தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்களை பாதுகாத்திடவும், நிலுவையில் உள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரியும் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறையினர் இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் சிக்கந்தர் பாவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர்கள் அன்பரசு, கோபி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் மாடசாமி, மாவட்ட துணைத் தலைவர் இராஜசேகரன், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் கங்காதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் வெ.சண்முகசுந்தரம் நிறைவுரையாற்றினார். முடிவில் வட்டக்கிளை நிர்வாகி முருகையா நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்