மதுரையில் ஆதரவற்றோருக்கு அட்சயப் பாத்திரம் மூலம் உணவு வழங்கும் நெல்லை பாலுவிற்கு சிறப்பு விருது; நடிகை ஹன்சிகா வழங்கினார்
மதுரையில் அட்சய பாத்திரம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதினை பிரபல நடிகை ஹன்சிகா வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரை ஹோட்டல் மேரியாட் அரங்கில் நடைபெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியா மூலம் தேர்வு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரபல நடிகையும், சமூக சேவகியுமான ஹன்சிகா மோத்வாணி பங்கேற்று 20க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார்.
மருத்துவம், பொதுநலம், சமூக சேவை உட்பட பல பிரிவுகளில் சிறந்து சேவை செய்வோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ‘மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட்’ என்ற அமைப்பின் மூலம் சாலையோரத்தில் உள்ள வறியவர்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் தலைக்காய விபத்து பகுதியில் உள்ளோர் என தினந்தோறும் 300 பேருக்கு கடந்த 1,025 நாட்களாக மதிய உணவு வழங்கி வருகிற சமூக ஆர்வலர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதினை வழங்கி பாராட்டி பேசினார்..அப்போது அவர் நெல்லை பாலுவிடம், “நீங்கள் செய்யும் சேவை மகத்தானது!” என்று சொல்லிப் பாராட்டினார்.
அப்போது அவர் பேசும் போது, சின்ன வயதிலேயே என்னுடைய தாயார் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மையை கற்றுக் கொடுத்தார். அதனால் தான் 31 ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வருகிறேன் என்று தெரிவித்தார். மேலும், வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் சேவையாற்ற வேண்டும். சேவை தான் உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களிலும் சிறந்தது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் இட்லி, பொங்கல் தனக்குப் பிடித்த உணவு என கூறி, தமிழ் மக்கள் அன்பானவர்கள் என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.