மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் என 15 நபர்கள் கண்டறியப்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது . அவர்களின் உறவினர்கள் / தொடர்புடைய நபர்கள் என 379 நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவரவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர் . இவர்களது வீடுகளில் நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டு தினசரி வருவாய்த்துறை , சுகாதாரத்துறை , மற்றும் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் . கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ( Containment areas ) என அறிவிக்கப்பட்டு மதுரை மாநகரில் மேலமடை , நரிமேடு , மற்றும் தபால்தந்தி நகர் , மதுரை புறநகரில் மேலூர் , எழுமலை , மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது . இப்பகுதிகளில் வசிக்கும் 67 , 748 குடும்பங்களில் உள்ள 2 , 92 , 759 நபர்களை கண்காணித்திட 854 சுகாதாரத்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன . இவர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில் நேரில் சென்று மேற்படி நபர்களை சந்தித்து நோய் தொற்று அறிகுறிகள் ஏதும் உள்ளனவா என்பதை கண்காணித்து வருகின்றனர் . மருத்துவ கட்டமைப்பு வசதிகள் : மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் ( COVID – 19 ) தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது . அதன்படி மதுரை மாவட்டத்தில் தற்போது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு 150 படுக்கை வசதிகளுடனும் , 120 வென்டிலேட்டர்கள் வசதிகளுடனும் உள்ளது . தனியார் மருத்துவமனைகளில் 1 , 000 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . போதுமான அளவில் முகக்கவசம் , பாதுகாப்பு உடைகள் கைவசம் உள்ளன . சுகாதார நடவடிக்கைகள் : மதுரை மாவட்டம் முழுவதும் தினசரி பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி மருந்துகள் 2 , 633 லிட்டர்கள் தெளிக்கப்படுகின்றன . 41 , 142 கிலோகிராம் பிளிச்சிங் பவுடர்கள் தூவப்படுகின்றன . 4 , 307 லிட்டர்கள் லைசால் கொண்டு பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன . காய்கறி , மீன் , மற்றும் இறைச்சி சந்தைகள் பரவலான இடங்களில் அமைத்தல் : மதுரை மாநகரில் காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 14 இடங்களில் காய்கறி சந்தைகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்கவும் , சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன . மதுரை மாநகரில் 100 வார்டுகளில் 46 வாகனங்களின் மூலம் ( நடமாடும் காய்கறி கடை ) பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன . இதனால் பொதுமக்கள் காய்கறிகள் கிடைக்காமல் அவதிப்படாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . மதுரை மாநகரில் மீன் சந்தைகள் ஓபுளா படித்துரை அருகில் சில்லரை விற்பனை செய்யவும் , மதுரை மாட்டுத்தாவணி எம் . ஜி . ஆர் . பேருந்து நிலையத்தில் மொத்த விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன . வெளிமாநில தொழிலாளர்கள் பராமரிப்பு நடவடிக்கைகள் : மதுரை மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் 2 , 920 நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மூலமாகவே உணவு வழங்கவும் , இதர தொழிலாளர்களுக்கு வட்டாட்சியர்கள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கவும் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன . ஆதரவற்றோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் நலன் பேணுதல் : மதுரை மாநகரில் ஆதரவற்றோர் / வீடு இல்லாதவர்கள் 410 நபர்களுக்கு தினசரி 3 வேளைகள் உணவு , இருப்பிடம் , தேவையான மருந்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . மதுரை சக்கிமங்கலம் கிராமத்தில் ஆதரவற்ற நரிக்குறவர்கள் / பார்வையற்றவர்கள் 419 நபர்களுக்கு உணவுப்பொருட்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . எனவே மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அனைத்து வகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன . பொதுமக்கள் அரசு தெரிவித்த விதிமுறைகளின்படி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமலும் , சமுக இடைவெளி கடைபிடித்தும் , அவ்வப்போது தங்கள் கைகளை சோப்பு நீரால் சுத்தம் செய்தும் , கொரோனா நோய் தொற்று வராமல் இருக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் கேட்டுக் கொள்கிறார் . மாவட்ட ஆட்சியர் , மதுரை .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.