தென்காசி மாவட்டத்தில் 14வது தேசிய வாக்காளர் தினம் 2024 நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து மின்னணு தேர்தல் பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை, இரவிச்சந்திரன் தெரிவித்ததாவது, வாக்களிப்பது நமது உரிமை. நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச் சாவடிகளில் செய்யப்படும். மின்னணு தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு வாகனம் மூலம் தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும், வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற செயல்முறை விளக்கம் மூலம் வாக்காளர்கள் ஏழு வினாடிகளில் தாங்கள் வாக்களித்த நபரின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை அச்சிடப்பட்டதை உறுதி செய்யும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் இயக்கப்படுகிறது. மேலும், வாக்காளர்கள் தங்களின் வாக்களிப்பது குறித்து சந்தேகங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது வாக்குப்பதிவு குறித்த அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் வலிமையான ஜனநாயகத்திற்காக பெருமளவில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயத்தை நிலைநாட்ட வேண்டும்.
14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற கடிதம் எழுதுதல் போட்டி, சுவர் இதழ் மற்றும் சுவரொட்டி தயாரித்தல் போட்டி, பாட்டுப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிழ்களும் வழங்கப்பட்டது மற்றும் மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான ரங்கோலிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல் காதர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. கவிதா, தேர்தல் தனி வட்டாட்சியர் ஹென்றி பீட்டர், துணை வட்டாட்சியர்கள் பாக்கியலஷ்மி, கிருஷ்ணமூர்த்தி, அலுவலக மேலாளர் (பொது) ஹரிகரன், இந்தியன் ரெட் கிராஸ், சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.