சாலையில் பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தென்காசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில் இருந்து சுந்தரபாண்டியபுரம் சாலையில் இளைஞர்கள் அவ்வப்போது பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் அறிவுரையின் படி சார்பு ஆய்வாளர்கள் கபீர்தாசன் மற்றும் செல்வி அவர்களின் தலைமையில் தனிப் பிரிவு தலைமை காவலர் முத்துராஜ், காவலர்கள் சதாம் உசேன், சௌந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தென்காசி பகுதியை சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகன் செய்யது சுலைமான் (21) மற்றும் அலி என்பவரின் மகன் முகம்மது (21) ஆகிய இரண்டு நபர்களை வழக்கு பதிவு செய்து அவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து தங்களது குழந்தைகளிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தும் படி ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர். இது குறித்து தென்காசி காவல்துறையினர் கூறுகையில், சாலை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும், இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் எனவும், பைக் ரேஸ்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.