இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 16.07.2018 அன்று பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பாக தீத்தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து நம்மையும், மற்றவர்களையும் எப்படி எல்லாம் காத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது. இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் அழிவினைக் குறைக்க நம்மால் இயலும். இதற்கு பலதுறைகள் பலவிதமான யுக்திகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் தலையாய கடமை வகிப்பது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, பேரிடர் என்பது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களின் சீற்றம் அல்லது இயற்கையின் திடீர் மாற்றத்தால் ஏற்படும் அதிக அழிவுகளே ஆகும்.
பொதுவாக விபத்து ஏற்படும் ஒவ்வொரு இடத்திலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய அலுவலர்கள் உடனடியாக வந்து சேர கால தாமதமாகும். இந்த கால தாமதத்தினால் விபத்தில் காயமடைந்தவர் அபாய நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்த்திடும் வகையில் விபத்து ஏற்பட்ட நபருக்கு நம்மலால் முடிந்த அளவு முதலுதவி அளிப்பதன் மூலம் பெரும் பாதிப்பினை தவிர்த்திட முடியும். அதற்கு நம் அனைவருக்கும் முதலுதவி அளிப்பது பற்றி தெரிந்து வைத்தல் அவசியமாகும்.
இன்றைய தினம் இயற்கையால் உண்டாகக்கூடிய பாதிப்புகள் செயற்கையாக உண்டாகக்கூடிய பாதிப்புகள் அவற்றிலிருந்து எவ்வாறு நமக்கும்ää பிறருக்கும் முதலுதவி அளிப்பது தொடர்பாக தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பாக செயல்விளக்கம் பயிற்சி காட்டப்பட்டது. இன்றைய பயிற்சியின் மூலம் கரியமிலவாயு தீயணைப்பான்கள் மற்றும் உலர்மாவு தீயணைப்பான்கள் போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்து குறித்து செயல்விளக்கம் காட்டப்பட்டது.
மேலும் எண்ணெய் வகை தீயணைப்பான்களை நுரையத்தீயணைப்பானின் மூலம் எவ்வாறு தீயணைப்பது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, முதல் மாடி, இரண்டாம் மாடிகளில் காயம்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் எரிவாயு (சிலிண்டர்) மூலம் ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து இப்பயிற்சியின் மூலம் விளக்கிக் கூறப்பட்டது. மேலும் அடிபட்டவர் ஆணாக இருந்தால், அவர்களை எவ்வாறு அந்த இடத்திலிருந்து கொண்டு செல்லவேண்டுமெனவும், பெண்ணாக இருந்தால் அவர்களை எவ்வாறு அந்த இடத்திலிருந்து கொண்டு செல்லவேண்டுமெனவும் இப்பயிற்சியின் மூலம் விளக்கிக் கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்துறை அலுவலர் சாமிதுரை மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)செல்வி, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) என்.சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.