)மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசுபெற்ற கண்ணனுக்கு பரிசு வழங்க இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.அந்த மனுவில், “இந்த வருடம் கரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஜல்லிக்கட்டு போட்டியானது மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கு உடற்தகுதி, கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இப்போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள், 900 காளைகள் பங்குபெற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் 75 வீரர்கள் வீதம் களம் இறக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.இப்போட்டியில், அதிகப்படியான மாடு பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது, 2ஆவது பரிசாக இரண்டு பசு மாடுகள் வழங்கப்பட்டது, 3ஆவது பரிசாக தங்க நாணயம் வழங்கப்பட்டது. இதில், 33ஆவது பனியன் அணிந்த கண்ணன் என்பவர் முதல் பரிசினைப் பெற்றார். ஆனால், 33ஆவது பனியன் அணிந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் முதல் சுற்றில் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.அவரது 33ஆவது எண் பனியனை சட்டவிரோதமாக கரோனா தொற்று பரிசோதனை செய்யாமல் கண்ணன் என்பவர் அணிந்துகொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். மேலும் கண்ணன் என்பவருக்கு 2021 ஜனவரி 30ஆம் தேதி முதல் பரிசான காரினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார். நடைபெற்ற முறைகேடு குறித்து பல்வேறு அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை.எனவே ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முதல் பரிசினை வழங்க இடைக்காலத் தடைவிதிக்கவும், முறையான விசாரணை மேற்கொண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் பரிசினை வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் பனியன்கள் மாற்றி இரண்டு பேர் இணைந்து 12 காளைகள் பிடிக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசுபெற்ற கண்ணனுக்குப் பரிசு வழங்க இடைக்காலத் தடைவிதித்தும், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது…. (2)தற்கொலை செய்திகள் வழக்கு: பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா பதிலளிக்க உத்தரவுமதுரை: தற்கொலை செய்திகளை வெளியிடுவது தொடர்பான வழிகாட்டல்கள் அமல்படுத்தப்பட்டது குறித்து பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர், ட்ராய் (TRAI), பேஸ்புக்கின் மேலாண் இயக்குநர், யூ-ட்யூப் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த முகமது ரஸ்வி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 15.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், தமிழ்நாட்டில் 60 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.நீட் தேர்வு எழுத அச்சம் கொண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் தொடர்பான செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிடுவதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நம்பிக்கையைக் குறைப்பதோடு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்ற மனநிலையும் உருவாக்கப்படுகிறது.மதுரை, தர்மபுரி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் தொடர்பான செய்திகளைச் சில செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டன. அதுபோன்ற தற்கொலை செய்திகள், படங்கள், தற்கொலை செய்த முறை போன்றவற்றை ஒளிபரப்பக் கூடாது, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஏற்கனவே தற்கொலை செய்திகளைத் தலைப்புச் செய்திகளாகவோ, முதன்மைச் செய்திகளாகவோ, உணர்ச்சிப்பூர்வமாகவோ, காண்பிக்கக் கூடாது என வழிகாட்டல்களைப் பிறப்பித்துள்ளது.சமூக ஊடகங்கள் குறிப்பாக பேஸ்புக், யூ-ட்யூப் போன்றவையும் மன உளைச்சலை ஏற்படுத்தும்விதமாக எதிர்மறையான நோக்கில் செய்திகளை வெளியிடுகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.ஆகவே, தற்கொலை தொடர்பான செய்திகளை தலைப்பு, முதன்மைச் செய்திகளாகவோ, உணர்ச்சிப்பூர்வமாகவோ காண்பிக்கக் கூடாது என்பது தொடர்பான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றவும், அவற்றில் மீறும் ஊடகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டல்கள் அமல்படுத்தப்பட்டது. அதனை மீறியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர், TRAI, பேஸ்புக்கின் மேலாண் இயக்குநர், யூ-ட்யூப் இயக்குநர் ஆகியோர் பதில்மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்…(3)நீங்க வேணும்னா ஊசி போடாதீங்க: கரோனா தடுப்பூசிகளுக்குத் தடைவிதிக்க முடியாது…!மதுரை: கரோனாவிற்கான கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில், தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜனவரி 3ஆம் தேதி கோவிட் -19 தடுப்பூசிகளின், கட்டுப்பாடுடன் கூடிய அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிசீல்டு எனும் பெயரிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் பெயரிலும் தடுப்பூசிகளை விற்பனை செய்ய உள்ளன. தடுப்பூசிகள் தொடர்பாக நடைபெற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனையின், இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் அவசர அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஒருபுறம் சோதனை நடைபெறும் சூழலில் மறுபுறம் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 1,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் குறைவான அளவு. கடந்த 4ஆம் தேதி தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என, 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும்.மத்திய பிரதேசத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தீபக் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி தொடர்பான அச்சத்திலேயே உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, சீரம் நிறுவனத்தின் கோவிசீல்டு, பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் இந்தத் தடுப்பூசிகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என, மனுவில் கோரியிருந்தார்.இந்த வழக்கு இன்று (ஜனவரி 29) நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனா அவசரகால சூழ் நிலையில் இது போன்ற பொது நல மனுக்கள் ஏற்புடையது அல்ல. மனுதாரர் விரும்பாவிட்டால் போடாமல் இருந்து கொள்ளலாம். அதைவிட்டு மொத்தமாக மருந்துக்கு தடை கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து மனுதாரர் தனது மனுவை திருப்ப பெற்று கொள்வதாகக் கூறினார். பின்னர் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.