விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிக்கு ரத்த தானம் செய்ததில் எச்ஐவி நோய் தொற்று இருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் அந்த ரத்தத்தை தானமாக கொடுத்த வாலிபர் தற்கொலை முயற்சி செய்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 2-ஆவது முறையாக கர்ப்பமானார். இந்நிலையில் ரத்த சோகை இருந்ததால் இவருக்கு சிவகாசியில் இருந்து தானமாக பெறப்பட்ட ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அப்பெண் உடல் நிலை மோசமானதை அடுத்து அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் தானமாக கொடுத்த அந்த வாலிபர் வெளிநாடு செல்வதற்கு மதுரையில் ரத்த பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு எச்ஐவி நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிவகாசி மருத்துவமனை சென்று அந்த ரத்தத்தை தானம் செய்து விட வேண்டாம் என வாலிபர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்னரே அந்த ரத்தம் சாத்தூர் மருத்துவமனை அனுப்பப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. இதனால் கர்ப்பிணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்தவர் இராமநாதபுரத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்தது.
இது குறித்த விசாரணையில் அந்த 19 வயது வாலிபர் கமுதியை சேர்ந்தவர் எனவும் அவர் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தன்னால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டுவிட்டார் என கவலையடைந்த அந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.