தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தையொட்டி பேரணி,கருத்தரங்கம் உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி சர்வதேச காசநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம், சமூக மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி, உலக அளவில் காசநோய் ஒழிப்பு முயற்சிகளை ஊக்குவிப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தென்காசி மருத்துவமனை நிர்வாகமும்,
ஸ்ரீ நல்லமணி யாதவா மருந்தாளுநர் கல்லூரியும் இணைந்து உலக காசநோய் தடுப்பு விழிப்புணர்வு தினம் 24.03.2022 வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்டரங்கன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் தென்காசிமருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், ஸ்ரீ நல்லமணி யாதவா கல்லூரி மருந்தாளுநர்கள் மாணவர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனை கூட்ட அரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. அப்போது காசநோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி உறைவிட மருத்துவர் மருத்துவர் ராஜேஷ் தலைமையில் ஏற்கப்பட்டது. கருத்தரங்கில் செவிலியர் கண்காணிப்பாளர் திருப்பதி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவர் மல்லிகா காசநோய் பற்றியும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக சிறப்புரையாற்றினார். இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்டரங்கன் காசநோய் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். ஸ்ரீ நல்லமணி யாதவா கல்லூரி முதல்வர் வில்லியம், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைவர் மருத்துவர் கீதா நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.