தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சேர்ந்தமரம் அடுத்த பொய்கை கிராமத்தில், சென்னையிலிருந்து வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் கிராம மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகில் உள்ள கே.வி ஆலங்குளத்தை சேர்ந்த துரைராஜ் தனது மனைவி ராமலெட்சுமி(30) மற்றும் தனது 6 வயது மகனுடன் சென்னை தண்டையார் பேட்டையில் வசித்து வருகிறார்.இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமானதால் தனது மகன் மற்றும் கர்ப்பிணி மனைவி மற்றும் சேர்ந்தமரம் அருகே உள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 8 பேர் ஒரே வாகனத்தில் சென்னையில் இருந்து கடந்த 9ஆம் தேதி கிளம்பி 10ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் துரைராஜ் தனது மனைவி ராமலட்சுமியை அவரது சொந்த ஊரான சுரண்டை அருகிலுள்ள மேலபொய்கையில் கொண்டு விட்டுள்ளார்.
ராமலட்சுமி சென்னையில் இருந்து வந்ததால் மேலும் கர்ப்பிணிப் பெண் என்பதால் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து கொரோனா சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவர்களுடன் ஒரே வாகனத்தில் வந்ததாக கூறப்படும் 8 பேரையும் தனிமைப்படுத்தி உள்ளனர். அத்துடன் அவர்களுடன் பழகியவர்களையும் அடையாளம் காணும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பொய்கை கிராமப்பகுதியில் கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா முகாமிட்டு சுகாதார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். கிராமம் முழுவதும் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தில் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 கிமீ தூரத்தில் உள்ள பொய்கையில் சென்னையில் இருந்து வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுரண்டை, சேர்ந்தமரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.