இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து தினமும் 5 முதல் 10 டன் வரை குப்பை சேகரமாகிறது . குப்பையை அப்புறப்படுத்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வளம் ஈர்ப்பு பூங்கா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் ரூ. 30 லட்சத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு மேலாண்மை விளை நிலம் ஏற்படுத்தப்பட்டது. திடக்கழிவு மேலாண்மையில் மக்கும் மற்றும் மக்காத குப்பையை தனியாக பிரிக்கப்படுகிறது. குப்பையில் இருந்து இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைந்த விலையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விளை நிலத்தில் தென்னை, வாழை, பூசணி, கொத்தவரை புடலங்காய் வெண்டை உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மற்றும் துளசி வல்லாரை, ஆடுதொடா, ஓமம் போன்ற மூலிகைச் செடிகளும் வளர்க்கப்படுகிறது. இவற்றிற்கு அங்கு தயாராகும் இயற்கை மற்றும் மண்புழு உரம் பயன்படுத்துகிறது. இதனால் பயிர்கள் நன்கு செழிப்பாக வளர்ந்துள்ளன. இயற்கையில் விளையும் காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர் . மேலும் எஞ்சிய இயற்கை மற்றும் மண்புழு உரம் விற்கப்படுகிறது. இயற்கை உரம் கிலோ ரூ.5, மண்புழு உரம் கிலோ ரூ. 10க்கும் விற்கப்படுகிறது. இயற்கை விவசாயம் மூலம் மண்டபம் பேரூராட்சி ஏனைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.
இது குறித்து மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் சீ.மஞ்சுநாத் கூறுகையில் மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோரது அறிவுறுத்தல் படி பிளாஸ்டிக் பொருட்களில் குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றிட வளம் மீட்பு பூங்கா திட்டம் அமைத்தோம். தற்போது இயற்கை விவசாயம், உரம் போன்றவற்றின் மூலம் அப்பகுதியே சுற்றுச்சூழல் பூங்காவாக மாறி உள்ளது. உரங்களை குறைந்த விலைக்கு விற்கிறோம் . காய்கறி மற்றும் உரம் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது. இப்பூங்காவை மாவட்டத்தில் உள்ள இதர உள்ளாட்சி அமைப்பினரும் பார்வையிட்டுச் செல்கின்றனர் என்றார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.