திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரம், கமண்டலாபுரம் கிராமங்களில் சுமார் 2000 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சார்ந்தவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் கமண்டல நதியைக் கடந்து சென்றுதான் புதைக்கவோ எரிக்கவோ இயலும் என்ற சூழ்நிலை இன்றளவும் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசித்த சின்னக்குழந்தை ( 71) உடல்நலமின்றி இறந்துபோனார். இவரது சடலத்தை தற்போது இடுப்பளவு தண்ணீரில் மிகுந்த சிரமத்துடன் கமண்டல நதியை கடந்து சுமந்துசெல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. இதற்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமோ என கிராமமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தபோது கழுத்தளவு தண்ணீரில் பிணத்தை கிராமமக்கள் கொண்டு சென்ற காட்சி பல்வேறு தொலைக்காட்சிகளிளும் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி இடுகாட்டு பாதை சரிசெய்ய உடனடியாக உள்ளாட்சித் துறைக்கு உத்தரவிட்டார். அதையடுத்து களத்தில் இறங்கிய படவேடு ஊராட்சி நிர்வாகம் கமண்டலநதியில் பாதை மற்றும் இடுகாடு அமைப்பதற்கு உண்டான இடத்தை அளந்துவிட்டனர். இது நடந்து ஒரு ஆண்டுக்கும் மேலான நிலையில் உள்ளாட்சி துறையினர் சார்பில் இதுவரை எந்த பணிகளும் நிறைவுபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
You must be logged in to post a comment.