தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேட்டியில், “தேர்தல் முடிவின் போது யார் நிலைத்து நிற்பார்கள், யார் ஊரை விட்டுப் போகிறார்கள், யார் நாட்டை விட்டுப் போகிறார்கள் என்பது தெரிய வரும், நடிகர் கமலஹாசன் நிலையில்லாத புத்தி கொண்டவர். ஏற்கனவே விஸ்வரூபம் பட பிரச்சினையில் நாட்டைவிட்டு வெளியேறப் போவதாக கூறியவர் கமலஹாசன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியால் அந்த திரைப்படம் வெளியானது.
ஒரு திரைப்படம் வெளியாகும்போது பல்வேறு பிரச்னைகள் வரும், அதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் நாட்டை விட்டு வெளியேற போவதாக கூறியவர் கமலஹாசன். திராவிட இயக்கங்கள் பற்றி கூறுவதற்கு கமலஹாசனுக்கு அருகதை கிடையாது, திராவிட இயக்கத்தின் வரலாறு பாரம்பரியத்தை அறியாதவர்.
50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியில் முப்பதாண்டுகள் அதிமுக ஆட்சி புரிந்து இருக்கிறது, இது என்றைக்குமே வரலாற்றில் நிலைத்து நீடித்து நிற்கும். இதில் கமல்ஹாசன் போன்றோருக்கு எவ்வித ஐயப்பாடும் தேவையில்லை. தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து ஒரு உடன்பாட்டுக்கு வந்தாலே புதிய படங்கள் இணையதளங்களில் வெளியியாவது தடுக்கப்படும்.
ஏனெனில் ஏதாவது ஒரு திரையரங்கில்தான் திருட்டு விசிடி, மற்றும் இனைய தளத்தில் பதிவேற்ற திருட்டுத்தனமாக படமாக்க முடியும். தமிழக அரசு என்ன சட்டம் இயற்றினாலும் அந்த துறையில் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து, செயல்பட்டால் ஒரே நாளில் புதிய படங்கள் இணையங்களில் வெளியாவதை கட்டுபடுத்தப்பட்டு விடும்,விரைவில் முற்றிலுமாக தடுக்கப்படும்.
பூவை காதில் அல்லது தலையில் வைத்தாலும் பூவிற்கும் மணம் உண்டு, எனவே இது மணமுள்ள பட்ஜெட் என்பதனை டிடிவி தினகரன் மறைமுகமாக ஒத்துக் கொண்டுள்ளார் அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழக பட்ஜெட் மிகவும் சிறப்பான பட்ஜெட், விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சிறப்பான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது என கடம்பூர் ராஜு கூறினார்.
You must be logged in to post a comment.