இந்துக்களின் புகழ்பெற்ற புண்ணிய தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மூலவரான ராமநாதசுவாமியின் புகைப்படம் வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது. ஆன்மிக விதிகளுக்குப் புறம்பாக மூலவரை படம் எடுத்த ஆலய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரினர். இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான விசாரணையில், ராமநாதசுவாமி கோயில் மூலவர் கருவறையை குருக்கள் விஜயகுமார் போகில், தனது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப் மூலம் பரவிட்டது தெரிந்தது. இதனையடுத்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, விஜயகுமார் போகிலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ராமாயண தொடர்புகொண்ட தலமாக அழைக்கப்படும் புனிதலம் ராமேஸ்வரம் ஆகும். இங்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கை மன்னன் பராக்கிரமபாகுவினால் ராமனால் வணங்கப்பட்ட சிவனுக்கு கர்ப்பகிரஹம் எழுப்பப்பட்டது. இதனாலேயே இக்கோயில் ராமநாதசுவாமி கோயில் என அழைக்கப்பட்டு வருகிறது. வடக்கே உள்ள காசிக்கு நிகராக தெற்கே அமைந்துள்ள ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்திரைவாசிகள் வந்து செல்கின்றனர். ராமன் வைணவராக இருந்தாலும் ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் பிரதிஷ்டை செய்தார். இதனால் சைவ மற்றும் வைணவம் ஆகிய இரு சமயத்தினரும் இங்குள்ள மூலவரான சிவலிங்கத்தை தரிசிப்பதை வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளனர்.
சீதையால் ஆக்கம்பெற்று ராமனால் புனிதமாக்கப்பெற்ற சிவலிங்கத்துக்கு சிருங்கேரி சங்கராச்சாரியரிடம் தீட்ஷை பெற்ற குருக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். இவர்களைத் தவிர சிவலிங்கம் அமைந்துள்ள கருவறைக்குள் செல்ல சிருங்கேரி சங்கராச்சாரியர் மற்றும் நேபாள மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கத்தைப் படம் எடுக்கக் கூடாது என விதிகள் உள்ளன. இதனால் உற்சவரான ராமநாதசுவாமியின் படங்களே இக்கோயிலின் தல வரலாற்றில் இடம்பெற்றிருக்கும்.
ஆகம விதிகளை மீறிய ஆலயப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பக்தர்கள்இந்த நிலையில், மூலவரான சிவலிங்கத்தின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக வைரலாகி வரும் இந்தப் படத்தை வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்காக ஆலயத்தின் கருவறையில் பணியாற்றும் குருக்கள் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அந்தப் பக்தரிடமிருந்து பெரும் தொகையை அந்தக் குருக்கள் மற்றும் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோயில் மூலவரான சிவலிங்கத்தைப் படம் எடுத்த அந்தக் குருக்கள், சம்பந்தப்பட்ட அந்தப் பக்தருக்கு அனுப்புவதற்குப் பதிலாக வேறு நபரின் செல் நம்பருக்குத் தவறுதலாக அனுப்பியதாகவும், அவர் மூலம் இந்த விவகாரம் வெளியே கசிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆகம விதிகளுக்கு முரணாக மூலவரை படம் பிடித்த ஆலயப் பணியாளர் மீதும் இதற்குத் துணையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்குப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.