இராமநாதபுரம் அருகே அழகன்குளம், வைகை நதியின் முகத்துவாரத்தில் அமைந்த ஒரு இயற்கை துறைமுகம். இவ்வூர் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே, உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.
இந்நிலையில் இவ்வூர் கோயிலுள்ள கல்தொட்டியில் 100 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அழகன்குளம் கடற்கரை ஓரம் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த சத்திரத்துக்கு செல்லும் வழியில் அழகிய நாச்சி அம்மன் கோயில் கிணற்றடியில் உள்ள கல்தொட்டியில் எழுத்துகள் இருப்பதாக அழகன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அசோகன் தகவல் கொடுத்தார். இதன்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை படி எடுத்து படித்தார்.
இது குறித்து ராஜகுரு கூறியதாவது: கடற்கரை மணற்பாறையால் செய்யப்பட்ட கல்தொட்டி 3 அடி நீளம், 2 அடி அகலம் உள்ளது. இதன் மேல் விளிம்பிலும் அதன் ஒரு பகுதியிலும் 6 வரி கொண்ட ஒரு கல்வெட்டு உள்ளது. அட்சய ஆண்டு ஆவணி மாதம் 25ஆம் நாள் அழகன்குளம் அழகிய நாயகி அம்மனுக்கு அவ்வூரைச் சேர்ந்த நாச்சியப்ப முதலி மகன் அரியவன் முதலி கல்தொட்டி செய்து கொடுத்தார் என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள தமிழ் ஆண்டுக்குரிய ஆங்கில ஆண்டு 1926 ஆகும். வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் கோயிலான இது 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் மருதுபாண்டியர் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
You must be logged in to post a comment.