கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அந்த மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும், கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்தும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், புளியங்குடி, வடகரை உள்ளிட்ட பல பகுதிகளில் கர்நாடக அரசு மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கடையநல்லூர் பகுதியில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேட்டை காதர் முகையதீன் குத்பா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஆர் எஃப் சி சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள், இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாய கடமை இல்லை எனக் கூறி இந்திய அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை பறிக்கும் விதமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து புளியங்குடியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.இதில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே போன்று வடகரை சீரணி திடலில் ஜனநாயக பாதுகாப்பு கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.