இராமநாதபுரம் அருகே வேன் கவிழ்ந்து ரூ.1.60 கோடி மாயமான விவகாரத்தில், பணியாளர்களே பணத்தை பங்கிட்டு கொண்டு மாயமென நாடகமாடியது போலீசார் குட்டு வெளியானது. பணத்தை பங்கிட்டு கொண்ட அவர்களிடம் இருந்து ரூ. 35 லட்சம், ஒரு காரை பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். மூளையாக செயல்பட்ட இருவரை போலீசார் தீவீரமாக தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் அடுக்குவதற்காக ரூ 1.85 கோடி எடுத்துக் கொண்டு தனியார் ஏஜென்ஸி வாகனம் நேற்று மாலை கிளம்பியது. ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி பகுதிகளில் உள்ள ஒரு சில ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை அடுக்கி விட்டு மீதி பணத்துடன் முதுகுளத்தூர் நோக்கி அந்த வாகனம் நேற்று இரவு நகர்ந்தது. கடலாடி மலட்டாறு விலக்கில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலை குலைந்து நேற்றிரவு 10 மணியளவில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது அதிலிருந்த ரூ. 1.60 கோடி மாயமானதாக பணியாளர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதன் படி சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரவில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை. பூட்டு போட்டு சாவியை தன் வசம் வைத்து கொண்டும் வரும் வாகனத்தில் பூட்டு திறக்கப்பட்டு பணம் மாயமானதும், நிலை குலைந்த வாகனத்தில் பணியாளர்கள் லேசான காயம் கூட இல்லாமல் தப்பித்தது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா சம்பவ இடம் விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினார். விசாரணையில் மாயமானதாக கூறிய ரூ.1.60 கோடியை பணியாளர்களே திட்டமிட்டு பங்கிட்டு கொள்ள நாடகமாடிய குட்டு வெளிப்பட்டது. வாகன மேலாளர் குருபாண்டி, டிரைவர் அன்பு ஆகியோர் திட்டமிட்டு உடன் வந்த பணியாளர்கள் கபிலன், வீரபாண்டி ஆகியோரை கூட்டுச்சேர்த்து பணத்தை கீழக்கரையில் உள்ள தங்களது கூட்டாளிகளிடம் கொடுத்து வைத்ததை ஒப்புக்கொண்டனர்.
இவர்களிடமிருந்து ரூ.35 லட்சம், பணத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இக் கொள்ளையில் இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தி:- இராமநாதபுரம், கீழக்கரை …
You must be logged in to post a comment.