இராமநாதபுரம், செப்.14- தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் இராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு முகாம் இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் மீரா வரவேற்றார்.
மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் சந்திரசேகரன் அறிமுக உரை ஆற்றினார். சிறுதானியங்களை சாப்பிடுவதால் நோயின்றி 100 ஆண்டு வாழலாம் என ராஜ்ய சபா எம்பி தர்மர் பேசினார். மத்திய அரசின் செல்வமகள் திட்டம் குறித்து ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன், வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் பேசினர். அங்கன்வாடி மைய குழந்தைகள், மகளிர் நலத்திட்டங்கள் குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் விஷ்பாவதி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்து மாவட்ட சமூகநல அலுவலர் (பொ), தேன்மொழி பேசினர். சுய வேலைவாய்ப்பு பயிற்சி குறித்து ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ராஜரத்தினம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு குறித்து முதலமைச்சரின் பசுமை தோழர் ஜெகதீஸ்வரன் பேசினர். சிறுதானியங்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை குறித்து முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மனையியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை மாணவியர் கண்காட்சி அமைத்தனர். விழாவில் வந்திருந்தோருக்கு சிறுதானியங்களால் தயாரான பண்டங்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் அங்கன்வாடி பணியாளர்களால் உணவு கோபுரங்கள், சிறுதானிய உணவு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சர்வதேச சிறு தானியங்கள், சுற்றுச்சூழல் வாழ்வியல் முறை போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மத்திய மக்கள் தொடர்பக மண்டல இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஜெயராஜ் நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரியின் பல்வேறு பாடப்பிரிவு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் நதியா, ஆங்கிலத்துறை தலைவர் மரகதம் தொகுத்து வழங்கினர்.
You must be logged in to post a comment.