களை எப்படி கழிக்க வேண்டும் என்று அவர்கள் பாடம் கற்கவில்லையே….
இன்னும் கூட இரவு நேரங்களில் விழித்துருந்து விளையாட்டுகளில் ஈடுபடுகின்றார்கள்….
ஒவ்வொரு குட்டி சுவர்களின் மீதும் அமர்ந்து வெட்டு பேச்சுகளில் ஈடுபடுகிறார்கள்….
கைப்பேசிகளில் முழு நேரத்தையும் வீணாக்குகிறார்கள்….
சென்ற வருடம் தன் நண்பனுக்கு ஏற்பட்ட நிலையை மறந்து மீண்டும் இரு சக்கர வாகனங்களில் சுற்றுகிறார்கள்…..
இளைஞர்களே…..
உங்களுக்கு உங்கள் பெற்றோர்களின் மூலமும் மார்க்க அறிஞர்களின் மூலமும் சொல்லப்படுகின்ற உபதேசங்களை தயவு செய்து காதுகளில் வாங்கி செயல்படுத்துங்கள்..
உபதேசம் செய்யாத பெற்றோர்களே….
ராமலானை எப்படி கழிக்க வேண்டுமென்று தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திடுங்கள்….
இது போன்ற விபத்துகள் நம் பார்வைகளுக்கு மட்டும் பரிதாபமாக அமைந்து விடக் கூடாது…
நமது வாழ்க்கைகளுக்கும் நிச்சயமாக ஒரு பாடமாக அமைந்திட வேண்டும்…..
இப்படியே சொல்லி சொல்லி இரண்டாவது ராமலானயும் கடந்து முடிக்கப் போகிறோமே….
இனியும் பாடம் கற்று கொல்லாதவர்களை என்னவென்று சொல்வது…….!!!
இப்பொழுது விபத்தில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்காக இறைவனிடத்தில் கையேந்தி பிரார்த்தியுங்கள்….
கண்ணீர் விட்டு பிரார்த்தித்த அந்த நொடியிலிருந்து இனியாவது பாடங்களை கற்று கொள்ளுங்கள்…..
ஆக்கம். உம்மு அஃப்ஸான்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கிய திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு பணி…
கீழக்கரை நகராட்சி சார்பாக இன்று (21-06-2017) திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு (Solid Waste Managment Awareness) பணிகள் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கியது. இப்பணிகள் இன்று கீழக்கரை அன்பு நகர் பகுதியில் சுமார் 172 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுக்கும் குப்பைகளை கையாள்வது மற்றும் எவ்வகையான குப்பைகளை பிரித்து நகராட்சி வழங்கியுள்ள ப்ளாஸ்டிக் வாளிகளில் போடுவது என்ற செய்முறை விளக்கங்கள் நகராட்சி ஊழியர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவி/தலைவர்களிடம் சுகாதாரம் பேணுவது பற்றிய “முழு சுகாதார தமிழகம்-தூய்மை இந்தியா இயக்கம்” உறுதி மொழி பத்திரமும் நகராட்சி ஊழியர்களால் கையெழுத்துடன் பெறப்பட்டது.
நகராட்சி வெளியிட்ட கவிதை:-
காலை ஆறு மணிக்கு எழுந்து பார்…
சிறிது தூரம் நடந்து பழகு…
உலகம் புதிதாக தோன்றும்..
பறவைகளின் கீச்சொலியைக் கேட்பாய்..
நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீரிய பணியைக் காண்பாய்…
இனி குப்பையை தெருவில் வீசாமல்
குப்பை தொட்டியில் இட நினைப்பாய்…
உன் வீட்டைப் பெருக்கி கால்வாயில் தள்ளுவதை தவிர்க்க எண்ணுவாய் ….
நல்லதை நினைப்பாய் …
வீடு சுத்தமாவதை மட்டும் எண்ணிய நீ ஊர் சுத்தம் பேண நினைப்பாய்…
உனக்கு அறுவறுப்பாக தோன்றிய துப்பரவுப் பணியாளர்கள்சுகாதாரத்தின் தூதர்களாய் காண்பாய்…..
குடிநீர் வழங்க நகராட்சி பணியாளர்களின்
உழைப்பைக் காண்பாய்…
எளிமையாக தோன்றிய நகராட்சியின் பணி இனிமையாகத் தோன்றும்….
டெங்கு கொசு ஒழிப்பு பணியில் உன் வீடு
தேடி வரும் பணியாளரை மதிப்பாய்….
நீ நன்றாக செல்ல சாலை அமைத்து உன் வீட்டு கழிவு நீர் செல்லும் கால்வாய் அமைத்து அதை சுத்தம் செய்யும் பணியாளரை மதிப்பாய்…
நல்லதை நினை நல்லதே நடக்கும்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரமலான் மாதம் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல.. மனித குலத்துக்கே புனித மாதம்..
சிறப்புக் கட்டுரை..
புனிதமிக்க ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாத்தை வாழ்கை நெறியாக கொண்டவர்கள் அனைவருக்கும் கடமையாகும். முஸ்லிம்கள் நோன்பு நோற்பது போல் மாற்று மத சகோதரர்களும் மருத்துவ ரீதியான நன்மைகள் கருதி நோன்பு வைப்பது பரவலாக இப்பொழுது காணப்படுகிறது. நோன்பு வைப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பல அமெரிக்க மருத்துவ ஆய்வுகள் வெளிவந்நுள்ளன.
நோன்பு வைப்பதன் மூலம் மன ரீதியான அமைதியான நன்மைகளை அடைவது போல் மருத்துவ ரீதியாக உடலின் பல உறுப்புகளுக்கு நன்மை அளிக்கிறது, குறிப்பாக மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் வெளியாகியுள்ளது.
நோன்பின் வைப்பதால் கிடைக்கும் பயன்கள்;
முதலாவதாக நம் உடலில் மாதக் கணக்கில் சேர்ந்து இருக்கும் நச்சுப் பொருளை வெளியேற்றுவதற்கு நோன்பு மிகவும் உதவியாக உள்ளது.அவ்வாறு மாதக் கணக்கில் வீட்டில் மட்டுமல்லாது, வெளியில் உண்ணும் உணஙுகளாகிய பிஸ்கட், சாக்லேட், இனிப்பு பண்டங்கள் போன்ற உணவுப் பொருட்கள் மேம்பட்ட கிளைக்கேட் முடிவு பொருட்களாக (Advanced Glycated End Products ) மாறி கொழுப்பாக உடலில் தங்கி விடுகிறது. இது போன்ற (AGE’s) நாளுக்கு சுமார் 15 மணி நேரம் ஒரு மாதம் காலம் முழுவதும் நோன்பு இருப்பதனால் நம் உடலில் தங்கி இருக்கும் கெட்டக் கொழுப்புகள் மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேறுவதாக விஞ்ஞானிகள் அறிக்கையில் குறிப்பிடுகிறார்கள்.
அடுத்ததாக தேவையில்லாத கொழுப்பையும் உடலில் இருந்து வெளியேற நோன்பு மிகவும் உதவியாக உள்ளது. ஏனென்றால் நோன்பு இருக்கும் போது உடலில் கீட்டோசிஸ் முறை ஆரம்பிக்கிறது அதாவது நோன்பு இருப்பவரின் உடலில் இருந்து முதலில் எல்லா சக்கரையும் (Glucose) வெளியாகிறது அதன் பிறகு உடலுக்கு எனர்ஜி தேவைப்படும் போது கொழுப்பு எனர்ஜியாக மாறுவதை தான் கீட்டோசிஸ் என்று சொல்லப்படுகிறது. நம் உடலில் இரத்தம் மட்டுமின்றி பல பாகங்களில் கொழுப்பு உள்ளது குறிப்பாக சிறு நீரகத்தில் உள்ள விசரல் ஃபேட் (Visceral Fat) கீட்டோசிஸ் மூலம் வெளியேற நோன்பு மிகவும் உதவியாக உள்ளது.
மூன்றாவதாக சக்கரை வியாதி உள்ளவர்களின் இரத்ததில் உள்ள சக்கரை அளவை இயற்கையாக குறைக்க உதவியாக உள்ளது.
நான்காவதாக, மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. ஏனென்றால் பிரைன் டிரைவ்டு நீரோடிராபிக் ஃபேக்டர் (Brain Derived Neurotrophic Factor) அதிகமாக சுரப்பதினால் புதிய செல்கள் உருவாகிறது. ஆகையினால் இயற்கையாகவே மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது.
ஐந்தாவதாக, நோன்பின் காரணமாக உடலில் உள்ள கொலஸ்டிராலின் அளவு இயற்கையாக குறைவதனால் இருதயத்துக்கும் நன்மை பயக்கிறது. அதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்க வாதம் வருவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.
ஆறாவதாக, அட்ரினல் சுரபி மூலம் கார்டிசோல் (Cortisol) என்ற ஹார்மொன்கள் அனைவருக்கும் சுரக்கிறது. பொதுவாக ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கும் போது மட்டும் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கிறது அவ்வாறு சுரப்பதனால் தலை வலி, உடல் வலி, வீக்கங்கள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோன்பு இருப்பவர்களுக்கு கார்டிசோல் ஹார்மோன்கள் இயற்கையான முறையில் குறைவாக சுரப்பதாக ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது.
இவ்வாறு பல வகையான நன்மைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நோன்பு வைப்பதன் மூலம் அடைவதால் மதம் கடந்த பிற சமுதாயத்தவரும் இதனை கடைபிடிக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது குர்ஆனில் சொல்லப்படும் அனைத்து விசயங்களும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி மனித குலம் அனைவருக்கும் இறக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விண்ணைத் தொடும் மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம்.. தவிக்கும் பொதுமக்கள்….
கீழக்கரையில் கடந்த சில வருடங்களில் பல மருத்துவமனைகள் ஓவ்வொரு தெருக்களிலும் ஆரம்பம் செய்யப்பட்டு இருப்பதை நாம் காண முடியும். ஆரம்ப காலத்தில் 25ரூபாயில் தொடங்கிய மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம் குறுகிய காலத்தில் கிடுகிடுவென உயர்ந்து தற்பொழுது அடிப்படை ஆலோசனைக் கட்டணம் கீழக்கரையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ரூபாய்.150 ஆக உயர்ந்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தெரு மக்களை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விசயம், கடந்த காலங்களில் ஓவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு விதமாக ஆலோசனைக் கட்டணங்களை பெற்று வந்த நிலையில் திடீரென ஓரே மாதிரியான கட்டணம் உயரத்தி நிர்ணயம் செய்து இருப்பது, யதார்த்தமாக நடந்த செயலா? அல்லது குறிப்பிட்ட சில மருத்துவர்களின் வற்புறுத்தலால் இந்த கட்டண ஏற்றமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழுகிறது. இது போன்ற முறையற்ற ஆலோசனைக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த போவது யார்? எப்படி என்பது எல்லோர் மனதிலும் விடை தெரியாத ஒரு கேள்விக்குறதான்…
ஏன்:-
இதுபோன்ற அவல நிலைக்கு முக்கிய காரணம் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகள் இருந்தும் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனை மீது முழுமையான நம்பிக்கை இல்லாதுதான். இலவச மருத்துவம் என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால், அங்குள்ள சிறப்பு சலுகைகள் மற்றும் சேவைகளப் பெற கடைநிலை ஊழியர் முதல் உயர்நிலை அதிகாரிகள் வரை புரையோடிக் கிடக்கும் கையூட்டு பிரச்சினை. இதை தவிர்க்க தனியார் மருத்துவமனையை நாடினால் பொதுமக்களின் இயலாமையை காசாக்கும் மோசடித்தனம்.
பல அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகள் இருந்தும் பொதுமக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வை அரசு சார்பில் உண்டாக்காமல் இருப்பது. அதன் விளைவு கோடி கணக்கான மக்கள் வரி பணத்தில் வாங்கப்பட்ட இயந்நிரங்கள் முழுமையாக உபயோகப்படுத்தப் படாமல் பொதுமக்களின் வரிப்பணம் விரயம் ஆகும் வேதனையான விசயம். என்று அரசாங்கம் பொது மருத்துவமனை மக்களின் மருத்துவமனை என்ற நம்பிக்கையை உருவாக்குவார்கள்?. அவ்வாறு உருவாகும் பட்சத்தில் பொதுமக்கள் அரசு மருத்துவமனையை நோக்கி வருவார்கள். அந்த நிலை உருவாகும் பொழுது தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மக்களுக்கு சேவை செய்யும் நிலைக்கு வருவார்கள். அப்படி ஒரு பொற்காலம் உருவாகுமா??
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புனித ரமலான் மாதம்.. ஆன்மீகம் கடந்து பொழுதுபோக்கு மாதமாக மாறுகிறதோ??
ரமலான் மாத சிறப்புக் கட்டுரை..
புனித ரமலான் மாதம் நன்மைகள் நிறைந்த சிறப்பான மாதம், பாவமன்னிப்பு பெறும் பாக்கியமிக்க மாதம், மனிதனை சீர்படுத்தும் மகத்தான மாதம், நம் உள்ளங்களை நெறி படுத்தும் உன்னதமான மாதம், இறையச்சத்தை அதிகரிக்கும் வலிமையான மாதம். இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்ட இந்த சீர்மிகு மாதத்தை அலட்சியம் செய்வதோடு அல்லாமல் பொழுதுபோக்கு மிக்க திருவிழா சீசனாக நாம் கடைபிடித்து வருகிறோமோ என்ற அச்சம் சமீப காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ரமலான் மாத கலாச்சார மாற்றம் அவ்வாறு எண்ண தோன்றுகிறது!!
ஓவ்வொரு வருடமும் புனித ரமலான் மாதத்தில் எத்தனை கோர விபத்துகளை நம் கண் முன்னே கண்டாலும், நோன்பு காலங்களில் இரவில் சுற்றுவது ஒரு கட்டாய கடமை என்றே இளைஞர்கள் கருதுகிறார்கள். அதுவும் போட்டி போட்டுக்கொண்டு பைக்கில் படுவேகமாக குர்ஆன் மற்றும் இறைவணக்கத்தில் ஈடுபட வேண்டிய இரவில் காதை பிளக்கும் சத்தத்துடன் கூச்சலிட்டு தெருவில் வலம் வரும் வாலிபர்கள். இதற்கு இளவட்டங்களை குறை கூறிவதை விட அவர்களுக்கு விலையுயர்ந்த வாகனங்களை வாங்கி கொடுத்து தெருவில் தறிக்கெட்டு சுத்த அனுமதிக்கும் பெற்றோர்களைதான் கூற வேண்டும். இது போன்று எந்தக் கட்டுபாடும் இல்லாமல் திரியும் இந்த இளைய தலைமுறையினரை இறைவன் தான் பாதுகாக்க வேண்டும்.
இந்த புனித ரமலான் மாதத்தில் பசியை உணர்ந்து நோன்பு வைக்க வேண்டிய நாம் வேறு எந்த மாதத்திலும் இல்லாதளவு வகை வகையான உணவுகளை படைத்து நாம் மார்க்கம் தடுக்க கூடிய வீண் விரயத்தை இந்த புனித மாதத்தில் ஒரு உணவு திருவிழா போல் தினம், தினம் செய்து வருகிறோம். ஆனால் உலகில் பல பகுதிகளில் பஞ்சத்தாலும், போரினாலும் ஒரு வேளை உணவுக்கும், சஹருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் தவிப்பதை நாம் தினம், தினம் ஊடகங்கள் மூலம் பார்க்கிறோம், இது நமக்கு படிப்பினையாக இருக்க வேண்டாமா??
இறைவழிபாட்டில் அதிகம், அதிகம் செலவு செய்ய வலியுறுத்தப்பட்ட இந்த புனித ரமலான் மாதத்தில், நோன்பு ஆரம்பித்த மறுநாளே பெருநாள் துணி எடுக்க ஜவுளிக்கடைகளில் குவியும் நம் மக்களை செயல்பாட்டை என்னவென்று சொல்வது, அறியாமையா?? அல்லது உலக வாழ்வின் உள்ள அளவில்லா ஈடுபாடா??
நோன்பு மாதத்தின் உண்மையான மகத்துவத்தை நாம் அறிந்தும் அலட்சியத்துடன் வாழ்ந்து வருகிறோம். நமது பிள்ளைகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்காமல் அவர்கள் செய்யும் பாவத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறோம் என்பதை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து நமது வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்கையாக அமைக்க இந்த புனித மாதத்தை பயன்படுத்தி, எந்த நோக்கத்திற்காக இறைவன் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறானோ அந்த நோக்கத்தையும், பலனையும் நாம் முழுமையாக பெற இறைவனை பிரார்த்திப்போம். நம்மைப் படைத்தவன் நமக்கு நல்வாழ்வை அமைத்து தருவான்.
கட்டுரையாளர்:- MMK. இபுராஹிம், தாளாளர், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, கீழக்கரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறப்புக் கட்டுரை..
முன்னுரை:- கீழக்கரை மக்களுக்கும், அதன் சுற்றுவட்டார மக்களுக்கு நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் இரண்டும், தொழுகைக்கு பிறகு அதிகமாக எதிர் நோக்கும் விசயம் மணல் மேடு சங்கமம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, இஸ்லாமியர்கள் முதல் பிற சகோதரர்கள் வரை எந்த பேதமின்றி மூன்று நாட்களுக்கு கூடும் இடம் பெருநாள் மணல் மேடு. ஆனால் முற்காலத்தில் இருந்த நோக்கமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் இன்றைய நவீன உலகில் எவ்வாறு உருமாற்றம் அடைந்துள்ளது என்பதை அழகிய முறையில் அலசி ஆராய்ந்துள்ளது, இந்த வாசகனின் கட்டுரை….
யூகிக்கக்கூடிய வரலாறு:
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கீழக்கரையின் வடக்கு மூலையில் உடற்பிணி போக்கும் மருத்துவராகவோ, அகப்பிணி போக்கும் அறிஞராகவோ இருவர் வாழ்ந்து வந்தவர்கள் பின்னர் மக்களுக்கு உதவி செய்து வழி நடத்தி மக்களின் அபிமானத்திற்கு பாத்திரமானார்கள். அந்த அபிமானமானவர்கள் தான் கொந்த கருணை அப்பா, மரியம் பீவி அம்மாள்.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஈத்பெருநாட்களில் பரஸ்பர வாழ்த்துக்காகவும், மரியாதைக்காகவும் (ஜியாரத்) சந்திக்கச்சென்றவர்கள், அவர்கள் மறைந்த பின்பும், அப்பழக்கம் வழக்கமாக மாறியது என்றே கூறலாம். பின்னர் கூட்டம் கூடியது, அதனால் உண்டானது திண்பண்ட கடைகளும், ராட்டினங்களும். ”ஜியாரத்துடன்” பொழுதுபோக்கு இணைந்தது… நாளடைவில் வழக்கம் மறந்து பொழுதுபோக்கே பிரதானமானது…..
இல்லாதவர்கள் பிழைப்பிற்காக கடை விரித்தார்கள்… இருந்தவர்கள் பொழுதுபோக்கிற்காக கடை விரித்தார்கள். அதை பொறுப்பாளர்கள் வருமானமாக பயண்படுத்தி ”வரி” விதித்தார்கள். ஆனால் “விதி” விதிக்கவில்லை.
இந்த வழக்கம் தொடர்ந்தாலும், 20 வருடங்களுக்கு முன்னர்:-
- போதிய வாகன வசதி கிடையாது,
- போதிய “லைட்” வசதி கிடையாது,
- மொபைல் ஃபோன்கள் கிடையாது, (ஏன் போஸ்ட் ஆபீஸ் தவிர வேறு எங்கும் லேன்ட்லைன் ஃபோனே கிடையாது.)
- இன்றைய தொழில்நுட்பங்களும் அப்போது கிடையாது. ஆகையால் உள்ளூர்வாசிகளுக்கு திருவிழாவாகவே இந்த மணல்மேடு அமைந்தது. ஆகையினால் மணல் மேட்டின் சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்த நேரம் அது உச்சி சாய்ந்தது முதல் சூரிய மறைவு வரை மட்டுமே. (மாலை 3 மணி முதல் 6.30 மணி வரை).
ஆனால் இன்று நிலைமை தலைகீழ்………..
மணல்மேட்டின் கட்டுப்பாடில்லாத நேரம், சூரிய மறைவிற்குப்பிறகு தான் தொடங்குகிறது, இரவு 10 மணிக்கு மேலும் கூட்டம். அதிகமானோர் வெளியூர் வாசிகள், அதுவும் பெண்கள் கூட்டம் அதிகம். இளவட்டங்கள் கைகளில் ஹை டெக் கேமரா மொபல்கள். அச்சுருத்தி சீறிப்பாயும் இரு/மூன்று/நான்கு சக்கர வாகனங்கள். அதிலிருந்த கிளம்பும் வின்னைத் தொடும் காற்றை மாசுப்படுத்தும் புகைப்படலம்.
- திருவிழாவில் வியாபாரம, நடத்த பிரத்யேக அனுமதி பெற கட்டணங்கள்….
- பாதுகாப்பிற்கு வரும் காவல் துறைக்கான செலவினங்கள்…
- கடை வைப்பவர்களிடம் “வரி” வசூல்….
- அதையும் தாண்டி வரியில்லா ”திருட்டு” வியாபாரங்கள்….
- அடுத்தவர்களின் பைகளை பதம் பார்க்கும் ஜேப்படி திருடர்கள்,
- மணல் மேடை மாசு படுத்தும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பேப்பர்கள், துரித உணவு கழிவுகள்….
- இப்படி பல….
மூன்று நாள் முடிந்து நான்காம் நாள் காலை முதல் சமூக ஆர்வலர்களின் “மணல்மேட்டில் சுகாதார சீர்கேடு” என்று கவலை. இந்த வழிமாறிய வழிமுறையை கடந்த 20-25 வருடங்களாக முறைப்படுத்த தெருவின் மீது அக்கறை கொண்டு தெரு சகோதரர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இளைஞர் பட்டாளம் ஒன்று காவல் காத்து இரவு 7 மணி முதல் “பெண்களுக்கு மட்டும்” என்று முயற்சி செய்து பார்த்தது, மாணவர்கள் வைத்து கல்வி பொருட்காட்சி நடத்திப்பார்த்தது, ஆனால் இவை அனைத்தும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய நிர்வாகம் போதிய ஒத்துழைப்பும், அங்கீகாரமும் இல்லாத காரணத்தால் அவர்களும் ஒதுங்கிக்கொண்டனர்.
அன்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஒதுங்கியதின் விளைவு, இன்று ஆண்-பெண் கலப்பிற்கும், ஈவ் டீஸிங்கிற்கும், திருட்டிற்கும், அதிக விலை வியாபரங்களுக்கும், நிர்வாகமே காரணமாகி விட்ட அவல நிலை. ”காலைச்சுற்றிய நல்ல பாம்பாக” கிடக்கும் இந்த பிரச்சனையை பல நிர்வாக கமிட்டி பொறுப்புக்கு வந்து இம்மியளவும் முறைப்படுத்த முடியவில்லை, முடியவில்லை என்பதை விட முயற்சிக்கவில்லை என்றே கூறலாம்.
- வரலாறு பேசப்போகும் இந்த முறைப்படுத்தல் எப்போது நடக்கும்?..
- யார் அந்த நல்ல பெயரை தட்டிச்செல்லப்போகிறார்கள்?..
- தெரு ஜமாத்தா, ஊர் ஜமாத்தா, நகராட்சியா, காவல்துறையா?..
ஊரின் நலனிலும், தெருவைச் சார்ந்தவன் என்ற முறையில் சில பின்வரும் வழிகளில் ஏதேனும் சிலவற்றை செயல்படுத்தும் பட்சத்தில் மணல் மேட்டை அனைவரும் மனம் விரும்பும் மேடாக மாற்றலாம்…….
1. சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் மட்டும் அனுமதி கொடுப்பது.
2. முறைப்படுத்தப்பட்ட நேரமாக மாலை 4 மணி முதல் 7 மணி வரை.
3. நுழைவு கட்டணமாக குறைந்த பட்ச தொகையை நிர்ணயித்தல்.
4. ஒவ்வொரு கடையிலும், ராட்டினத்திலும் கண்டிப்பாக ஒரு பெண் வேலையாள் வைக்க நிர்பந்தித்தல்.
5. மாலை 4 மணி முதல் 7மணி வரை வள்ளல் சீதக்காதி சாலையிலிருந்தும், தைக்கா முனையிலிருந்தும் மணல் மேட்டிற்கு வாகன போக்குவரத்தை தடை செய்தல்.
6. ஏர்வாடி வளைவு ECR சலை வழியாக டெலிஃபோன் எக்ஸ்சேன்ஞ் வரை மட்டுமே வாகனங்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்குதல்.
7. கடைகளுக்கு, ராட்டினங்களுக்கு முறையான கட்டணங்கள் நிர்ணயித்தல்.
8. உள்ளூர் வாசிகள் கடை வைக்க முன்னுரிமை வழங்குதல்..
9. பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைக்க தனி இட வசதி செய்தல்.
10. தெருவைச் சார்ந்த சமூக அமைப்புகளைக் கொண்டே நிகழ்வை கட்டுக்குள் வைக்க காவல் குழுக்கள் அமைத்தல்.
மாற்றம் ஒன்றே மாறாதது!!
இதை எழுத்துக்களில் எளிதாக எழுதிக்காட்டி விட்டேன், ஆனால் இதை செயல்படுத்தி ”களம் காண்பவர்களே வெற்றியாளர்கள்.”
பொறுப்பிள் உள்ள நிர்வாகிகள் இறையருள் நாடி முயற்சி செய்தால் கண்டிப்பாக மாற்றத்தை உண்டாக்கலாம்!!
ஆதங்கத்துடனும், ஏக்கத்துடனும், கீழக்கரையைச் சார்ந்த கீழை நியூஸ் வாசகன்…
(பெயர் குறிப்பிடுவதால் வயதில் சிறியவர்கள் கூறுவதால் மூத்தவர்கள் இதை”கெளரவ” பிரச்சனயாக எடுத்துவிடக்கூடாது என்பதாலும்,நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் போகக்கூடாது என்பதாலும், இதைப்படிக்கும் “உங்கள் மனசாட்சியாக” இருந்து கொள்கிறேன்)
முக்கிய குறிப்பு:-
இந்த நிகழ்வு சம்பந்தமாக ஆதாரப்பூர்வ வரலாறு மற்றும் முறைப்படுத்த மேலதிக விபரங்கள் இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு வரவேற்கிறோம், அதனை தொகுத்து வெளிட ஆவலாய் உள்ளோம்.
இது ஒரு வாசகனின் சமீபத்திய ஆதங்கம்தான், ஆனால் இது சம்பந்தமாக இதனால் ஏற்படும் குழப்பங்கள், கலாச்சார சீரழிவு மற்றும் சுற்றுபுற சூழல் பற்றி சமூக ஆர்வலர்கள் எழுப்பிய ஆதங்க பதிவுகளை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்…
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/blog-post_1798.html?m=0
http://keelaiilayyavan.blogspot.in/2013/10/blog-post_4577.html?m=1
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமீபத்திய மும்பை தீபாலி கொலை வழக்கு – பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணி..
கடந்த வாரம் மும்பையில் தீபாலி என்ற பெண்மணி உடம்பில் பல முறை குத்தப்பட்டு பிணமாக அவருடைய வீட்டிலிருந்து மீட்கபட்டிருக்கிறார். இவர் தயானேஸ்வர் என்ற பிரபல போலிஸ் அதிகாரியின் மனைவியாவார். கொலையுண்டவரின் கணவர் கடந்த புதன் அன்று மாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அழைப்பு மணி அடித்தும் திறக்காததால் மனைவியும் மகனும் சினிமாவுக்கு சென்றிருப்பார்கள் என்று எண்ணி சாயங்காலம் வரை காந்திருந்துள்ளர். பின்னர் அலைபேசியிலும் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் தன்னிடம் இருந்த மாற்று சாவியை வைத்து திறந்து வீட்டின் உள்ளே சென்றுள்ளார். வீட்டின் உள்ளே சென்றவருக்கும் அதிர்ச்சியாக மனைவி கத்தியால் பல முறை குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரனையை தொடங்கியுள்ளனர். விசாரனையில் குற்றவாளியாக 19 வயது சித்தான்ட் என்ற சொந்த மகனே கைது செய்யப்பட்ட பொழுது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் கொலைக்கான காரணத்தை அம்மாணவன் கூறியபொழுது மிகவும் அதிர்ச்சிகரமாகவும் சிந்திக்க கூடியதாகவும் இருந்தது. அவன் கூறியதாவது “என் தாயாருக்கும் தந்தைக்கும் எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும் ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக என் தாய் எப்பொழுமும் என்னை படிக்க சொல்லி நச்சரிப்பதும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எண்ணை துன்புறுத்தியதுமே என்னை கொலை செய்ய தூண்டியது” என்று கூறியது மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. மேலும் கொலை செய்தது மட்டும் அல்லாமல் தாயின் இரத்தத்தால் இவளால் சோர்ந்து விட்டேன் என்னைப் பிடித்த தூக்கிலிடுகங்கள் (TIRED OF HER , CATCH ME AND HANGE ME) என்று இரத்தத்தால் எழுதிவிட்டு சென்றது வெறுப்பின் உச்சக்கட்டத்தை காட்டுகிறது.
இம்மாணவன் பள்ளியில் 92 சதவீதத்திற்கும் மேலாக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறான். ஆனால் அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு பிடித்தமே இல்லாத பொறியியல் படிப்பில் சேர்த்து இருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து முதல் ஆண்டிலே தேர்வில் அவன் தோல்வியும் அடைந்துள்ளான். அதைத் தொடர்ந்து அவனுடைய தாய் ஒவ்வொரு நிமிடமும் படிப்பை பற்றியே நச்சரித்துள்ளாள் அதன் விளைவு தன் தாயையே கொலை செய்யும் அளவுக்கு மனம் சென்றுள்ளது.
இது பற்றி உளவியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள் கொலை செய்வது ஒரு வெறுப்பின் உச்சம் ஆனால் தொப்புள் உறவான பெற்ற தாயை கொலை செய்வது என்பது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விசயமாக உள்ளது, ஆனால் இந்த கொலையில் கோபத்தின் உக்கிரமும், மனநிலையையும் மிகவும் ஆழமாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றார்கள்.
பெற்றோர்களே, ஆசிரியர்களே சிறிது நேரம் சிந்தியுங்கள் பிள்ளைகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் மனம் உள்ளது, அவர்களுக்கென்று ஆசையும் இருக்கும். அவர்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள் மதிப்பெண்கள் மட்டும் பெறுவதற்கு இயந்திரங்கள் அல்ல. எல்லா குழந்தைகளின் எண்ணங்களும் செயல்களும் ஒன்று போல் இருக்காது. அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை அறிந்து அவர்களுக்கு தகுந்த கல்வி முறையை அமைத்து கொடுங்கள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறந்த மேதைகளாக வருவார்கள். நாம் அவர்களை சரியான முறையில் வார்த்தெடுக்கவில்லை என்றால் குழந்தைகளின் வாழ்வு சீரழிவதற்கு நாமே காரணமாகி விடுவோம். குழந்தைகளிடம் உங்களின் ஈகோவை காட்டாதீர்கள் நீங்கள்தான் அவர்களுக்கு முன் உதாரணம் நீங்கள் என்ன அவர்களுக்கு கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொதுத்தேர்வு முடிவுகளும்… பெற்றோர்களின் ஆதங்கமும்..என்று தீரும் பிள்ளைகளை வதைக்கும் இந்த மதிப்பெண் மோகம்..
சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. எந்த ஒரு தேர்வுக்கும் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல் பல மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்றுள்ளார்கள். இன்னும் சில மாணவச் செல்வங்களோ அடுத்த நிலைக்கு செல்வதற்கு குறுகிய கால அவகாசம் எடுத்துள்ளர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் என்பதை விட அடுத்த நிலையை அடைய சீரிய திட்டம் தீட்டக் கூடியவர்கள் என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமான விசயம் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் வாழ்கையில் வெற்றி பெற்றவர்கள் இல்லை, அதே போல் மிக சாதாரண மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எல்லாம் வாழ்கையில் தோல்வி பெற்றவர்களும் கிடையாது. ஆனால் இந்த இரு வகையான மாணவச் செல்வங்களும் வாழ்கையை கையாளும் முறையை வேறு விதங்களில் எடுத்துள்ளார்கள்.
சமீபத்தில் இந்துஸ்தான் பத்திரிக்கை பரிட்சை முடிவுகள் வெளிவரும் நாட்களில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் மனநிலையைப் பற்றி குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் மனோதத்துவ மருத்துவர்கள் கூறுவதாக சொல்லப்பட்டிருந்த இரண்டு விசயம் மிகவும் அதிர்ச்சியைத் தரக் கூடியதாக உள்ளது. முதல் விசயம் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கூட மனதில் கொள்ளாமல் குழந்தைகளை சிறந்த கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்கிறார்கள் என்கிறது. இரண்டாவதாக கூறப்பட்டுள்ள கருத்து மிகவும் வேதனையளிக்க கூடியதாகவும் தீர சிந்திக்க கூடியதாக உள்ளது. அதாவது அதிகபட்சமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமை கொள்வதற்காகவே பிள்ளைகள் மேல் அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள் என்கிறது. இதனுடைய விளைவு பிள்ளைகளுக்கு படிப்பின் மீதே ஒரு வெறுப்பை உண்டாக்கி பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.
இன்று நாம் நடைமுறையிலேயே பிள்ளைகள் பரிட்சை முடிவுகளை கூறியவுடனே கேட்பவர்கள் கேட்கும் உடனடி கேள்வி எத்தனை மதிப்பெண் ? என்பதுதான். சில பெற்றோர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்த பிள்ளைகளின் மனதை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக மறைத்தாலும் சில பேர் அந்த நோக்கத்தை புரியாமல் கூடுதல் மதிப்பெண் எடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் வேதனைக்குரியது. இது மிகைப்படுத்துதல் அல்ல, பரிட்சை முடிவுகள் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்பு மாணவர்கள் டிவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் அவர்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்த காட்சிகளே சாட்சி…
ஒரு மாணவன் தன் சொந்தங்களுக்கு மதிப்பெண் முக்கியமில்லை என்பதை விளக்குவதாக…
மற்றொரு மாணவன் பரிட்சை முடிவுகள் வரும்பொழுது சொந்தங்களின் முகபாவனையை..
இன்னும் சில கீழே…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாட்டு மூத்திரத்தைக் குடிக்க ஆதரிக்கும் மத்திய அரசு… மாட்டிறைச்சிக்கு தடை..
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மூன்று வருடத்தை நிறைவு செய்யும் பரிசாக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக சுற்றுப் புற சூழல் அமைச்சகம் மூலம் பசு, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதித்துள்ளது. இது தனி மனிதனின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாகும். ஒரு மனிதன் தான் எதை உண்ண வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டிய மிக மோசமன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
இந்த சட்டம் மூலம் இந்தியா மக்களாட்சி தத்துவத்தை இழந்து விட்டது என்றே கூறலாம். இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆணிவேரையே ஆட்டிப்பார்த்துள்ளது. தற்பொழுது மத்தியில் ஆட்சி புரிந்து வரும் அரசாங்கம் தினம் தினம், போதிய சத்துணவு இல்லாமல் இறந்து கொண்டிருக்கும் 3000 குழந்தைகளுக்கு சரியான வழிமுறையை உண்டாக்கவில்லை, ஆனால் பல மாநிலங்களில் மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பல கோடி ரூபாய் செலவு செய்து கொண்டிருக்கிறது. இதுதான் இன்றயை அரசாங்கம் மக்கள் மீது காட்டும் அக்கறைக்கு எடுத்துக்காட்டு. ஒரு புறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சியின் மேல் நிலை உறுப்பினர்கள் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொழிலில் கொடிகட்டி பறக்கிறார்கள், அவர்களுக்கு அனைத்து உதவியும் செய்யும் அரசு, அன்றாட உணவு தேவைகளுக்கு உண்ணும் இறைச்சிக்கு தடை போடும் மக்கள் விரோத அரசு.
இந்த மிருகவதைச் சட்டம் மிருகங்களை கொடூரமான முறையில் வதை செய்யும் நோக்கத்திலேயே இந்தியா முழுவதும் ஜம்மு காஷ்மீரை தவிர்த்துக் கொண்டுவந்துள்ளதாக இந்த அரசு கூறுகிறது. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள ஒரு முக்கியமான ஷரத்தான சந்தையில் வாங்கப்படும் இந்த மிருகங்கள் எந்த மதத்தின் பெயராலும் கொல்வதற்கு அனுமதியில்லை என்று கூறுகிறது. இதன் மூலம் சிறுபான்மையினரின் அடிப்படை மத ரீதியான சிந்தனையில் மத்தியில் ஆளும் அரசு அவர்களின் காவி சிந்தனையை திணிக்க முற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இன்று உணவுக்காக விற்கப்படும் மாட்டிறைச்சியை தடை செய்த மத்திய அரசு, காசியில் கங்கை கரையில் அமர்ந்து மனித மாமிசத்தை உண்ணும் அகோரி சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு வருமா?? மத்தியில் ஆளும் அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சிறுபான்மை மக்களை ஒடுக்கும் எண்ணமே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பது தெளிவாகி வருகிறது. பசு வதை தடையை ஏற்கனவே பல மாநிலங்கள் நம் தமிழகத்தையும் சேர்த்து நடைமுறைப்படுத்தி விட்டது, ஆனால் நம் அண்டை மாநிலமான கேரளா, மணிப்பூர், மிஜோரம், திரிப்புரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இன்னும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த அடுக்குமுறையை சிறுபான்மை மக்களும், தலித் இன மக்களும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருப்பார்கள் என்று தவறான எண்ணத்தில் மிதந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால் அவர்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கினால் எத்தனை இரும்புக் திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாலும் அத்திரைகள் தூள் தூளாகி விடும் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது… அதனுடைய வீழ்ச்சியின் காலம் வெகு தொலைவில் இல்லை…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இறைவனின் கொடை இறங்கும் மாதம், சைத்தான்கள் சங்கிலியால் பிணைக்கப்படும் மாதம், மனம் உருகி இறைவனிடம் கையேந்துபவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம். சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் மாதம். இந்த புனித நாம் அடையும் ஒவ்வொரு வருடமும் அனேகருக்கு ஜகாத், ஃபித்ரா, ஸதக்கா, பெருநாள் காசு போன்ற காரியங்களில, ஈடுபடுவதும், அதைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதும் நடக்கும். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறான செயல்பாடுகள் என்பதை எளிதாக விளக்குவதே இந்த சிறு குறிப்பின் நோக்கம்.
ஜகாத்:
கலிமா, தொழுகை, நோன்பு, “ஜகாத்”, ஹஜ் என்ற முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். நாம் கீழே பட்டியலிட்ட வருமான வரம்பில் உள்ளவர்கள் அனைவரும் ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவர்கள். நாம் பெற்றிருக்கும் செல்ஙத்தை தூய்மையடைய செய்கிறது நம் வருமானத்தில் இருந்து வழாங்கும் ஜகாத்.
ஜகாத, ஒரு சந்திர வருடத்தில், தன் தேவைகளுக்குப் போக சேமிப்பிலிருக்கும் செல்வத்திற்கும் (அ), தன் தேவைகளுக்குப் போக மேலதிகமாக இருக்கும் சொத்திலிருந்தும் வரும் வருமானத்திற்கும் (ஆ), தன் வியாபரத்திற்காக கொள்முதல் செய்துவைத்திருக்கும் பொருள் மதிப்பிலிருந்தும் (இ), 85 கிராம் அல்லது அதற்கு மேலாக இருக்கும் தன்தங்கத்திற்கும்(ஈ) உள்ள செல்வத்தில் 2.5% மதிப்பான செல்வத்தை (அ+ஆ+இ+ஈ = A * 2.5 /100) ஜகாத்தை கொடுக்க வேண்டும். ஜகாத் தொகையை இஸ்லாமியருகளுக்கு மட்டுமே வழங்க வலியுறுத்தப்படுகிறது.
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 2:277)
அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜக்காத் கொடுக்க மறுத்த கூட்டத்தினரோடு யுத்தப் பிரகடனம் செய்கின்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜக்காத் விளங்குகிறது. எனவே நாம் ஜக்காத்தை ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி கணக்கிட்டு கொடுத்து வருவது அவசியமாகும்.
ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான், (ஜகாத் என்னும்) தானங்கள், தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)
ஜகாத் தொகையை பிரித்து பிரித்து யாசகம் போல்கொடுக்காமல், ஜகாத் பெறுபவர்கள் விரைவில் ஜகாத்கொடுப்பவர்களாக வேண்டும் என்ற எண்ணத்தோடஒரு பெருமதியான செல்வத்தை ஒரு ஆளுக்கோ, ஒருசிலருக்கோ கொடுத்தல் சிறப்பு. உறவுகள், ஊழியர்கள் என்று நம்மைச் சுற்றி உள்ளவர்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்குவழங்குவதும் சிறப்பு.
ஸதகா:
இயலாத எந்த சமூகத்தவர்க்கும் செய்யும் பொருளாதார மற்றும் எந்த உதவியும் ஸதகா வகையைச்சாரும். அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நாம் செய்யும் அனைத்து உதவிகளும் ஒரு வகையான ஸதக்காதான்.
உதாரணத்திற்காக சில, தொழுகைக்காக எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொருஅடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பதும் ஸதகா, மனைவியரிடம் வீடுகூடுவதும் ஸதகா, இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்துகொள்வதும் ஸதகா, வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றிவிடுவதும் ஸதகா, ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஸதகா.
ஃபித்ரா:
ஃபித்ரா என்பது பெருநாளுக்கு முன்பாக தேவையுடையவர்களை, நாம் கொடுக்கும் ஃபித்ரா மூலம் தேவையற்றவர்களாக மாற்றி, அவர்களையும் மற்றவர்களைப் போல் பெருநாளில் நிறைவுடையர்களாக ஆக்குவதாகும், ஃபித்ராவின் தலையாய நோக்கம்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது.ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கும்.
ஃபித்ராவின் அளவு: ஒரு “ஸாவு” அரிசி அல்லது கோதுமை அல்லதுஅதன் மதிப்பிற்கான பணம். இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு “ஸாவு”என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு ‘ஸாவு’ என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது சிறப்பு.
பெருநாள் காசு:
அன்பின் வெளிப்பாடாக, நாம் விரும்பியவர்ளுக்கு (எந்தசமூகத்தவருக்கும்) கொடுக்கப்படும் ஒரு பரிசு. தாய், தந்தையர் தன் குழந்தைகளுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, சிறார்களுக்கு நம் மகிழ்ச்சியை இதுவும் ஒரு வகையான ஸதக்கா வகையையேச் சாரும்.
நான் நம் கொடைகளை அல்லாஹ்வின் பிரித்தாளஇறைவன் அருள் புரிவானாக!!
கட்டுரையாளர் துபாயில் இருந்து M. ரஸீம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார்.
இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை மனு அளித்துள்ளார். அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சிறு வயது முதலே இந்திய நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. ஆனால் இந்திய ராணுவத்திற்காக நமது பங்களிப்பை ஏதாவது வகையில் வழங்க வேண்டும் என்ற ஆவல் ஆரம்பம் முதல் இருந்தது. இந்திய திருநாட்டிற்காக தனது குடும்பத்தையும் மறந்து நமக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு பயன்பெறும் வகையில் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்.
எனக்கு இதுவரை எந்த உடல்நலக்குறைவும் ஏற்பட்டதில்லை. மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டதில்லை. நல்ல நிலையில் உடலை பராமரித்து கொண்டிருக்கும் எனக்கு இந்த உடலை பயன்பெறும் வகையில் ராணுவத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளேன். நான் இறந்த பின்பு, எனது உடல் உறுப்புகளை இந்திய ராணுவத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வயதான காலத்தில் தனது உடல் உறுப்புகளை இந்திய ராணுவத்திற்காக ஒப்படைக்க முன்வந்தவரின் செயல் அனைவரையும் நெகிழச்செய்தது. நாட்டிற்காக தியாகம் இப்படியும் செய்யலாம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
You must be logged in to post a comment.