பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் அதிரடி!திருமயம் அருகே கள்ளநோட்டு மாற்ற முயன்ற வழக்கில் 6 பேர் கைது: சுமார் 70 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் திருமயம் காவல் சரகம் மூங்கி தான் பட்டி அரசு மதுபான கடையில் கடந்த 16 ந்தேதி மதியம் சுமார் 3 மணி அளவில் கீழதுருவாசகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு 200 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பிராந்தி கேட்டுள்ளார்.
அந்த 200 ரூபாய் நோட்டுகளை அந்த மதுபான கடை மேற்பார்வையாளர் முருகானந்தம் வாங்கி பார்த்தபோது அந்த நோட்டுக்கள் கள்ள நோட்டுக்களாக இருக்குமோ என சந்தேகம் வந்து திருமயம் சென்று சில்லரை வாங்கி வருவதாக கூறிவிட்டு திருமயம் காவல் நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளார்.
இவ்வழக்கை விசாரிக்க பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் மேற்பார்வையில், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், மாரிமுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் காளியப்பன், முருகானந்தம், ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் தனிப்படையினர் கீழதுருவாசகபுரம் ஒழுகப்பட்டியைச்சேர்ந்த சந்தோஷ்குமார், ராமச்சந்திரன்,திருமயத்தைச்சேர்ந்த முஹம்மது இப்ராஹிம், மற்றும் முகமது நசுருதீன் ஆகியவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 49 ஆயிரத்து 900 ரூபாய் கள்ளநோட்டுக்களை கைப்பற்றியும், தொடர் விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சென்று மணிகண்டன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 64 லட்சத்து 91 ஆயிரத்து 540 ரூபாய் கள்ள நோட்டுகளையும், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களையும் கைப்பற்றினர்.
இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு மேற்பட்டவர்களை கைது செய்து சுமார் 70 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மற்றும் ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்கள், கள்ள நோட்டுக்கள் தயார் செய்ய பயன்படுத்திய லேப்டாப், ஸ்கேனர், பிரிண்டர் மற்றும் கட்டிங் மெஷின் போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இந்த கள்ள நோட்டு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கள்ள நோட்டுக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ளதா என்பதனை காவல்துறையினர் தீர விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.