தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு (2024) எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), தென்காசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 843 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவம், கலை, பொறியியல், வடிவமைப்பு, விவசாயம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிடைக்கும் தொழில் வேலைவாய்ப்புகள் சார்ந்து வழிகாட்டுதலுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance) 13.05.2024 அன்று தென்காசி இ.சி.ஈ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240514-WA0013-large.jpg?resize=1024%2C682&ssl=1)
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது, கல்லூரி கனவு எனும் இந்த நிகழ்ச்சியின் மூலம் உயர் கல்வியில் அதிக அளவிலான மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கமாகும். நம்முடைய சமுதாயத்தில் பள்ளிப்படிப்பே போதும் உயர்கல்வி எதற்கு என்ற ஒரு எண்ணம் நிலவுகிறது. அதிலும் பெண் குழந்தைகள் கல்லூரிக்கு சென்று ஏன் படிக்க வேண்டும் என்ற மனநிலை பல பெற்றோரிடம் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாற்ற வேண்டும். ஒரு நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு உயர் கல்வி மிகவும் அவசியமானது. பல்வேறு நாடுகளின் வரலாறுகளை ஆராய்ந்து பார்த்தால் வேளாண்மையை அதிக அளவில் சார்ந்திருக்கும் பொருளாதாரம் உள்ள நாடுகளில் ஏழ்மை அதிகமாக இருப்பதை அறியலாம். வேளாண்மையிலிருந்து தொழில் துறை சார்ந்த பொருளாதாரமாக மாறும் போது மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட ஆரம்பிக்கிறது. அதுவே சேவைத்துறை அதிக அளவில் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் போது மக்களின் வாழ்க்கை முறையிலும் வாழ்க்கை தரத்திலும் மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இந்தியா பொருளாதார ரீதியாக ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு அதிக அளவில் திறன் சார்ந்த மனிதவளம் தேவை. அதற்கு அதிக அளவில் உயர் கல்வி படித்த மக்களை உருவாக்குவது அவசியமாகிறது.
1980-இல் இந்தியா – சீனா இரண்டு நாடுகளின் தனிநபர் வருமானம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதன் பிறகு, சீனா உயர் கல்விக்கு முக்கியத்துவம் தந்து பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. இப்போது சீனாவின் தனிநபர் வருமானம் 13,400 டாலராக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் அது 2,730 டாலர் தான் (As per IMF report 2024). உயர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கியச் செய்தி இது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம். பீஹார், உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் இதில் பின் தங்கியிருக்கின்றன. வட மாநிலங்களில் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதற்கு இது முக்கியக் காரணம். இந்தியாவில் உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை 28.4%, ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 50% மேல். தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு முக்கியமான காரணமாகும். எனவே பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும். அதிலும் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி கற்க முன்வர வேண்டும். அதற்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் பெண் அதிகாரிகள் உங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
கல்வி கற்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் மூலமும், கல்விக்கடன் வழங்குவதன் மூலம் உயிர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வருகிறது. வேகமாக மாறிவரும் இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு புதிய புதிய கண்டுபிடிப்புகளும், புதிய தொழில் நுட்பங்களும் உதாரணமாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆட்டோமேஷன் (Automation), மெஷின் லேர்னிங் (Machine learning), Virtual Reality போன்றவை தொழில்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதற்கு ஏற்ப திறன் சார்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பல்வேறு தொழில்கள் இன்று உள்ளது. அதேபோல இனி வரும் காலங்களிலும் பல்வேறு புதிய தொழில்களும், வேலை வாய்ப்புகளும் உருவாகும். அதனால் அதற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? என ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. முதல் மதிப்பெண் பெற்றவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறுவார்கள், அதிக மார்க் வாங்கியவர்கள் தான் அனைத்து வசதியான வாழ்க்கையையும் வாழ்வார்கள் எனும் தவறான மனப்போக்கை மாணவர்கள் மனதில் விதைக்காமல் உனக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய் என்று பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் முதலில் உயர் கல்வியில் என்னென்ன துறைகள் இருக்கிறது, அதில் என்னென்ன பட்டப்படிப்புகள் இருக்கிறது, அதில் நமக்கு விருப்பமான பட்டப்படிப்பு எது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து, பிடித்த. ஈடுபாடுள்ள துறையிலான படிப்பைத் தேர்வு செய்வது அவசியம்.
அறிவியல் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் ISRO, CSIR போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானியாக பணிபுரியலாம். மருத்துவம் சார்ந்த படிப்புகளில் அலோபதி. சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி போன்றவை படிக்கலாம். கால்நடை மருத்துவப் படிப்பான B.V.Sc., (B.P.T) பிபிடி எனப்படும் பிஸியோ தெரபி, பி.எஸ்.ஸி. நர்ஸிங், பிஃபார்ம் டிஃபார்ம் பார்மஸி படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். ஊடகத்துறையில் விருப்பம் உள்ளவர்கள் பி.ஏ. ஊடகத்துறை, பி.எஸ்ஸி விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மீடியா, ஜர்னலிசம் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். பிளஸ் டூவில் வணிகம், கணக்குப்பிரிவு படித்த மாணவர்கள், பி.காம் படிக்கலாம். அதைத் தொடர்ந்து CA. CMA. ICWAL, ACS., ICS, பொறியாளருக்கு இணையான பதவியும், ஊதியமும் கிடைக்கும். உயர்ந்த நிறுவனங்களில் ஆடிட்டராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். பி.பி.ஏ எனப்படும் மேலாண்மை படிப்பு பெரிய நிறுவனங்களில் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். எம்பிஏ முடித்தால் வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி புரியலாம்.
உலகம் கணினிமயம் என்பதால் கணினித் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் பி.சி.ஏ. பி.எஸ்.ஸி கணினி அறிவியல் கல்வியில் சேரலாம். ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஓவியத்தில் திறமை இருப்பவர்கள் அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியில் BFA., படிப்பில் சேரலாம். இசைத்துறையில் ஆர்வமிக்கவர்கள் அரசு இசைக் கல்லூரிகளில் சேரலாம். திரைப்படத்துறையில் கால்பதிக்க விரும்புபவர்களுக்கு சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில் பல பிரிவுகளுக்கு டிப்ளமோ படிப்பு கற்றுத்தரப்படுகிறது. அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்புக்கு வேலைவாய்ப்பு பெருகியுள்ளது. ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி, புதிய டிஸைன்கள் வடிவமைப்பு போன்ற பட்டப்படிப்புகள் இதில் சொல்லித் தரப்படுகின்றன. சென்னை தரமணியில் ஒன்றிய அரசுக் கல்லூரியான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி (NIFT) என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயிலலாம். பி.எஸ்.சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை போன்ற வேளாண் படிப்புகள் படிக்கலாம். பி.டெக் எனும் Food Process Engineering படிப்பு வேலை வாய்ப்புள்ள படிப்பு தான். சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், சுற்றுலாத்துறை போன்ற படிப்புகள் நேரிடையாக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும். ஐடி நிறுவனங்கள் மட்டும் தான் வெளிநாடுகளில் பணிவாய்ப்பு வழங்கும் என்றில்லாமல் உணவுத்துறை சம்பந்தப்பட்ட படிப்புகள் விமானம், கப்பல் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் புகழ்பெற்ற சமையல் நிபுணராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கும்.
தற்போது பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி, டயட்டீஷியன், ஹோம் சயின்ஸ், உளவியல் போன்ற பட்டப்படிப்புகளையும் படிக்கலாம். பொறியியல் துறையில் அகில இந்திய அளவில் பி.இ. பி.டெக்., படிக்க விரும்பும் மாணவர்கள் ஐ.ஐ.டி.,என்.ஐ.டி நிறுவனங்களில் சேரலாம். இதற்கென பிரத்யேக நுழைவுத்தேர்வுகள் உண்டு. ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்.ஐ.டி.யிலும் ஜே.இ.இ.அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டியிலும் சேர்ந்து படிக்கலாம். இவற்றைத் தவிர்த்து பொறியியல் படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகம், அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறை இல்லாமல் கலந்தாய்வு முறையில் சேர்க்கை நடைபெறுகிறது. இது தவிர்த்து பல்வேறு பட்டப் படிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையை சார்ந்தவர்கள் விரிவாக விளக்குவார்கள். மேலும் UPSC, TNPSC, SSC, Railway Exams Bank Exams போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதுவதற்கும் உயர் கல்வி அவசியமானது. எனவே, அனைத்து மாணவ மாணவிகளும் இந்த நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான துறையில் உயர்கல்வி தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240514-WA0015-large.jpg?resize=719%2C313&ssl=1)
இந்நிகழ்ச்சியில் நான் முதல்வன் என்னும் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகார் ஷாஜி (திட்ட இயக்குநர் ஆதித்யா எல் 1 முன்னாள் அரசு பள்ளி மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கோட்டை) காணொலி காட்சி வாயிலாக மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். போட்டித் தேர்வின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி மதிவதனா, மாவட்ட பதிவாளர் (கூட்டுறவு) செல்வி.பூர்விஷா, மாவட்ட பதிவாளர் (பொது நிதி நிர்வாகம்) செல்வி திவ்யா, வருவாய் கோட்டாட்சியர் (சங்கரன்கோவில்), செல்வி.கவிதா. மாவட்ட பதிவாளர் அணு ஸ்வாதிகா, செல்வி.இன்பா (UPSC). செல்வன்.பேச்சி முத்து (UPSC) ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தார்க்ள்.
உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது எப்படி என அனிதா (உயர்கல்வி ஆலோசகர், பாரதியார் பல்கலைக்கழகம், விரிவாக்கம், தொழில் வழிகாட்டுதல் மற்றும் மாணவர் நலன் துறை) விளக்கி பேசினார். பொறியியல் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஏ.பழனிச்சாமி (துறைத்தலைவர்) சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, ஆலங்குளம்) எடுத்துரைத்தார். கலை மற்றும் கலை சார்ந்த படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என முனைவர் விக்டோரியா தங்கம் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர்) விளக்கமாக எடுத்துரைத்தார். அறிவியல் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என முனைவர் சுந்தரம் (தலைமையாசிரியர்) விளக்கி பேசினார்.
மனிதநேயம் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என முனைவர் பாலச்சந்தர் (துறைத்தலைவர் & உதவி பேராசிரியர், வணிக நிர்வாகத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலங்குளம்) விளக்கமாக எடுத்துரைத்தார். செந்தில்நாதன் (இணைத்தலைவர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், திருச்சி) மற்றும் லட்சுமணன் (தொழில் நுட்ப மேலாளர் ஜப்பான்) ஆகியோர் மாணவர்களை ஊக்குவித்து பேசினார்கள். நான் முதல்வன் திட்டத்தின் சிறப்புகள் குறித்து கல்யாண்குமார் (மாவட்ட திட்ட மேலாளர், நான் முதல்வன் திட்டம்) விளக்கி பேசினார். மருத்துவம் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கல்விக்கடன் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கீதா சின்னராணி (முதன்மைக்கல்வி அலுவலர், தென்காசி) அனைவரையும் வரவேற்று பேசினார். பிராங்க்ளின் (உதவி இயக்குநர், மாவட்ட திறன் வளர்ச்சி அலுவலகம்) நன்றியுரையாற்றினார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240514-WA0014-large.jpg?resize=1024%2C682&ssl=1)
இந்த நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவம், கலை, பொறியியல், வடிவமைப்பு, விவசாயம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிடைக்கும் தொழில் வேலைவாய்ப்புகள் சார்ந்து வழிகாட்டுதலுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 843 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் கடனுதவிகள் சார்ந்து விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் துறையினை சேர்ந்த வங்கிகள், கலை மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்து வசதி, மதிய உணவு மற்றும் தேநீர் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளை, பல்வேறு துறைகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.