மனநோயாளியின் வயிற்றில் இருந்த சாவி, காசு உட்பட 40 பொருட்களை, சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் அகற்றினர். இதுகுறித்த விவரம் வருமாறு; சென்னை அயனாவரம் மனநல காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர் ஜெயக்குமார் (52). அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்த இவரை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, அவரை ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள், ஜெயக்குமாரின் வயிற்றில் சாவி, காசுகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருக்கும் பொருட்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
தொடர்ந்து, அவருக்கு 2 நாட்கள் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய வயிற்றில் இருந்த சாவி, காசுகள் உள்ளிட்ட 40 பொருட்களை வெளியே எடுத்தனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயக்குமார் கையில் கிடைத்த சிறுசிறு பொருட்களை வாயில்போட்டு விழுங்கியுள்ளார்.
இந்த பொருட்கள் அவருடைய வயிற்றில் தங்கியதால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அவருடைய வயிற்றில் இருந்து சாவி, காசு உட்பட 40 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன. தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளார்” என தெரிவித்தனர்.
– ப.ஞானமுத்து
You must be logged in to post a comment.