விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்:திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!டி.ஐ.ஜி.ரம்யாபாரதி அதிரடி..
திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
இன்ஸ்பெக்டர் கீதா, ராஜேஷ்-அபினயா தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் அபினயா தனது பெற்றோர் திருமணத்திற்கு போட்ட 95 பவுன் நகையை கணவர் ராஜேசிடம் திருப்பி தரும்படி கேட்டார். ராஜேஷ் 95 பவுன் நகையை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும் படி கூறி உள்ளார். நகையை பெற்ற இன்ஸ்பெக்டர் அதை வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு அடமானம் வைத்தார். தொடர்ந்து அபினயா தரப்பினர் ராஜேஷ் தரப்பினரிடம் நகையை கேட்கவே தான் அதனை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நகையை கேட்க அவர் மழுப்பி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீதா 10 பவுன் நகையை திருப்பி தந்தார். மீதி நகையை தரவில்லை.
பின்னர் ராஜேஷ் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து புகார் செய்தார். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரம்யாபாரதி திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment.