Home செய்திகள் கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்:-வைகோ..!

கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்:-வைகோ..!

by Askar

கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கு ‘சுயசார்பு பொருளாதாரத் திட்டம்’ எனும் பெயரில் மோடி அரசால் 20 இலட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

கொரேனா பேரிடரால் வாழ்விழந்து தவிக்கும் கோடானுகோடி ஏழை எளிய மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 45 கோடிக்கும் அதிகமான அமைப்புச்சாரா தொழிலாளர்கள், வேலை வாய்ப்பை இழந்துள்ள 9 கோடி பிற தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணப் பயன் அளிக்கும் மனிதநேயத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள திட்டங்களால் வேளாண்மைத் தொழிலை நம்பியுள்ள விவசாயிகள் வாழ்வில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கையும் இல்லை. கடனில் மூழ்கித் தத்தளிக்கும் விவசாயிகளை கை தூக்கி விடுவதற்கும் இந்த அரசுக்கு மனம் இல்லை.

கொரோனா நெருக்கடி காலத்தில் பா.ஜ.க. அரசு மாநில உரிமைகள் அனைத்தையும் தட்டிப் பறித்துக்கொண்டு, எல்லா அதிகாரங்களும் எங்களுக்கு என்னும் எதேச்சாதிகாரமான ஆணவ தர்பாரை நடத்திக்கொண்டு இருக்கிறது.

மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு 46,038 கோடி, வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.12,390 கோடி, தேசியப் பேரிடர் நிவாரண நிதி ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறி இருப்பது யானைப் பசிக்குச் சோளப் பொரியாகும். கடன் பெறும் திறனை உயர்த்துவதால் மாநிலங்களின் கடன் சுமைதான் அதிகரிக்கும்.

மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையைச் சந்தடி சாக்கில் முழுமையாக மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அலட்சியம் செய்துவிட்டு, அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி நிலக்கரி, தாதுவளம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், விமானம் பழுது பார்த்தல் – பராமரிப்பு, யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் விண்வெளித்துறை ஆகிய எட்டு முக்கியத் துறைகளையும் பா.ஜ.க. அரசு தனியாருக்குத் தாரை வார்க்கப் போகின்றது.

தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் இந்தியா சிகரம் தொடுவதற்கு அடித்தளமாக விளங்கிய பொதுத்துறை நிறுவனங்களை முழுக்க முழுக்க தனியார் பெரு முதலாளிகளுக்கு ஏலம் விடும் அக்கிரமத்தை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?

நிலக்கரிச் சுரங்கம், மீத்தேன் எரிவாயுத் திட்டம் ஏலம் விடப்படுவதுடன், நிலக்கரிச் சுரங்கத்தில் அரசின் முற்றுரிமை நீக்கப்பட்டு, எந்தவொரு தனியார் நிறுவனமும் ஏலம் எடுத்து, திறந்த சந்தையில் விற்கலாம் என்று நிதி அமைச்சர் கூறி உள்ளார்.

காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு இதுவரையில் திரும்பப் பெறாமல், தற்போது மேலும் இத்தகைய நாசகாரத் திட்டங்களுக்கு பொது ஏலம் விடுவோம் என்று அறிவித்து இருப்பது காவிரிப் பாசனப் பகுதிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

அணுசக்தித்துறை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறை போன்றவற்றில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகளைச் செய்தியாளர்களைக் கூட்டி வெளியிட்டதன் மூலம் பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் துச்சமாகக் கருதி வருவதை உறுதி செய்து இருக்கிறது.

கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை -8 18.05.2020

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!