இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற சமையல் மஞ்சள் 600 கிலோவை பறிமுதல் செய்த போலீசார் படகு உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்து தப்பியோடிய ஆம்னி வேன் டிரைவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மிளகு, மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்கள் கடத்த இருப்பதாக மாவட்ட எஸ்பி., யின் பிரத்யேக அலைபேசி எண் 94899 19722க்கு தகவல் கிடைத்தது. இதன்படி ராமேஸ்வரம் டிஎஸ்பி மகேஷ் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் வேதாளை கடற்கரையில் ரோந்து சென்றனர். ஒரு வீட்டில் இருந்து ஆம்னி வேனில் மூடைகளை ஏற்றிக்கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது டிரைவர் மட்டும் தப்பி ஓடினார். மூடையை பிரித்து பார்த்தபோது அதில் சமையல் மஞ்சள் இருந்தன.
இது தொடர்பாக படகு உரிமையாளர் தங்கச்சிமடம் ஆம்ஸ்ட்ராங் 38, பாம்பன் குந்துகால் பாபு உசேன் 35, வேதாளை அப்துல் முபாரக் 37 ஆகியோர் என தெரிந்தது. இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்றது தெரிந்தது. தப்பியோடிய டிரைவர் மண்டபம் ரியாஸ்கான் எனவும் தெரிந்தது. படகு உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், 15 மூடைகளில் இருந்த 600 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநாதபுரம் எஸ்பி., வருண்குமார் கூறுகையில், இலங்கைக்கு வாசனை பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவல் படி தனிப்பிரிவு போலீசார் மூலம் 600 கிலோ மஞ்சள் மூடைகள் வேதாளையில் பறிமுதல் செய்யப்பட்டன. கொரானா வைரஸ் தொற்று தடுப்பு சிகிச்சையில் மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கிலோ ரூ.95 க்கு விற்கப்படும் மஞ்சள், இலங்கை சந்தையில் தினம் ஒரு விலை என மாறுபடுகிறது. இலங்கையில் மஞ்சள் கிலோ ரூ.2,500க்கு விலை போகிறது. இதையறிந்த கடத்தல் கும்பல் மேட்டுப்பாளையத்தில் இருந்து மஞ்சள் வாங்கி வந்து இருப்பு வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றபோது சிக்கினர். மஞ்சளை கொடுத்து விட்டு அதன் தொகைக்கு நிகரான தங்கம் கடத்தி வர இக்கும்பல் திட்டமிட்டுள்ளது. கடத்தலை தடுத்த தனிப்பிரிவு உள்ள அனைத்து போலீசாருக்கும் வெகுமதி வழங்கப்படும். என்றார். ராமேஸ்வரம் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், மண்டபம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்தனமாரி, தனி பிரிவு சார்பு ஆய்வாளர்கள் ஜேசுதாஸ், திபாகர், சிறப்பு சார்பு ஆய்வாளர் அய்யப்பன், தனிப்பிரிவு காவலர்கள் முனீஸ்வரன், ராஜ்குமார், ராம்குமார், கில்டஸ், மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.