நெல்லையில் கவிஞர் பேரா தலைமையில் கவிதைச் சாரல் நிகழ்ச்சி 20.04.19 அன்று சிறப்பாக நடைபெற்றது. 19.04.2019 முதல் 28.04.19-முடிய நெல்லையில் புத்தகத் திருவிழா தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாம் நாளான சனிக்கிழமை இரவு தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா தலைமையில் கவிதைச் சாரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கவிஞர்கள் மஞ்சுளா, செந்தில் குமார், அனிபா,காஜா மைதீன்,கமலலியானோ சில்வேரா,ஜன்னத் பீர்தௌஸ், பேராசிரியர் கவிதா ஆகிய இளம் படைப்பாளிகள் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளை அழகாக வாசித்தனர்.
நிகழ்ச்சியில் எல்லா கவிஞர்களுக்கும் எழுத்தாளர் நாறும்பூநாதன் பரிசுகளை வழங்க,தலைமையேற்ற கவிஞர் பேரா அவர்களுக்கு காவ்யா பதிப்பக உரிமையாளர் பரிசு வழங்கி கௌரவித்தார்.
மேலும் பரணி இலக்கிய முற்றம் சார்பில் கி.சந்திரபாபு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர்,சமூக ஆர்வலர் ராகவன், வட்டாட்சியர் (ப.நி)வலன்சியா, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் பாரதி முருகன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இருந்து கண்டு களித்தனர்.
நிகழ்ச்சியில் கவிஞர்களுக்கு நேர நிர்ணயம் ஏதுமின்றி, பல்வேறு தலைப்புகளில் தங்கள் கவிதைகளை வாசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதுபற்றி பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா தெரிவித்ததாவது, “பொதுவாக கவியரங்கம் என்று தான் நிகழ்ச்சி நடைபெறும். குறிப்பிட்ட தலைப்பில், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளே கவிதை வாசிக்கத்தான் கவிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் இந்த கட்டுப்பாடுகளை உடைத்து, புதியதோர் பாணியில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.”என்றார். பொதிகை தமிழ்ச்சங்கம் “இளம் படைப்பாளிகளின் களம்” என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு இனிதே இந்நாளின் விழா நிறைவுற்றது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.