புளியங்குடி அருகே கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த 16 பேர் கைது;வனத்துறை அதிரடி..

புளியங்குடி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த 16 நபர்களை வனத் துறையினர் கைது செய்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வனச்சரகம் புளியங்குடி டி.என்.புதுக்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சேம்பூத்து நாதர் கோவில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வனத்துறையின் அனுமதி பெறுவது அவசியம். இந்நிலையில் சங்கரன்கோவில் வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் சேம்பூத்துநாதர் கோவிலுக்கு அனுமதியின்றி அத்துமீறி சென்ற புளியங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், ஹரிஹரசிவா, குருசாமி, சக்தி, சிவா உள்ளிட்ட 16 நபர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு மொத்தமாக 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வனத் துறையின் அனுமதியோடு செல்ல வேண்டுமே தவிர அத்துமீறி செல்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்