நேற்றை தினம் கொரோனா தொற்று பாதித்து இறந்த மருத்துவர் டாக்டர். சைமன் ஹெர்க்யூல்ஸ் அவர்களின் உடலை அடக்கம் செய்யவிடாமல் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பகுதி மக்கள் ஆர்பாட்டம் செய்துள்ளனர்.
இறந்த உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து உடைத்து அந்த வாகன ஓட்டுநரை தாக்கி வெட்டுக்காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
இது தான் இறந்த மருத்துவருக்கு செலுத்தும் மரியாதையா? தனது வாழ்க்கையில் எத்தனை இன்னுயிர்களின் நீட்சிக்கு அவர் உதவியிருப்பார்? எத்தனை தியாகங்களை இந்த தொழிலுக்காக செய்திருப்பார்?
எதற்காக இவ்வாறு நடக்கிறது? இதுவரை 15 மரணங்கள் கொரோனா பாதிக்கப்பட்டு நிகழ்ந்திருக்க
மருத்துவர்களின் மரணத்தில் மட்டும் இவ்வாறு மக்கள் மாக்களாய் நடந்துகொள்வதேன்???
அரசு உடனே இரும்புக்கரம் கொண்டு இந்த மூடர்களை ஒடுக்க வேண்டும் தேசப்பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததாக கருதி அவர்களுக்கு உடனே தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
இறந்த உடல்களை புதைப்பதாலோ எரிப்பதாலோ கொரோனா தொற்று பரவுவதில்லை என்பதையும் அரசு தினசரி செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் தெளிவு படுத்திட வேண்டும். கூடவே இறுதிச்சடங்கு நடக்கும் இடங்களில் கூட போராட்டம் அல்லது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட வேண்டும்.
இவை எதுவும் முடியாத சூழ்நிலையில் மருத்துவர்களுக்கென மருத்துவ துறை ஊழியர்களுக்கென பிரத்யேகமாக சமத்துவ தகன மேடை/மைய வாடி/ அடக்கஸ்தலத்தை மாவட்டம் தோறும் ஊருக்கு வெளியே மனித ரூபத்தில் வாழும் மாக்கள் இல்லாத பகுதிகளில் ஏற்படுத்தி ஊருக்காக உழைத்தவர்களுக்கு ஊருக்கு வெளியேவாவது இடம் ஒதுக்க வேண்டிய நிலை வந்து விடும் போலத்தோன்றுகிறது.
ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று தெரியவில்லை?
எங்களுக்கும் குடும்பம் மக்கள் இருக்கிறார்கள்
அரசு தான் எங்களைக் காக்க வேண்டும்.
சென்ற வாரம் தான் புது டில்லியில் மருத்துவர்கள் வீட்டை விட்டு காலி செய்ய சொன்னச் சின்ன நிகழ்வு நடந்தது அப்போதே நான் கூறினேன்.
தமிழக மக்கள் மேன்மையானவர்கள் அவர்களுக்கென தனி மாண்பு உண்டெனக் கூறினேன்.
நான் இப்போது அதில் இருந்தும் வெட்கித்தலைகுனிந்து பின்வாங்குகிறேன்
நன்றி சமுதாயமே… சிறப்பாக நடந்து கொள்கிறீர்கள்!
Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை
You must be logged in to post a comment.