இராமநாதபுரம். செப்.10 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 31 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் ரஹ்மத்துன்னிஷா அப்துர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் காலித் புஹாரி பட்டமளிப்பு நிகழ்வை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
இளநிலைப்பிரிவில் 587, முதுநிலைப்பிரிவில் 83, ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 7 பேர் என 677 மாணவிகளுக்கு பட்டம், 63 மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கங்களை தமிழக அரசின் சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார். பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், கல்வி கற்றல் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. அதுவே ஆரம்பம். சிறுபான்மை பெண்களின் கல்விக்காகவே பி எஸ் அப்துர் ரஹ்மான் கல்வி நிறுவனத்தை நிறுவினார். இக்கால செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை மனித மாண்புகளுக்கு ஏற்ற வகையில் மாணவிகள் பயில வேண்டும் என்றார். மதுரை கிரசென்ட் பெண்கள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஷெரிபா அஜீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கல்லூரியின் தொழில்முனைவோர் இயக்குநர் ரோஸி பெர்ணான்டோ, தேர்வு நெறியாளர் முத்து மாரீஸ்வரி, பல்வேறு பாடப்பிரிவுகளின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஷேக் தாவூத் கான், உள்தர உத்திரவாதக் குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.
You must be logged in to post a comment.