ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி வீ.தாமரைச்செல்வி மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் செய்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சிகள் குறித்தும் , மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறித்தும், இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை போன்றவற்றை எவ்வாறு மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.. மேலும் செய்முறை விளக்கத்தின் போது பேசிய மாணவி தாமரைச்செல்வி, *இயற்கையில் கிடைக்கும் கழிவுகளான மாட்டுச் சாணம், இலை, தழை முதலியவற்றை உட்கொண்டு, எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது. 45 முதல் 60 நாளில் மண்புழு உரம் உற்பத்தி ஆகிவிடும் என்பதால், எளிதில் கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு விவசாயிகள் அனைவரும் இந்த முறையினை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் கிராம விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
54