மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளுக்கு, முல்லைபெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து 125 எம்.எல்.டி குடிநீர் வழங்கும் திட்டம், நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சிப்பம்-1, சிப்பம்-2, சிப்பம்-3, சிப்பம்-4, கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.தற்போது, சிப்பம்-5-க்கான திட்டத்தில், மதுரை மாநகரில் உள்ள பழைய 57 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு 110 மி.மீ. முதல் 450 மி.மீ. விட்டமுள்ள பகிர்மான குழாய்கள் 813.48 கி.மீ.தூரம் பதித்து 1,50,195 எண்ணம் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. ரூ.325 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி பெற அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயலாக்க காலம் 36 மாதங்கள் ஆகும். இத்திட்டம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், மேற்கண்ட வார்டு பகுதிகளில் சுத்தமான, தூய்மையான உயர் அழுத்தத்துடன் கூடிய குடிநீர் வழங்கப்படும் என்பதில் ஐயமில்லை.இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க இயலும். மேலும் பொதுமக்கள் சுமார் 13,67,895 பேர் பயன் அடைவார்கள். எனவே, இத்திட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்டம் எதிர்வரும் 12.08.2021 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் 11.30 வரை மடீட்சியா அரங்கில் நடைபெற உள்ளது.மதுரை மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள்.எனவே, பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் இக்கூட்டத்தில், பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம் என, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.