கோவையின் அமைதியை சீர்குலைக்க திட்டமிடும் இந்துமுன்னணி! எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்! வன்முறை தாக்குதல் மூலம் கலவரச் சூழலை ஏற்படுத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசமைப்பு சட்ட விரோத சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில், பாஜக இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் சக்திகள் கோவையில் கலவரச் சூழலை ஏற்படுத்தும் வகையில், மத ரீதியான தாக்குதல்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர்.
கோவை கணபதி பகுதியில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, இஸ்லாமியர்களின் வாகனங்கள் மீது தாக்குதல், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது என ஒருவித பதட்டத்தை இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் இக்பால் மீது, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷமிட்டமாறு, அவரது கடைக்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த இக்பால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலைவெறித் தாக்குதலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக தாக்குதலில் ஈடுபட்டவட்டவர்கள் மற்றும் ஏவிவிட்டவர்கள் மீதும் காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
கோவையில் மீண்டும் ஒரு கலவரச் சூழலை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த சில நாட்களாக இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் பிரச்சாரங்களும், நடவடிக்கைகளும் அமைந்திருக்கும் சூழலில் அது குறித்து காவல்துறை உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவு தான், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் தொடர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடக் காரணம். துவக்கத்திலேயே இத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது காவல்துறையின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.
ஆகவே, கோவையின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சங்பரிவார் அமைப்பினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை மேற்கொண்டு, பொது மக்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும். வன்முறையில் ஈடுபடும் இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் குண்டர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி கோவையின் அமைதியை பாதுகாக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இதுபோன்ற கலவரச் சூழலை ஏற்படுத்தும் விதமான தாக்குதல்கள் மூலம், அரசமைப்பு விரோத சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி. சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருபோதும் தடுத்து விட முடியாது. சட்டங்களை ரத்து செய்யும் வரை ஜனநாயக வழியிலான எதிர்ப்பு போராட்டங்கள் தொடரும். ஆகவே, எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர்கள் அமைதி காத்து, ஜனநாயக வழியிலான இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.