தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டு, 20 டன் ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரை சோதனைச் சாவடி வழியாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்,குட்கா புகையிலை பொருட்கள்,மது பாட்டில்கள், அரிசி போன்றவை கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புளியரை சோதனைச்சாவடி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், புளியரை சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விருதுநகரில் இருந்து கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இது குறித்து ரேசன் அரிசியை கடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் அபு முகமது (44) என்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 20 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யபட்டு திருநெல்வேலி உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.