Home செய்திகள் கையூட்டு கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன.- டாக்டர் ராமதாஸ் காட்டம்..

கையூட்டு கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன.- டாக்டர் ராமதாஸ் காட்டம்..

by Askar

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற மிக அதிக அளவில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு பொதுச்சேவை வழங்கும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் கூட தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதைத் தான் பொதுமக்களின் குற்றச்சாட்டு உறுதி செய்திருக்கிறது.

தமிழக மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளின் பணி ஆகும். ஆனால், தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளைக் கூட தமிழக அரசின் துறைகள் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அத்தியாவசியச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படைச் சேவைகளை பெறுவதற்கு குறைந்தது ரூ.500 முதல் ரூ.10,000 வரை கையூட்டாக வழங்க வேண்டியிருப்பதாகவும், கையூட்டு கொடுத்தாலும் கூட குறித்த காலத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுமக்களுக்குத் தேவையான பல சான்றிதழ்களை பொது சேவை மையம் மூலமாகவே விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்; அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லத் தேவையில்லை என்று அரசு விதிகள் கூறுகின்றன. ஆனால், பொது சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்தாலும் கூட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கையூட்டு தர வேண்டியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். கையூட்டு கொடுத்தால் தான் சேவை கிடைக்கும் என்பது அரசுக்கு அவமானம்.

பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீர்வு பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.

மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக அடுத்த மாத இறுதியில் கூட இருக்கும் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com