தூத்துக்குடிக்கு ஆவணங்களின்றி தப்பிவந்துள்ள மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் -யிடம் தூத்துக்குடியிலுள்ள கடலோர காவற்படையினர், உள்துறை மற்றும் உளவுதுறையினர் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (02.08.19) மேலும் தொடர்விசாரனை செய்வதற்காக வெளிநாடுகளின் குடியுரிமை மண்டல பதிவுத்துறை அலுவலர் சேவியர் தன்ராஜ் வருகைதந்துள்ளார்.தூத்துக்குடியில் இருந்து கடந்த மாதம் 11-ஆம் தேதி மாலத்தீவுக்கு மங்கோலியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட, மாலத்தீவை சேர்ந்த முராய்ப் என்பவருக்குச் சொந்தமான விர்கோ 9 என்ற சிறிய வகை சரக்கு கப்பல் கட்டுமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்தக் கப்பலில் இந்தோனேசியாவை சேர்ந்த விவின்குணவான் (38), ஷலாகுதீன் மாஸ்வாதி (27), இக்ரா பாஸ்ரி (32), ஜூமாதில் ஆசிஷ் (31) ஆகியோரும், இபுனு பாசரி (30), யாபுல் பகாரி (35), வாயுதீன் (27), மெளலிம் ஹாஸ்யம் (34), தமிழகத்தைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோ (49) ஆகியோரும் சென்றனர்.மாலி துறைமுகத்துக்குச் சென்று சரக்கை இறக்கிய பிறகு, அங்கிருந்து கடந்த 27ஆம் தேதி சரக்கு கப்பல் தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது. சிறிது தொலைவு சென்றதும் நடுக்கடலில் வைத்து கப்பலில் மற்றொருவர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ஏறியுள்ளார்.
9 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், புதிதாக ஒருவர் கப்பலில் ஏறியதைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோ கப்பலின் உரிமையாளரான முராய்ப்க்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் தனது கப்பலுக்கு சரக்கு ஏற்றி அனுப்பும், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தார்.சட்டவிரோதமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கப்பலில் ஏறி இருப்பதால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் உரிமையாளர் முராய்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தூத்துக்குடி கடலோரக் காவல்படையினருக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த விர்கோ 9 சரக்கு கப்பலை வியாழக்கிழமை வழிமறித்த கடலோரக் காவல்படை அதிகாரிகள், கப்பலுக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது 9 பேருக்குப் பதிலாக 10 பேர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்தக் கப்பலை சிறைபிடித்து தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், ரா உளவுப் பிரிவு அதிகாரிகள், கடலோரக் காவல்படை அதிகாரிகள், மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், கப்பலில் ஆவணங்களின்றி ஏறியவர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று இரவு வரை விசாரணை தொடர்ந்தது. வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கும் உத்தரவுக்குப் பிறகே அகமது அதீப் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை முழுமையாகத் தெரிய வரும் என உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவர் மீண்டும் கப்பலில் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில், இன்று சென்னையிலிருந்து வெளிநாட்டு குடியுறுமை மண்டல பதிவு அதிகாரி சேவியர் தனராஜ் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வந்து அவரிடம் நேரிடையாக விசாரணை நடத்துகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே அவர் எதற்காக தூத்துக்குடி வந்தார் என்ற விவரம் தெரியவரும்.
தூத்துக்குடியில் பிடிபட்ட அகமது ஆதீப், கடந்த 2015-ஆம் ஆண்டு மாலத்தீவு துணை அதிபராக இருந்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம், அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கயூமை விரைவுப்படகில் வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக, துணை அதிபராக இருந்த அகமது ஆதீப் கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அகமது அதீப்புக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அவரது தண்டனைக் காலம் 18 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாலத்தீவு உயர்நீதிமன்றத்தில் அகமது அதீப் மேல்முறையீடு செய்த நிலையில், கடந்த மே மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வீட்டுக் காவலில் இருந்த அவர் திடீரென சரக்கு கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே அவர் எதற்காக தூத்துக்குடி வந்தார் என்ற விவரம் தெரியவரும்.
You must be logged in to post a comment.