குடிமராமத்து பணிகள் முழு விவரமும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு .

மதுரை: தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு குறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்புநிதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஆறு, ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.கடந்த 2019ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணம் ஆகும்.ஆகவே தமிழ்நாட்டின் அனைத்து நீர் நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளை, அவற்றின் சர்வே எண், ஒதுக்கப்படும் நிதி, பணிக்காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “குடிமராமத்து பணிகள் தொடர்பான விவரங்களை அலுவலர்கள் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் பார்க்க இயலாது” என தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், குடிமராமத்துப் பணிகளில் எவை முடிந்துள்ளன? நடைபெறும் பணிகளின் நிலை என்ன? என்பது குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்புக்காக பிப்ரவரி ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.(2)கொம்பாடி கண்மாய்க்கு தண்ணீர் தர கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!மதுரை: கொம்பாடி கிராம கண்மாய்க்கு தண்ணீர் தர கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த சுல்தான், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், ” கொம்பாடி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த குடும்பங்கள் கிராமத்தில் உள்ள கீழ கண்மாய், மேல கண்மாயில் உள்ள நீரை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். நிலையூர் கம்பிக்குடி கால்வாய் வழியாக கொம்பாடி கிராமத்திற்கு தண்ணீர் வரத்து உள்ளது. ஆனால் நெடுமதுரை கண்மாய்க்கு தண்ணீர் வரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இதனால், கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள், குடிநீர் தேவை பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.இதைத் தொடர்ந்து கொம்பாடி கிராமத்திற்கு நிலையூர் கம்பிக்குடி வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை, நெடுமதுரை கிராமத்தினர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தடுப்பு அமைத்து, தண்ணீரை கொம்பாடி கிராம கண்மாய்க்கு வருவதை தடுத்தனர். அரசு அலுவலர்கள் மூலம் இரு கிராமங்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், நிலையூர் கம்பக்குடி கால்வாய் வழியாக கொம்பாடி மேல கண்மாய், கீழ கண்மாய்க்கு தண்ணீர் தர பேச்சுவார்த்தை நடைபெற்றது. கொம்பாடி கிராமத்திற்கு தண்ணீர் தருவதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர்.ஆனால், தற்போது வரை கொம்பாடி கண்மாய்க்கு தண்ணீர் அனுப்பவில்லை. எனவே நிலையூர் கம்பிக்குடி வாய்க்கால் வழியாக கொம்பாடி மேல கண்மாய், கீழ கண்மாய்க்கு தண்ணீர் தர அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இன்று, இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

வி செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்