புத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு, கோடை விடுமுறையில் மாணவர்களின் வீடு தேடிச் சென்று புத்தகம் வழங்கி அசத்தும் பள்ளி ஆசிரியர்கள்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவர்களின் வீட்டுக்கும் நான்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்லி வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் கூறுகையில் “தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் ஊர்புற நூலகங்களை திறந்துள்ளது. நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன .
கோடை விடுமுறையில் புத்தகங்களையும், நூலகங்களையும் மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார். புத்தகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர், முத்து மீனாள்,முத்து லெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.
மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் படித்ததை கேட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என ஆசிரியர்கள் கூறினர்.
ஆசிரியர்களின் இந்த தன்னார்வ முயற்சி மாணவர்களாலும், பெற்றோர்களாலும் பெரிதும் வரவேற்வையும், பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.